தினகரன் 30.06.2010
மின் மோட்டார் மூலம் குடிநீர்எடுப்பவர்கள்மீதுநடவடிக்கை மாவட்ட ஆட்சியருக்கு கோரிக்கை
சின்னசேலம், ஜூன் 30: சின்னசேலம் பேரூராட்சி பகுதியில் மின்மோட்டார் மூலம் குடிநீர் எடுப்பவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று ஆட்சியருக்கு கோரிக்கை விடுத்துள்ளனர்.
சின்னசேலம் பேரூராட்சி 18 வார்டுகளை கொண்டது. இதை சுற்றி ஆறுகள், ஓடைகள், குளங்கள் எதுவும் கிடையாது. மழைகாலத்தில் கூட கிணறுகளிலும், ஆழ்துளை குழாய் கிணற்றிலும் போதிய நீர் கிடையாது. இதனால் முதல்வரின் தீவிர முயற்சியால் தியாகதுருகம், கள்ளக் குறிச்சி, சின்னசேலம் உள்ளிட்ட 92 வழியோர கிராமங்களுக்கு ரிஷிவந்தியம் பெண்ணையாற்று கூட்டுக்குடிநீர் திட்டம் மூலம் குடிநீர் வழங்கப்பட்டு வருகிறது.
தற்போது வறட்சி காலம் என்பதால் குளிக்க, குடிக்க, துணி துவைக்க கூட அனைத்து தேவைகளுக்கும் கூட்டுக் குடிநீர் திட்டம் மூலம் சின்னசேலம் பேரூராட்சி மூலம் வழங்கும் குடிநீரை பயன்படுத்தி வருகின்றனர். மேலும் பல தனி நபர்கள் இந்த குடிநீரை மின் மோட்டார் மூலம் உறிஞ்சி எடுக்கின்றனர். இதனால் மேடான பகுதிகள் மற்றும் 6வது வார்டு உள்ளிட்ட சில இடங்களில் பேரூராட்சி மூலம் வழங்கும் குடிநீர் கிடைப்பதில்லை.
இந்த பேரூராட்சிக்கு செயல் அலுவலர் உள்ளிட்ட அதிகாரிகள் இல்லாத காரணத்தால் நிர்வாகத்தில் தொய்வு ஏற்படுகிறது. வடக்கநந்தல் பேரூராட்சி கள்ளக்குறிச்சி நகராட்சியிலும் மின்மோட்டார் மூலம் குடிநீரை உறிஞ்சி எடுக்கின்றனர்.
எனவே சின்னசேலம், வடக்கநந்தல், கள்ளக்குறிச்சி ஆகிய பகுதிகளில் மின் மோட்டார் பயன்படுத்தி குடிநீர் எடுப்பவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க அந்தந்த தலைவர்களுக்கு மாவட்ட ஆட்சியர் உத்தரவிட வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்