தினகரன் 13.08.2010
முறையாக குப்பை அள்ளாத ஒப்பந்த பணி ஆணை ரத்து காரைக்கால் நகராட்சி அறிவிப்பு
காரைக்கால், ஆக. 13: முறை யாக குப்பை அள்ளாத ஒப்பந்ததாரர்களின் பணி ஆணை ரத்து செய்வதாக காரைக்கால் நகராட்சி தலைவர் மற்றும் ஆணையர் தெரிவித்தனர்.
காரைக்கால் நகராட்சியின் 28வது மன்றக்கூட்டம் நேற்று நடைபெற்றது. நகரா ட்சி தலைவி பிரபாவதி தலைமை வகித்தார். துணைத்தலைவர் தங்கவடிவேலு, ஆணையர் ஜோஸ்பேட்டன் முன்னிலை வகித்தனர். கூட்டத்தில் நடைபெற்ற விவா தம்:
நகராட்சி கூட்டத்தில் தீர்மானம் இயற்றாமல் வாரச்சந்தையை அருகில் உள்ள காந்தி பூங்கா மற்றும் சாலைக்கு மாற்றியது தவறு. இதன் காரணமாக பொதுமக்கள் மற்றும் வாகன போக்குவரத்துக்கு பெருத்த இடையூறாக உள்ளது என கவுன்சிலர் அம்புரோஸ் கண்டனம் தெரிவித்தார். அதற்கு ஆதரவாக மற்ற கவுன்சிலர்களும் கண்டனம் தெரிவித்ததோடு, அடுத்த கூட்டத்தில் இதற்கு உடனடி தீர்வு காணவேண்டும் என்றனர்.
கவுன்சிலர் செய்யது பேசுகையில், காரைக்கால் நகராட்சிக்கு கடந்த 2004 முதல் கேபிள் டிவிக்கான கேளிக்கை வரி செலுத்தப்படவில்லை. மாறாக, வேறு வேறு பெயரில் கேபிள் டிவி நிறுவனம் பெயர் மாற்றம் செய்யப்பட்டு இதுவரை ரூ.88 லட்சம் ஏமாற்றப்பட்டுள்ளது. இனியும் இந்த ஏமாற்றத்தை நகராட்சி அனுமதிக்க கூடாது என்றார். இதற்கு மற்ற கவுன்சிலர்களும் ஆதரவு தெரிவித்தனர். இதனை தொடர்ந்து காரைக் கால் நகராட்சிக்கான கேளிக்கை வரியை, நகர்பகுதியில் உள்ள கேபிள் டிவி நிறுவனம் கட்டும் வரை, பொதுமக்கள் யாரும் கேபிள் டிவிக்கான சந்தா தொகையை கேபிள் நிறுவனத்தில் செலுத்த தேவையில்லை என தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
காரைக்கால் நகாரட்சிக்கு உட்பட்ட மதகடி, காதர் சுல்தான் வீதி, மற்றும் புளியங்கொட்டை சாலை வார்டுகளில், டெண்டர் விட்டபடி குப்பைகளை அள்ளாததால் பொதுமக்கள் பெரும் பாதிப்புக்கு உள்ளாகியுள்ளனர் என வார்டு கவுன்சிலர்கள் தெரிவித்தனர். முறையாக குப்பைகளை அள்ளாத ஒப்பந்ததாரர்களின் பணி ஆணையை ரத்து செய்வதாக ஆணையர் மற்றும் மன்ற தலைவி ஆகியோர் அறிவித்தனர்.கூட்டத்தில் 37 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது.