தினமலர் 05.05.2010
கொல்லிமலை தாவரவியல் பூங்கா படகு இல்லம் மேம்பாட்டு பணி: நாமக்கல் கலெக்டர் நேரடி ஆய்வு
நாமக்கல்: கொல்லிலையில் படகு இல்லம், தாவரவியல் பூங்காவில் மேற்கொள்ளப்படும் மேம்பாட்டு பணிகளை, மாவட்ட கலெக்டர் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார். நாமக்கல் மாவட்டம் கொல்லிமலையில் சுற்றுலாப் பயணிகளை கவரும் விதத்தில் பல்வேறு மேம்பாட்டு பணிகள் மேற்கொள்ளப்படுகிறது. அந்த பணிகளை கலெக்டர் சகாயம் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார். அப்போது கொல்லிமலை படகு இல்லத்தை மேம்படுத்துவது, விரிவுபடுத்துவது மற்றும் ஆக்கிரமிப்புகளை அகற்றுவது, படகு இல்லத்தின் எல்லை நிர்ணயம் செய்தல் மற்றும் படகுகள் இயக்குவதற்கான சாத்தியக்கூறுகள் குறித்தும் அதிகாரிகளுடன் ஆலோசனை செய்தார். படகு இல்ல பூங்காவை அழகு படுத்த மேற்கொள்ள வேண்டிய மேம்பாட்டு பணிகள் குறித்தும் ஆலோசனை நடந்தது. இதுகுறித்து கலெக்டர் சகாயம் கூறியதாவது:படகு இல்லத்தில் 43 லட்சம் ரூபாய் மதிப்பில் பூங்கா அமைக்கும் பணி நடந்து வருகிறது. பூங்காவில் புல்தரை அமைத்தல், அலங்காரச்செடி நடுதல், நடைபாதை, பூங்காவை சுற்றி வேலி அமைத்தல், மரக்குடில், தாமரைக்குளம் அமைத்து அன்னப்பறவை விடுதல் போன்ற பணிகள் முடியும் தருவாயில் உள்ளது. அதேபோல் தாவரவியல் பூங்காவில் 85 லட்சம் ரூபாய் மதிப்பில் புல்தரை அமைத்தல், நடைபாதை, சிலைகள், ரோஜா தோட்டம் போன்ற பல்வேறு மேம்பாட்டு பணி நடந்து வருகிறது. இவ்வாறு அவர் தெரிவித்தார். ஆய்வின்போது, மாவட்ட வன அலுவலர் ஆஷிஸ் வஸ்தவா, ஆர்.டி.ஓ., ராஜன், செயற்பொறியாளர் அறிவழகன், உதவி செயற்பொறியாளர் நம்பிராஜன், பி.டி.ஓ.,க்கள் உட்பட பலர் பங்கேற்றனர்.