தினமலர் 29.04.2010
செஞ்சி பேரூராட்சி கடைகள் ரூ.38 லட்சத்திற்கு பொதுஏலம்
செஞ்சி : செஞ்சி பேரூராட்சி பஸ் நிலைய விரிவாக்க கடைகளுக்கு நடந்த ஏலத்தில் ஓராண்டு வாடகையாக 38.59 லட்சம் ரூபாய் ஏலம் போனது.செஞ்சி பஸ்நிலைய விரிவாக்க திட்டத்தின் கீழ் 55 லட்சம் ரூபாய் திட்ட மதிப்பில் புதிதாக 21 கடைகளை கட்டியுள்ளனர். இந்த கடைகளில் ஒரு ஆண்டுக்கு கடை நடத்த நேற்று ஏலம் விடப் பட்டது. செஞ்சி பேரூராட்சி செயல் அலுவலர் தமிழ்ச்செல்வன் முன்னிலையில் பேரூராட்சி தலைவர் மஸ்தான் ஏலத்தை நடத்தினார். ஆதிதிராவிடர்களுக்கு ஒதுக் கப்பட்ட 3 கடைகள் உட் பட நேற்று ஏலம் நடந்த 21 கடைகளுக்கும் ஏலம் கேட்க 118 பேர் 60.50 லட்சம் ரூபாயை டெபாசிட் தொகையாக கட்டியிருந்தனர். இதில் முதல் கடை அதிகபட்சமாக 2.81 லட்சம் ரூபாய்க்கும், குறைந்த பட்சமாக 13ம் எண் கடை 1.54 லட்சத்திற்கும் ஏலம் போனது.மொத்தமுள்ள 21 கடைகளும் ஓராண்டு வாடகையாக 38.59 லட்சம் ரூபாய்க்கு ஏலம் போனது. பஸ் நிலையம் விரிவாக்கம் செய்யப்பட்டுள்ள இடத்தில் முன்பு காய்கறி கடை நடத்தி வந்த 14 நபர்களுக்கு ஐகோர்ட் உத்தரவுப்படி டெபாசிட் தொகையில் 50 சதவீதம் சலுகை வழங்கப்பட்டிருந்தது