தினமலர் 18.10.2010
பாதாள சாக்கடை சுத்திகரிப்பு நிலையம்: நகராட்சி தலைவர் நேரில் ஆய்வு
பெரம்பலூர்: பெரம்பலூர் நகராட்சியில் 10 லட்சம் ரூபாய் மதிப்பில் கட்டப்பட்டு வரும் சுத்திகரிப்பு நிலைய கட்டுமான பணிகளை நகராட்சி தலைவர் ராஜா, நகராட்சி கமிஷனர் சுரேந்திரஷா ஆகியோர் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தனர்.ஆய்வின்போது, தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரிய உதவி நிர்வாக பொறியாளர்கள் செல்வதுரை, வெங்கடேசன், உதவி பொறியாளர்கள் சிவப்பிரகாசம், எழிலரசன் ஆகியோர் உடனிருந்தனர்.
ஆய்வுக்கு பின் தலைவர் ராஜா மற்றும் கமிஷனர் சுரேந்திரஷா ஆகியோர் நிருபர்களுக்கு அளித்த பேட்டி:
பெரம்பலூர் நகராட்சியில் 23 கோடியே 38 லட்சம் மதிப்பில் பாதாள சாக்கடை திட்டம் நிறைவேற்ற 2008ம் ஆண்டு ஜூலை 9ம் தேதி மத்திய தொலைத்தொடர்பு மற்றும் தகவல் தொழில்நுட்பத்துறை அமைச்சரால் அடிக்கல் நாட்டப்பட்டு பணிகள் ஆரம்பிக்கப்பட்டு கழிவுநீர் குழாய்கள் அமைக்கும் பணி தற்போது நடந்து வருகிறது.மொத்தமுள்ள 87 கிலோ மீட்டரில் 81 கிலோ மீட்டர் தொலைவுக்கு கழிவுநீர் குழாய்கள் அமைக்கும் பணி நிறைவு பெற்றுள்ளன. மீதியுள்ள ஆறு கிலோ மீட்டர் பணிகளும் விரைவில் முடிக்கப்பட்டு விரைவில் மக்கள் பயன்பாட்டுக்கு வர உள்ளன. மூன்று கோடியே 16 லட்சம் ரூபாயில் சுத்திகரிப்பு நிலைய பணிகள் நடப்பாண்டு மே., 7ம் தேதி ஆரம்பிக்கப்பட்டு 2012ம் ஆண்டு மே., 7ம் தேதி இப்பணி முடிக்கப்பட உள்ளன.
துறைமங்கலம் பெரிய ஏரி அருகில் பிரதான கழிவுநீர் உந்து நிலையம் 10 லட்சம் ரூபாய் மதிப்பில் அமைக்கப்பட்டு வருகின்றன. அரணாரை, விளாமுத்தூர் ஆகிய இரண்டு இடங்களில் உந்து நிலைய பணிகள் முடிக்கப்பட்டுள்ளன. அசோக்நகர் கலெக்டர் ஆபீஸ் ரோடு, மூன்று ரோடு, நான்கு ரோடு, எளம்பலூர் ரோடு ஆகிய விடுபட்ட பகுதிகளுக்கு 2 கோடி ரூபாயில் இத்திட்டத்தை நிறைவேற்ற அரசுக்கு கருத்துரு அனுப்பப்பட்டுள்ளது. இத்திட்டத்தின்கீழ் 10 ஆயிரத்து 169 வீடுகளுக்கு பாதாள சாக்கடை இணைப்பு வழங்கப்படும்.இவ்வாறு அவர்கள் கூறினர்.