தமிழ் முரசு 28.12.2013
பெரியகுப்பம் பஸ் நிலையத்தில் ஆட்டோவுக்கு 20 கட்டணம் திருவள்ளூர் நகராட்சி முடிவு
திருவள்ளூர்:பெரியகுப்பம் பஸ் நிலையத்துக்குள் வரும் ஆட்டோவுக்கு ஒரு நாளைக்கு 20ரூபாய் வசூலிப்பது என்று திருவள்ளூர் நகரமன்ற கூட்டத்தில் முடிவு செய்துள்ளது.திருவள்ளூர் நகரமன்ற கூட்டம் தலைவர் பாஸ்கரன் தலைமையில் நேற்று நடந்தது. துணைத் தலைவர் ராதாகிருஷ்ணன், ஆணையர் அக்ஷயா, பொறியாளர் பாபு, சுகாதார அலுவலர் மோகன் முன்னிலை வகித்தனர். கவுன்சிலர்கள் தங்களது வார்டு பிரச்னைகள் பற்றி பேசினர்.
இதன்பிறகு கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள்:
திருவள்ளூர் நகரில் நவீன ஒருங்கிணைந்த பஸ் நிலையம் அமைக்கவேண்டும். கொசஸ்தலை ஆற்றின் குறுக்கே தடுப்பணை கட்ட வேண்டும். ஸ்ரீவீரராகவபெருமாள் கோயில் குளத்துக்கு நீர்வர தனி கால்வாய் அமைத்து முழுவதும் தண்ணீர் நிரப்ப வேண்டும். பெரியகுப்பம் பஜாரில் ஆட்டோக்களால் போக்குவரத்து இடையூறு ஏற்படுகிறது.
போக்குவரத்தை ஒழுங்குப்படுத்தவும் நகராட்சி நிதியை பெருக்கும் வகையிலும் பெரியகுப்பம் பஸ் நிலையத்துக்குள் வருகின்ற ஆட்டோவுக்கு ஒரு நாளைக்கு 20 ரூபாய் வசூலிக்க வேண்டும். 17வது வார்டுக்கு உட்பட்ட ஸ்ரீபாலாஜி நகர், இந்திரா நகர் பகுதிகளை மண்டலம் ‘ஏ‘ வில் இருந்து மக்கள் நலன் கருதி பி மண்டலத்துக்கு விதிமுறைகள் படி மாற்றவேண்டும்.திருவள்ளூர்,- திருத்தணி திருத்தலங்களில் நடைபாதையுடன் கூடிய கழிவுநீர் கால்வாய் அமைக்க வேண்டும் உள்பட 55 தீர்மானங்கள் நிறைவேற்றினர்.