Urban News

  • Increase font size
  • Default font size
  • Decrease font size
Nagara Seithigal - Municipal Administration

காந்தி ஜெயந்தி தினத்தில் ஆடு,மாடு வெட்டினால் கடும் நடவடிக்கை நகர்மன்ற கூட்டத்தில் முடிவு

Print PDF

தினகரன் 29.09.2010

காந்தி ஜெயந்தி தினத்தில் ஆடு,மாடு வெட்டினால் கடும் நடவடிக்கை நகர்மன்ற கூட்டத்தில் முடிவு

மார்த்தாண்டம் செப்.29: குழித்துறை நகராட்சி சாதாரண கூட்டம் நேற்று நகர்மன்ற தலைவர் பொன். ஆசைத்தம்பி தலைமையில் நடந்தது. ஆணையர் சர்தார் முன்னிலை வகித்தார். கூட்டத்தில் இன்ஜினியர் ரமேஷ், சுகாதார அதிகாரி கிறிஸ்துதாஸ், அலுவலர் ஜெயன், மற்றும் கவுன்சிலர்கள் கலந்து கொண்டனர். கூட்டத்தில் நடந்த விவாதம் வருமாறு:

ஜோசப் (மார்ச்சிஸ்ட்):

குழித்துறை நகராட்சி மக்களுக்கு தமிழக அரசின் இலவச கலர் டிவி,கேஸ் கிடைக்குமா? கிடைக்காதா? எப்போது கிடைக்கும்?

பொன்.ஆசைத்தம்பி:

விரைவில் வழங்கப்படும்.

யூஜின் (துணைத் தலைவர்):

அக்டோபர் 2ம் தேதி காந்தி பிறந்தநாளையொட்டி ஆடு, மாடு வெட்டக் கூடாது என்று விதிமுறை உள்ளது. கடந்த ஆண்டு விதிமுறை யை மீறி குழித்துறை நகராட்சி மார்க்கெட், மற்றும் பல இடங்களில் ஆடு மாடு வெட்டப் பட்டது. இதற்கு என்ன நடவடிக்கை எடுக்கப் பட்டது. வரும் காந்தி ஜெயந்தி விழாவின் போது வெட்ட அனுமதிக்க கூடாது.

இன்ஜினியர் ரமேஷ்:

இது குறித்து இறைச்சி வியாபாரிகளுக்கு நோட்டீஸ் அனுப்பப் பட்டுள்ளது.

ரத்தினமணி (பா.):

நகராட்சி அலுவலகம் முன்பே இறைச்சி வெட்டப் படுகிறது. அதற்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளதா?

கிறிஸ்துதாஸ் (சுகாதார அதிகாரி):

அனுமதி இல்லை. இனி வெட்டினால் கடும் நடவடிக்கை எடுக்கப் படும்.

சகாதேவன்( மார்க்சிஸ்ட்):

நகராட்சிக்கு சொந்தமான கடைகள் ஏலம் விடப் பட்ட நிலையில் பூட்டி கிடக்கின்றன. இதனால் நகராட்சிக்கு வருவாய் இழப்பு ஏற் பட்டுள்ளது. இது மட்டுமல்லாமல் தொழில் வரியும் பாக்கி உள்ளது. இதை வசூலிக்க வேண்டும்.

இன்ஜினியர்:

பூட்டப் பட்டுள்ள கடைகளுக்கு மறு டெண்டர் விட பரிசீலிக்கப் படும்.

மோசஸ் சுதிர்(மார்க்சிஸ்ட்):

குழித்துறையில் பஸ் நிலையம் அமைக்கும் பணி என்ன ஆனது?

இன்ஜினியர் :

நிலம் அடையாளம் செய்ய டிஆர்ஓவுக்கு கடிதம் கொடுக்கப் பட்டுள்ளது

யூஜின்:

பழைய தியேட்டர் சந்திப்பில் உள்ள பிரதான ஓடை அடைப்பை நகராட்சி சரிசெய்யாமல் உள்ளது. இதனால் மழை காலங்களில் சாலையில் தண்ணீர் தேங்கி குளம் போல் உள்ளது. மேலும் கடைகளுக்குள்ளும் தண்ணீர் புகுந்து விடுவதால் வியாபாரிகள் பாதிக்க பட்டுள்ளனர்.

