Urban News

  • Increase font size
  • Default font size
  • Decrease font size

13 கட்டடங்களில் இணைப்பு 'கட்'நகராட்சி அதிகாரிகள் நடவடிக்கை

Print PDF

தினமலர் 29.04.2010

13 கட்டடங்களில் இணைப்பு 'கட்'நகராட்சி அதிகாரிகள் நடவடிக்கை

கூடலூர்: உயர்நீதிமன்ற உத்தரவின் படி, கூடலூர் பகுதியில் விதிமீறி கட்டப்பட்ட 13 கட்டடங்களுக்கான நீர் இணைப்பை நகராட்சி அதிகாரிகள் துண்டித்தனர்.நீலகிரி மாவட்டத்தில் ஊட்டி, குன்னூர், கூடலூர், கோத்தகிரி தாலுகாக்களில் அனுமதியின்றியும், விதிமீறியும் 1,337 கட்டடங்கள் கட்டப்பட்டுள்ளன; கட்டடங்களின் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என, சென்னை உயர்நீதிமன்றத்தில் பொதுநல வழக்கு தொடரப்பட்டது. வழக்கை விசாரித்த உயர்நீதிமன்ற நீதிபதிகள் அடங்கிய பெஞ்ச், 'அனுமதியில்லாமல் கட்டப்பட்ட கட்டடங்களை இடிக்க வேண்டும்' என உத்தரவிட்டது.சென்னை உயர்நீதிமன்றத்தில் நடந்த கட்டடங்கள் தொடர்பான விசாரணையில், அனுமதியின்றியும், விதிமீறியும் கட்டப்பட்ட கட்டடங்களில், வழக்கு நிலுவையில் உள்ளதை தவிர, மீதமுள்ள கட்டடங்களின் பட்டியலை தயாரித்து, இதற்கான மின் இணைப்பு மற்றும் நீர் இணைப்பை துண்டிக்க வேண்டும் என, நீதிபதிகள் தர்மாராவ், சசிதரன் அடங்கிய டிவிஷன் பெஞ்ச் உத்தரவிட்டது. ஊட்டியில் பணிகள் நடந்து வரும் நிலையில், கூடலூர் பகுதியில் விதிமீறி கட்டப்பட்ட 13 கட்டடங்களுக்கு நீர் இணைப்பு துண்டிக்கும் பணியை, கூடலூர் நகராட்சி ஊழியர்கள், இரு நாட்களுக்கு முன் நடத்தினர்.

கூடலூர் நகராட்சி பொறியாளர் பாஸ்கரன் தலைமையில், நகராட்சி அதிகாரிகள், ஊழியர்கள் பணியை மேற்கொண்டனர். ராஜகோபாலபுரத்தில் உள்ள ஒரு தனியார் விடுதியின் நீர் இணைப்பை துண்டிக்கும் பணியை மேற்கொண்ட போது, உரிமையாளர்களுக்கும், நகராட்சி அதிகாரிகளுக்கும் வாக்குவாதம் ஏற்பட்டது; பின், இணைப்பு துண்டிக்கப்பட்டது.

Last Updated on Thursday, 29 April 2010 06:26