தினகரன் 21.10.2010
தூத்துக்குடி மாநகராட்சி நிலத்தை ரயில்வேக்கு வழங்க முடிவு அவசர கூட்டத்தில் தீர்மானம்
தூத்துக்குடி, அக்.21: தூத்துக்குடி மாநகராட்சிக்கு சொந்தமான 3.24 ஏக்கர் நிலத்தை ரயில்வேக்கு கொடுத்து, 3.92 ஏக்கர் நிலத்தை பெற்றுக்கொள்வது என மாநகராட்சி அவரச கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
தூத்துக்குடி மாநகராட்சி அவசர கூட்டம் மேயர் கஸ்தூரிதங்கம் தலைமையில் நடந்தது. துணை மேயர் தொம்மைஏசுவடியான், கமிஷனர் குபேந்திரன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
கூட்டத்தில் தீர்மானங்கள் வாசிக்க துவங்கியதும், ‘ரயில்வேக்கு மாநகராட்சி நிலம் என்ன அடிப்படையில் கொடுக்கப்படுகிறது’ என கவுன்சிலர் அன்புலிங்கம் கேள்வி எழுப்பினார்.
இதற்கு பதிலளித்த மேயர் கஸ்தூரிதங்கம் தூத்துக்குடி புதிய பஸ்நிலையம் அருகே உள்ள மாநகராட்சிக்கு சொந்தமான 3241.5 சதுர மீட்டர் பரப்பளவுள்ள இடம் ரயில்வேக்கு வழங்கப்படுகிறது. அதற்கு இணையாக ஆண்டாள் தெருவில் உள்ள ரயில்வேக்கு சொந்தமான 3923.5 சதுர மீட்டர் அளவிலான நிலம் பெறப்படுகிறது என்றார்.
தூத்துக்குடி புதிய மாநகராட்சி கட்டிடத்திற்கு அண்ணா நூற்றாண்டு விழா கட்டிடம் என் பெயர் சூட்டப்பட்டுள்ளது. இதனை அஜெண்டாவில் பதிவு செய்ய வேண்டும் என கவுன்சிலர்கள் கோரிக்கை விடுத்தனர். மேலும் கவுன்சிலர் வீரபாகு மாநகராட்சியில் எந்த பயன்பாட்டின் போது அண்ணா நூற்றாண்டு கட்டிடம் என குறிப்பிடப்படவில்லை. அதனை குறிப்பிட்டு பயன்படுத்த வேண்டும் என்றார்.
தொடர்ந்து திமுக கவுன்சிலர் மாடசாமி தூத்துக்குடி மையவாடியில் இரவு நேரங்களில் மின்சார வசதி இல்லை என்பதை பலமுறை சுட்டிக்காட்டிவிட்டேன். இது குறித்து இதுவரை நடவடிக்கை எடுக்கப்படவில்லை என்று புகார் தெரிவித்தார். இதனையடுத்து 5 முக்கிய தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. அத்துடன் கூட்டம் நிறைவடைந்ததாக மேயர் அறிவித்தார்.