தினகரன் 28.07.2010ச்
கூட்டுக்குடிநீர் திட்டப்பணி ஆய்வு
திண்டுக்கல், ஜூலை 28: வேடசந்தூர் பகுதியில் நடந்துவரும் காவிரி கூட்டுக்குடிநீர் திட்டப்பணிகளை வருவாய்த்துறை அமைச்சர் ஐ.பெரியசாமி ஆய்வு செய்தார்.
வேடசந்தூர் பகுதியில் காவிரி கூட்டுக்குடிநீர் திட்டப்பணிகள் ரூ.38 கோடி மதிப்பில் நடைபெற்று வருகிறது. கரூர் மாவட்டம் கட்டளைப் பகுதியில் இருந்து வேடசந்தூர், ஒட்டன்சத்திரம், பாளையம், கன்னிவாடி, ஸ்ரீராமபுரம் பேரூராட்சி பகுதிகள் மற்றும் வேடசந்தூர், ஒட்டன்சத்திரம், ரெட்டியார்சத்திரம், குஜிலியம்பாறை, தொப்பம்பட்டி ஊராட்சி ஒன்றியங்களைச் சேர்ந்த 739 ஊரக குடியிருப்புகள் பயன்பெறும் வகையில் செயல்படுத்தப்படும் இத்திட்டத்திற்கான பணிகள் முடிவடையும் தருவாயில் உள்ளது.
இதில் கோவிலூர் பகுதியில் வேடசந்தூர், குஜிலியம்பாறை, ஒட்டன்சத்திரம் ஊராட்சிப் பகுதிகளை 235 கிராம குடியிருப்புகள் பயனடையும் வகையில் 30 ஆயிரம் லிட்டர் கொள்ளவுடன் தரைமட்ட நீர்தேக்கத் தொட்டி அமைக்கப்பட்டு, ரூ.5.50 கோடி மதிப்பில் பணிகள் நடைபெற்று வருகிறது. இப்பணிகளை அமைச்சர் ஐ.பெரியசாமி நேற்று ஆய்வு செய்து, விரைந்து முடிக்க உத்தரவிட்டார். அப்போது, கலெக்டர் வள்ளலார், குடிநீர் வடிகால் வாரிய செயற்பொறியாளர் அகிலன் உடனிருந்தனர்.