தினகரன் 13.08.2010
முறையான ஆவணங்கள் சமர்ப்பித்தால் கட்டடம் கட்ட ஒரே நாளில் அனுமதி
கோவை, ஆக. 13: முறையான ஆவணங்கள் சமர்ப்பித்தால் புதிய கட்டடம் கட்ட ஒரே நாளில் அனுமதி வழங்கப்படும் என மாநகராட்சி கமிஷனர் அன்சுல் மிஸ்ரா கூறினார்.
இந்திய கட்டுமான கலைஞர்கள் சங்க (ஐஐஏ) கோவை கிளைக்கு 2010&2012ம் ஆண்டுகளுக்கான புதிய தலைவ ராக அருண்பிரசாத், துணை தலைவராக சாய் விவேகானந்த், இணை செயலாளர்களாக கருணாம்பிகா, சசி குமார், பொருளாளராக வசந்தகுமார் ஆகியோர் தேர்வு செய்யப்பட்டுள்ளனர். இவர்களது பதவிஏற்பு விழா கோவையில் நடந்தது. பழைய நிர்வாகிகள் புதிய நிர்வாகிகளுக்கு பதவிப்பிரமாணம் செய்துவைத்தனர். விழாவில், கோவை மாநகராட்சி கமி ஷனர் அன்சுல் மிஸ்ரா பேசியதாவது:நகரில் புதிய கட்டடம் கட்டும்போது அதற்கான அனுமதி வழங்குவதில் பழைய நடைமுறையே உள்ளது. இதில் மாற்றம் கொண்டுவர வேண்டும் என கட்டட கலை நிபுணர்கள் வலியுறுத்தியுள்ளனர். இதுதொடர்பான கருத்துருவை நாங்களும் அரசுக்கு அனுப்பிவைத்துள்ளோம். மாநகரில் கட்டட விதிமுறை மீறல் தடுக்க மாநகர தொழில்நுட்ப ஆலோசனை குழு அமைக்கப்பட்டுள்ளது. இந்த குழுவின் பரிந்துரைக்கு ஏற்ப புதிய கட்டட வரைபடங்களுக்கு அனுமதி வழங்கப்படுகிறது. கட்டட வரைபடங்களுக்கு அனுமதி அளிப்பதில் மாநகராட்சி நகரமைப்பு குழு காலம் தாழ்த்துவதாக தகவல் தெரிவித்துள்ளார். அங்கு, காலதாமதத்துக்கு இடமில்லை. புதிய விண்ணப்பங்கள் பரிசீலனை செய்யப்பட்டு, வரைபடம் ஆய்வுசெய்யப்பட்டு அதிகபட்சம் 15 முதல் 20 நாட்களில் அனுமதி வழங்கப்படுகிறது. தற்போது வரைபடம் தயாரிப்பு பிரிவு என்ற புதிய பிரிவு துவக்கப்பட்டுள்ளது. இங்கு, அரசால் அங்கீகரிக்கப்பட்ட விதிமுறைகளின்படி வரைபடம் தயாரிக்கப்படுகிறது. 100க்கணக்கான வரைபடம் இப்பிரிவில் உள்ளது. இதில், ஏதேனும் ஒன்றை தேர்வுசெய்து, அதற்கான முறையான ஆவணங்களை சமர்ப்பித்தால் 1,500 சதுர அடி பரப்பளவு கொண்ட வரைபடங்களுக்கு ஒரே நாளில் அனுமதி அளிக்கப்படும். இப்பிரிவு ஒற்றை சாளர முறைப்படி செயல்படுகிறது. இங்கு, அரசு மட்டுமின்றி அரசால் அங்கீகரிக்கப்பட்ட கட்டட கலை நிபுணர்கள் வரைபடம் தயாரித்து வழங்குகின்றனர். மாநகரில் சாலை விரிவாக்கம், நடைபாதை அமைத்தல் உள்ளிட்ட அடிப்படை கட்டமைப்பு பணிகள் விரைவாக மேற்கொள்ளப்பட்டு வருகிறது. அவினாசி ரோடு, திருச்சி ரோடு போலவே மாநகரின் இதர ரோடுகளிலும் மின்சார வயர்கள் மிக விரைவில் பூமிக்கு அடியில் பதிக்கப்படும். இவ்வாறு அன்சுல் மிஸ்ரா பேசினார்.