தினகரன் 08.09.2010
பெரியாறு வைகை கால்வாய் ஆக்கிரமிப்பு 3 மாதத்தில் அகற்ற ஐகோர்ட் உத்தரவு
மதுரை, செப். 8: பெரியாறு வைகை பாசன கால்வாய் ஆக்கிரமிப்புகளை 3 மாதத்தில் அகற்ற ஐகோர்ட் கிளை உத்தரவிட்டுள்ளது.
மேலூர் எட்டிமங்கலத்தை சேர்ந்த வக்கீல் பி.ஸ்டாலின், பெரியாறு வைகை பாசன கால்வாய் ஆக்கிரமிப்பு மற்றும் அடைப்புகளை அகற்றக்கோரி ஐகோர்ட் கிளையில் பொதுநல மனுத்தாக்கல் செய்தார். மனுவில், ‘பெரியாறு வைகை பாசன திட்டத்தில் கடை மடை பாசன நிலங்களுக்கும் தண்ணீர் செல்ல கால்வாய்களில் சிமெண்ட் சிலாப் அமைக்கப்பட்டன. அதை சிலர் திருடிவிட்டனர். கால்வாய் குப்பைகள் கொட்டப்படுகிறது. கால்வாயை ஆரமித்து கட்டிடம் கட்டியுள்ளனர். பெரியாறு வைகை பாசன கால்வாயில் ஆக்கிரமிப்பு அகற்ற உத்தரவிட வேண்டும்’ என கூறப்பட்டிருந்தது.
மனு நீதிபதிகள் டி.முருகேசன், எஸ்.நாகமுத்து முன்பு விசாரணைக்கு வந்தது. மனுதாரர் சார்பில் வக்கீல் ஏ.ராகுல் ஆஜரானார். பொதுப்பணித்துறை செயற்பொறியாளர் தாக்கல் செய்த பதில் மனுவில், ‘பெரியாறு பிரதான கால்வாயில் ஆக்கிரமிப்பு இல்லை. கிளை கால்வாய்களிலுள்ள ஆக்கிரமிப்புகளை அகற்ற கோட்டாட்சியர் மற்றும் தாசில்தாருக்கு மனு கொடுக்கப் பட்டுள்ளது. சில இடங்களில் கால்வாய் சேதம் அடைந்துள்ளது. கால்வாய் கரையை ஆக்கிரமித்து கட்டிடம் கட்டியுள்ள 33 பேருக்கு நோட்டீஸ் அனுப்பியுள்ளோம். மேலூர் நக ராட்சி சார்பில் கால்வாயில் குப்பை கொட்டப்படுகிறது. அதை நிறுத்தவும், கால்வாய்க்கும் கழிவுநீர் விழுமாறு அமைக்கப்பட்டுள்ள குழாய்களை அகற்றவும் நோட்டீஸ் கொடுக்கப்பட்டுள்ளது. பிரதான கால்வாய், கிளை கால்வாய், பேரணை முதல் கடைமடை வரை குளம், ஏரியை தூர்வாரி பராமரிக்க ரூ.150 கோடிக்கு திட்டம் தயாரிக்கப்பட்டு அரசின் ஒப்புதலுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது’ என கூறப்பட்டது.
இதனை ஏற்றுக்கொண்ட நீதிபதிகள், ‘பெரியார், வைகை பாசன கால்வாய் ஆக்கிரமிப்புகளை 3 மாதத்தில் அகற்றி, கால்வாயை, தோண்டும் போது எப்படி இருந்ததோ அதே நிலைக்கு கொண்டு வர நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுப்பணித்துறைக்கு உத்தரவிட்டனர்.