Urban News

  • Increase font size
  • Default font size
  • Decrease font size

மாற்று இடம் தேர்வானதும் நீர்நிலை ஆக்கிரமிப்பு அகற்றம்: கோவை மாவட்ட நிர்வாகம் முடிவு

Print PDF

தினமலர் 30.04.2010

மாற்று இடம் தேர்வானதும் நீர்நிலை ஆக்கிரமிப்பு அகற்றம்: கோவை மாவட்ட நிர்வாகம் முடிவு

கோவை:'மாற்று இடம் தேர்வானதும், நீர்நிலைகளில் உள்ள ஆக்கிரமிப்புகள் அனைத்தையும் அகற்றுவது' என்று, கோவை மாவட்ட நிர்வாகம் முடிவு செய்துள்ளது. கோவை மாவட்ட ஆக்கிரமிப்பு அகற்றும் குழு கூட்டம், மாவட்ட வருவாய் அலுவலர் சண்முகசுந்தரம் தலைமையில் நேற்று நடந்தது. கூட்டத்தில், துறை வாரியாக ஆக்கிரமிப்பு விபரங்களும், அதன் மீது எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் குறித்தும் தகவல் தெரிவிக்கப்பட்டது.செம்மொழி மாநாட்டுக்கு முன்பாக, சிறிய ஆக்கிரமிப்பு அனைத்தையும் அகற்றவும், அதன்பின் பெரிய ஆக்கிரமிப்புகளை அகற்றவும் நடவடிக்கை எடுக்க வேண்டுமென்று அனைத்துத்துறை அலுவலர்களுக்கும் அறிவுறுத்தப்பட்டது. கோவை மாநகராட்சி பகுதியிலுள்ள ஆக்கிரமிப்புக் குடிசைகள் பற்றி அதிகாரிகள் விளக்கினர்.அவற்றில் எத்தனை பேருக்கு புதிதாக மாற்று குடியிருப்புகள் தரப்படுகிறது, மீதம் எவ்வளவு பேருக்கு புதிய திட்டத்தில் மாற்று வீடுகள் வழங்குவது என்ற விபரங்களை மாவட்ட வருவாய் அலுவலர் கேட்டறிந்தார். நத்தம் புறம்போக்கு, நீர் நிலை ஆக்கிரமிப்புகள் குறித்த தகவல்களையும் அதிகாரிகள் தெரிவித்தனர்.

நாகை-கூடலூர்-மைசூர் தேசிய நெடுஞ்சாலை விரிவாக்கத்துக்காக சூலூர் பகுதியில் அகற்றப்பட வேண்டிய ஆக்கிரமிப்பு பற்றி விவாதிக்கப்பட்டது. தேசிய நெடுஞ்சாலைக்குத் தேவையான இடங்களை விரைவாக அளந்து கொடுத்து, அனைத்து ஆக்கிரமிப்புகளையும் அகற்ற உடனடி நடவடிக்கை எடுக்க டி.ஆர்.., உத்தரவிட்டார்.ஆனைமலை புலிகள் காப்பகத்துக்கு உட்பட்ட வனப்பகுதிகளில் அகற்றப்பட வேண்டிய ஆக்கிரமிப்பு வீடுகளின் பட்டியலை டி.ஆர்.., கேட்டார். ஆனால், ஆனைமலை புலிகள் காப்பக அதிகாரிகள் யாரும் வராததால், அது குறித்து தகவலை கேட்டுப் பெறுமாறு வனத்துறை அதிகாரிகளை அவர் கேட்டுக் கொண்டார்.

கோவை மாவட்டத்தில் குளங்களில் உள்ள ஆக்கிரமிப்புகள், நீண்ட காலமாக அகற்றப்படாமல் இருப்பதாக பொதுப்பணித்துறை உதவி கோட்ட அலுவலர் திருச்செந்தில்வேலவன் தெரிவித்தார்.நொய்யல் பாயும் வெள்ளலூர் ராஜவாய்க்கால் குளம் கணிசமான அளவுக்கு ஆக்கிரமிக்கப்பட்டிருப்பதால் வெள்ளலூர் குளம் நிரம்பாமல், விவசாயிகள் தொடர்ந்து புகார் கூறி வருவதாக அவர் குறிப்பிட்டார்.அங்கு மொத்தம் 462 வீடுகள் இருப்பதாகவும் அவர் தகவல் தெரிவித்தார். அவர்களுக்கான மாற்று இடம் தேர்வு செய்யப்பட்டு இருப்பதாகவும், அந்த இடத்தை சமப்படுத்திக் கொடுத்தால் மேலும் பலரை அங்கு குடியமர்த்தலாம் என்று கோவை தெற்கு தாசில்தார் சுப்பிரமணியம் தெரிவித்தார்.

அது குறித்த விபரங்களைக் கேட்ட டி.ஆர்.., ''நீர் நிலை ஆக்கிரமிப்புகளை அகற்றியே தீர வேண்டும்; அதில் மாற்றுக் கருத்தே இல்லை. அதற்கு முன்பாக அவர்களுக்கான மாற்று இடத்தை நாம் உடனடியாக தேர்வு செய்ய வேண்டும். அதன் பின், இந்த ஆக்கிரமிப்பு அனைத்தையும் அகற்றலாம்,'' என்றார்.கரும்புக்கடையில் ஆக்கிரமிப்பு அகற்றுவதில் பாரபட்சம் நடந்திருப்பதாக வந்த புகார் பற்றி அதிகாரிகள் விவாதித்தனர்.

உக்கடத்திலிருந்து போத்தனூர் பிரிவு வரை, எவ்வளவு இடம் தேவை என தேசிய நெடுஞ்சாலைத்துறையினர் முறைப்படி கடிதம் கொடுத்தால், உடனே அளவீடு செய்வதாக தெற்கு தாசில்தார் தெரிவித்தார்.'நொய்யல் வாய்க்கால்களை அளந்த பின்னும், அங்கு கற்கள் நடாததால் மீண்டும் ஆக்கிரமிக்கப்படும் அபாயம் உள்ளது' என்று பொதுப்பணித்துறை உதவி கோட்டப் பொறியாளர் தெரிவித்தார். அதற்கு 51 லட்ச ரூபாய் செலவாகும் என்பதைக் கேட்டு அதிர்ச்சியடைந்த டி.ஆர்.., 'அவ்வளவு செலவாகுமா' என்று கேட்டார்.பொதுப்பணித்துறை அதிகாரி, 'பொதுப்பணித்துறைக்கு குறிப்பிட்ட மாதிரி வடிவில் தான் கல் வைக்க வேண்டும். அத்துடன், கொஞ்சம் ஆக்கிரமிப்பும் அகற்ற வேண்டியுள்ளது,'' என்றார். அந்தத் தொகையை விரைவாகப் பெற நடவடிக்கை எடுப்பதாக டி.ஆர்.., சண்முகசுந்தரம் தெரிவித்தார்.

Last Updated on Friday, 30 April 2010 06:04