சகாதேவன்:

கழிவுநீர் ஓடை ஆக்கிரமிக்கப் பட்டு இருந்தால் அதை மீட்க வேண்டும். பட்டா நிலமா? புறம்போக்கு நிலமா? என்பதை கண்டு பிடிக்க வேண்டும்.

இன்ஜினியர் :

இப்பகுதியில் கலெக்டர் நடத்திய ஆய்வின் போது அவரது பார்வைக்கு இந்தபிரச்னை கொண்டு செல்லப் பட்டுள்ளது. ஒரு வாரத்தில் ஓடை சரிசெய்யப் படும்.

சேகர் (அதிமுக):

எனது வார்டுக்கு உள்பட்ட குளத்தில் 3 ஆண்டாக பக்க சுவர் கட்டப் படாமல் உள்ளது. தெருவிளக்குகளும் எரியாமல் உள்ளன. இதனால் திருட்டு அதிகரித்து உள்ளது. எனவே நகராட்சியை கண்டித்து நான் வெளி நடப்பு செய்கிறேன்.இவ்வாறு கூறிவிட்டு அவர் வெளிநடப்பு செய்தார்.

பின்னர் பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப் பட்டன. குழித்துறை நகராட்சி கூட்டம் தலைவர் பொன்.ஆசைதம்பி தலைமையில் நடந்தது.

 

மேலவாசல் குடியிருப்பில் பன்றி வளர்க்க மாநகராட்சி தடை

Print PDF

தினகரன் 29.09.2010

மேலவாசல் குடியிருப்பில் பன்றி வளர்க்க மாநகராட்சி தடை

மதுரை, செப். 29: மதுரை மேலவாசலில் கட்டப்பட்டுள்ள புதிய குடியிருப்பு பகுதியில் பன்றி, மாடு வளர்க்க மாநகராட்சி தடை விதித்துள்ளது. குடிசை மாற்று வாரியம் மூலம் மதுரை மேலவாசலில் 480 வீடுகளுடன் அடுக்குமாடி குடியிருப்பு கட்டி முடிக்கப்பட்டுள்ளது.

வீடுகளை மேயர் தேன்மொழி, ஆணையாளர் செபாஸ்டின் ஆய்வு நடத்தி கூறியதாவது: மாநகராட்சி துப்புரவு பணியாளருக்காக இந்த குடியிருப்பு கட்டப்பட்டுள்ளது. குடிநீர், சாலை உள்ளிட்ட அனைத்து அடிப்படை வசதிகளும் செய்யப்பட்டுள்ளன. புதிய குடியிருப்பை அக்டோபர் 3ல் மத்திய அமைச்சர் மு..அழகிரி திறக்கிறார்.

ஏற்கனவே இங்கு குடியிருந்தவர்களுக்கு மட்டும் புதிய வீடுகள் ஒதுக்கப்படும். இங்கு பன்றி, ஆடு, மாடுகள் வளர்க்கக் கூடாது என நிபந்தனை விதிக்கப்பட்டுள்ளது. இவ்வாறு கூறினர்.

பிறகு தெற்கு மண்டல அலுவலகத்தில் நடைபெற்ற மக்கள் குறைதீர்க்கும் கூட்டத்தில் பங்கேற்றனர். தலைமை பொறியாளர் சக்திவேல், மண்டல தலைவர் மாணிக்கம், பி.ஆர்.. பாஸ்கரன் மற்றும் அதிகாரிகள் பங்கேற்றனர்.

 

வளர்ச்சி பணிகள் குறித்து அமைச்சர், அதிகாரிகள் திடீர் ஆய்வு குன்னூர் நகராட்சியில் பரபரப்பு

Print PDF

தினகரன் 29.09.2010

வளர்ச்சி பணிகள் குறித்து அமைச்சர், அதிகாரிகள் திடீர் ஆய்வு குன்னூர் நகராட்சியில் பரபரப்பு

குன்னூர், செப்.29: குன்னூர் நகராட்சியில் மேற்கொள்ளப்பட்டு வரும் வளர்ச்சி பணிகள் குறித்து அமைச்சர், அதிகாரிகள் குழுவினர் நேற்று திடீர் ஆய்வு மேற்கொண்டனர்.

குன்னூர் நகராட்சியில் நேற்று கதர் வாரியத்துறை அமைச்சர் ராமச்சந்திரன், கலெக்டர் அர்ச்சனா பட்நாயக், குன்னூர் எம்.ல்.ஏ சவுந்திரபாண்டியன், ஆர்.டி.ஓ ராஜூ ஆகியோர் திடீர் ஆய்வு மேற்கொண்டனர்.

முன்னதாக நகராட்சி ஆணையர் சேகரிடம், இதுவரை மேற்கொள்ளப்பட்ட வளர்ச்சி பணிகள், நிறைவடையாத வளர்ச்சி பணிகள், பணி ஒதுக்கப்பட்டும் துவங்காத பணிகள், ஒப்பந்ததாரர்களால் தாமதமாகும் பணிகள் குறித்து பட்டியலை உடனடியாக வழங்க வேண்டும் என கலெக்டர் விசாரித்து உத்தரவிட்டார்.

பணிகள் முறைகேடுகள் ஏதேனும் நடைபெற்றுள்ளதா? குறிப்பிட்ட சிலருக்கு மட்டும் வளர்ச்சி பணிகளை மேற்கொள்ள முன்னுரிமை அளிக்கப்பட்டு உள்ளதா என்பது குறித்தும் கலெக்டர் மற்றும் ஆர்.டி.ஓ ஆகியோர் தீவிரமாக ஆய்வு செய்தனர். இந்நிலையில், கலெக்டர், அமைச்சர், எம்.எல்.ஏ உள்ளிட்டோர் ஆய்வுக்கு வருவது குறித்து தனக்கு முன் கூட்டியே தகவல் தெரிவிக்காதது ஏன் என்று கூறி நகராட்சி தலைவர் ராமசாமி, அமைச்சர் மற்றும் அதிகாரிகளிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டார். பின்னர் வளர்ச்சி மன்ற கூட்டத்தில் இருந்து வெளிநடப்பு செய்தார்.

ஆய்வுக்கு வருவது குறித்து ஏற்கனவே தொலைபேசியில் தகவல் தெரிவித்து இருப்பதாக தெரிவித்தனர். குன்னூர் பஸ் நிலையம் அருகேயுள்ள வி.பி தெரு ஓடை மீது கான்கிரீட் தளம் அமைக்கும் பணியில் ஏற்பட்டுள்ள இடர்பாடுகள் குறித்து ஆய்வு மேற்கொண்டனர்.

பின்னர் குன்னூர் பஸ் நிலையத்தில் வரைபடத்தின் உதவி மூலம் பஸ் நிலைய விரிவாக்கம் குறித்து ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. குன்னூர் பஸ் நிலையத்தில் செயல்பட்டு வரும் தீயணைப்பு நிலையத்தை மாற்றுவது குறித்தும் விவாதிக்கப்பட்டது. கன்னி மாரியம்மன் கோயில் பகுதியில் ஆய்வு மேற்கொண்டனர். அப்போது, அமைச்சருடன் நகராட்சி கவுன்சிலர்கள் முபாரக், செல்வம், செயற்குழு உறுப்பினர் அன்வர்கான் ஆகியோர் உடனிருந்தனர். மாடல் ஹவுஸ் பகுதியில் 120 பேருக்கு நீண்ட நாட்களாக பட்டா வழங்கவில்லை என்று மாவட்ட கலெக்டரிடம் அதிமுக கவுன்சிலர்கள் சத்தார், சையது முபாரக் முறையிட்டனர். இது தொடர்பாக விசாரணை செய்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தாசில்தாருக்கு கலெக்டர் உத்தரவிட்டார்.

நகராட்சி பகுதியில் மேற்கொள்ள வேண்டிய வளர்ச்சி பணிகள், அடிப்படை தேவைகள் குறித்து ஆலோசனை செய்ய இன்று நடைபெற உள்ள குன்னூர் நகராட்சி கூட்டத்தில் அமைச்சர் ராமச்சந்திரன் பங்கேற்க உள்ளார். நகராட்சி கூட்டத்தில் முதன்முறையாக பங்கேற்க இருப்பதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

குன்னூர் நகரில் அனுமதியின்றி சுற்றுச்சூழலுக்கு ஊறுவிளைக்கும் வகையில் கட்டப்பட்டுள்ள கட்டிடங்களை இடிப்பது குறித்தும் அதிகாரிகள் மற்றும் அமைச்சர்கள் நேற்று தீவிரமாக ஆய்வு மேற்கொண்டனர். எனவே விரைவில் குன்னூர் நகரில் அனுமதியற்ற கட்டிடங்கள் அகற்றப்பட கூடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

 


Page 349 of 506