தினகரன் 22.07.2010
சின்னமனூர் அய்யனார்புரத்தில் உரக்கிடங்கு அமைக்கும் பணி நகராட்சித் தலைவர் ஆய்வு
சின்னமனூர், ஜூலை 22: சின்னமனூர் அய்யனார்புரம் பகுதியில் முடங்கி கிடக்கும் உரக்கிடங்கு பணியை நகராட்சித் தலைவர் ஆய்வு செய்தார்.
சின்னமனூர் நகராட்சியில் 27 வார்டுகள் உள்ளன. 3வது வார்டு சாமிகுளத்தில் கடந்த 40 ஆண்டுகளாக குப்பை மற்றும் உரக்கிடங்கு உள்ளது. நகராட்சி 27 வார்டுகளில் சேகரிக்கப்படும் குப்பை கழிவுகள் இங்கு தேக்கி வைக்கப்படுகிறது. இதில் மக்கும் குப்பைகளிலிருந்து உரம் தயாரிக்கப்பட்டது. சாமிகுளம் பகுதியில் தற்போது குடியிருப்புகள் அதிகரித்துள்ளதால் குப்பைகளிலிருந்து வெளியேறும் துர்நாற்றம் அப்பகுதியில் சுகாதார சீர்கேட்டை ஏற்படுத்தியது.
இதனால் அங்குள்ள குப்பை மற்றும் உரக்கிடங்கை இடமாற்றம் செய்ய வேண்டுமென சாமிகுளம் பகுதி மக்கள் நகராட்சி நிர்வாகத்திற்கு கோரிக்கை விடுத்தனர். இதனடிப்படையில் புதிய இடத்தில் உரக்கிடங்கு அமைக்க கடந்த 2 ஆண்டுகளுக்கு தீர்மானிக்கப்பட்டது. இப்பணிக்கு திடக்கழிவு மேலாண்மை திட்டம் மூலம் ரூ.26 லட்சம் நிதி ஒதுக்கப்பட்டது. 27வது வார்டு அய்யனார்புரத்தில் புதிய உரக்கிடங்கு அமைக்க நகராட்சி நிர்வாகம் இடத்தை தேர்வு செய்தது. டெண்டர் விடப்பட்டு பணிகள் முடங்கி கிடந்தது. பணிகளை விரைந்து முடிக்க நகராட்சி நிர்வாகத்திடம் பொதுமக்கள் முறையிட்டனர்.
இதனையடுத்து அய்யனார்புரத்தில் முடங்கி கிடந்த பணிகளை நகராட்சித் தலைவர் தமிழ்ச்செலவி கூத்தபெருமாள் பார்வையிட்டார். பணியை விரைந்து துவக்க ஒப்பந்தகாரிடம் அறிவுறுத்தினர். குடிநீர் திட்ட மேற்பார்வையாளர் செல்லத்துரை, கவுன்சிலர் சிவராம் மற்றும் நகராட்சி பணியாளர்கள் உடன் சென்றனர்.