தினமலர் 30.07.2010
ராமையன்பட்டி குப்பை கிடங்கில் 3-வதுநாளாக தீ: மேயர் ஆய்வு
திருநெல்வேலி:ராமையன்பட்டி மாநகராட்சி குப்பை கிடங்கில் 3-வது நாளாக கொளுந்து விட்டு எரியும் தீயை அணைக்கும் பணியை மேயர் ஏ.எல்.சுப்பிரமணியன் ஆய்வு செய்தார்.நெல்லை மாநகராட்சிக்குட்பட்ட பகுதியில் தினமும் சேகரமாகும் குப்பை ராமையன்பட்டியில் 30 ஏக்கர் பரப்பளவில் உள்ள குப்பை கிடங்கில் கொட்டப்பட்டு வருகிறது. இந்த குப்பை கிடங்கில் கடந்த 27ம்தேதி மாலை திடீரென தீ பிடித்தது. தகவல் அறிந்த பாளை., தீயணைப்பு வீரர்கள் விரைந்து தீயை அணைக்க முயன்றனர். காற்று வேகமாக வீசியதால் தீ மளமளவென பரவியதால் வள்ளியூர், நான்குநேரி,செங்கோட்டை, சுரண்டை, சங்கரன் கோவில், பேட்டை தீயணைப்பு நிலையங்களில் இருந்து 9 தீயணைப்பு வண்டிகள் வரவழைக்கப்பட்டு தீயை அணைக்கும் பணியில் தீயணைப்பு வீரர்கள் இரவு பகலாக ஈடுபட்டு வருகின்றனர்.
மக்கள் வெளியேறியனர்:ராமையன்பட்டி வேளாங்கண்ணி நகர், சிவாஜி நகர், அரசு புது காலனியை சேர்ந்த 200க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் புகை மண்டலம் காரணமாக தங்களது வீடுகளில் இருந்து வெளியேறி உறவினர் வீடுகளுக்கு சென்றனர்.
குப்பை கிடங்கில் நேற்று 3-வது நாளாக கொளுந்து விட்டு எரியும் தீயை குப்பையை செயின் புல்டோசர் மூலம் கிளறி விட்டு அணைத்து வருகின்றனர்.அப்பகுதி முழுவதும் புகை மண்டலமாக காட்சியளிக்கிறது.குப்பை கிடங்கில் ஏற்பட்டுள்ள தீயை அணைக்கும் பணியை மேயர் ஏ.எல்.சுப்பிரமணியன், நெல்லை மண்டல சேர்மன் விஸ்வநாத பாண்டியன், பாளை., மண்டல சேர்மன் சுப.சீத்தாராமன்,மாநகர இன்ஜினியர் ஜெய் சேவியர், செயற்பொறியாளர் நாராயண நாயர் மற்றும் அலுவலர்கள் சுமார் 40 நிமிடம் பார்வையிட்டு தீயணைப்பு வீரர்களுக்கு ஆலோசனைகளை வழங்கினார்.
மேயர், தீயணைப்பு அதிகாரியிடம் பொதுமக்களுக்கு பாதிப்பு ஏற்படாத வகையில் தீயை விரைந்து அணைக்குமாறு கேட்டுக் கொண்டார். இதற்கு தேவையான ஜேசிபி இயந்திரங்கள், செயின் புல்டோசர், தீயை அணைக்க தண்ணீர், தீயணைப்பு வீரர்களுக்கு கண்ணாடி, உணவு, குடிநீர் போன்றவற்றை விரைந்து வழங்க மாநகராட்சி அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார்.இது குறித்து தீயணைப்பு அதிகாரி கூறியதாவது:ராமையன் பட்டி குப்பை கிடங்கில் ஏற்பட்டுள்ள தீயை விரைந்து அணைக்க கூடுதலாக ஜேசிபி இயந்திரங்கள், செயின் புல்டோசர் போன்றவை வரவழைக்கப்பட்டுள்ளது. இதனை பயன்படுத்தி தீயணைப்பு வீரர்கள் தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர். ராமையன்பட்டி பகுதியில் புகை மண்டமாக உள்ளதால் மக்களை பாதுகாப்பாக இருக்க அறிவுரை வழங்கப்பட்டுள்ளது. இன்னும் 2 நாட்களில் தீ முழுமையாக அணைக்கப்படும் என்றார்.
தீயை அணைக்க கழிவுநீரை பயன்படுத்த திட்டம்:ராமையன்பட்டி குப்பை கிடங்கில் ஏற்பட்டுள்ள தீயை அணைக்க தேவையான தண்ணீர் மாநகராட்சி வாகனம் மூலம் வழங்கப்பட்டு வருகிறது. இந்த தண்ணீர் போதுமானதாக இல்லாததால் தீயை அணைக்கும் பணி தாமதமாகி வருகிறது. இதனை தவிர்க்க மாநகரில் உள்ள கழிவு நீரை சுத்திகரிப்பு செய்து, கெமிக்கல் கலந்து தீயை அணைக்க பயன்படுத்துவது குறித்து மாநகராட்சி அதிகாரிகள் தீவிரமாக ஆலோசனை நடத்தி வருகின்றனர். இதில் சுகாதார அதிகாரிகள் ஆட்சேபனை தெரிவிக்காவிட்டால் கழிவு நீரை பயன்படுத்த அதிகாரிகள் திட்டமிட்டுள்ளனர்.