தினமணி 30.04.2010
குடிநீரை மோட்டார் வைத்து உறிஞ்சினால் கடும் நடவடிக்கை
திருத்தணி, ஏப். 29: திருத்தணி நகரில் மோட்டார் வைத்து குடிநீரை உறிஞ்சுபவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்று நகராட்சி ஆணையர் செண்பகராஜ் தெரிவித்துள்ளார்.
இது குறித்து அவர் வெளியிட்டுள்ள செய்தி:
திருத்தணி நகரின் அனைத்து பகுதிகளிலும் சீரான குடிநீர் விநியோகம் செய்ய பல்வேறு விதமான தீவிர நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. தற்போது திருத்தணியில் உள்ள அனைத்து வார்டுகளிலும் குடிநீர் பிரச்னையைத் தீர்க்க குடிநீர் தொட்டிகள் அமைத்து குடிநீர் வினியோகம் செய்யப்பட்டு வருகிறது.
மேலும் அனைத்து பகுதிகளிலும் சீரான குடிநீர் வழங்கிட, நகராட்சி செயற்பொறியாளர் தலைமையில் உதவி செயற்பொறியாளர், உதவிப் பொறியாளர், பிட்டர், குழாய் ஆய்வாளர்கள் அடங்கிய குழு அமைக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் திருத்தணி நகரின் பல இடங்களில் குடிநீர் இணைப்புகளில் மோட்டார் பொருத்தி குடிநீரை உறிஞ்சுவதாக புகார்கள் வருகின்றன. அவ்வாறு செயல்படுபவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும். மேலும் அவர்களது மோட்டார் பறிமுதல் செய்யப்பட்டு, குடிநீர் இணைப்பு துண்டிக்கப்படுவதுடன் ரூ.5 ஆயிரம் அபராதம் விதிக்கப்படும்.
அத்துடன் பறிமுதல் செய்யப்பட்ட மோட்டார் திரும்ப வழங்கப்படமாட்டாது. மேலும் மூன்று ஆண்டு குடிநீர் வரியையும் அபராதமாக செலுத்த நேரிடும். அபராதம் அனைத்தும் செலுத்திய பிறகு மீண்டும் குடிநீர் இணைப்பு வழங்க ரூபாய் ஆயிரம் வசூலிக்கப்படும். எனவே பொதுமக்கள் யாரும் மோட்டார் வைத்து குடிநீரை உறிஞ்ச வேண்டாம் எனவும் திருத்தணி நகராட்சி ஆணையர் கேட்டுக் கொண்டுள்ளார்.