Urban News

  • Increase font size
  • Default font size
  • Decrease font size
Nagara Seithigal - Municipal Administration

மாநகராட்சிக்கு ஆணையம் எச்சரிக்கை அற்ப காரணத்துக்காக ஆர்.டி.ஐ. மனுவை நிராகரிக்கக்கூடாது

Print PDF

தினகரன் 10.06.2010

மாநகராட்சிக்கு ஆணையம் எச்சரிக்கை அற்ப காரணத்துக்காக ஆர்.டி.. மனுவை நிராகரிக்கக்கூடாது

புதுடெல்லி, ஜூன் 10: பெயரை சரியாக குறிப்பிடவில்லை என்ற அற்ப காரணத்துக்காக தகவல் அறியும் உரிமைச் சட்டப்படி வரும் மனுக்களை நிராகரித்தல் கூடாது என்று மாநகராட்சிக்கு மத்திய தகவல் ஆணையம் உத்தரவிட்டுள்ளது.

மாநகராட்சியிடம் தகவல் அறியும் உரிமைச்சட்டப்படி அனுப்பப்பட்ட மனு ஒன்று மத்திய தகவல் தொடர்பு அதிகாரிஎன்று பெயரிடப்பட்டு அனுப்பப்பட்டிருந்தது. எஸ்.சி.அகர்வால் என்பவர் இந்த மனுவை அனுப்பி இருந்தார். ஆனால், இதுபோன்ற பதவி எதுவும் மாநகராட்சியில் இல்லை என்று கூறி அந்த மனுவை மாநகராட்சி அதிகாரிகள் திருப்பி அனுப்பினர்.

இதுகுறித்து மத்திய தகவல் ஆணையத்திடம் அகர்வால் முறையிட்டார். இதை விசாரித்த மத்திய தகவல் ஆணையர் சைலேஷ் காந்தி தனது உத்தரவில் கூறியிருப்பதாவது:

மாநகராட்சியில் இருக்கும் மக்கள் தொடர்பு அதிகாரிதான் தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் கீழ் வரும் மனுக்களுக்கு பதில் பெற்று தருபவர் என்று பொதுமக்கள் அனைவரும் தெரிந்திருக்க வேண்டிய அவசியம் இல்லை. அதேபோல் ஒவ்வொரு துறையிலும் தகவல் பெற்று தருபவரை பற்றி முழுமையாக மக்கள் அறிந்திருக்க வேண்டும் என்ற அவசியமும் இல்லை.

தகவல் அறியும் உரிமைச் சட்டப்படி வரும் மனுக்களை படித்தவுடனேயே தெரிந்து கொள்ள முடியும் என்பதால், முகவரியில் அதிகாரி பதவியின் பெயர் தவறாக எழுதப்பட்டிருந்தாலும், சம்பந்தப்பட்ட மக்கள் தொடர்பு அதிகாரிக்கு அனுப்பி வைக்க மாநகராட்சி நடவடிக்கை எடுக்க வேண்டும். இதுபோன்ற அற்ப காரணத்துக்காக மனுவை திருப்பி அனுப்புவது கூடாது.தகவல் அறியும் உரிமைச் சட்டப்படி வரும் மனுக்களை பிரித்து பார்த்து உரிய அதிகாரியிடம் சேர்க்க ஒரு அலுவலரை மாநகராட்சி நியமிக்க வேண்டும். இவ்வாறு ஆணையர் உத்தரவிட்டார்.

 

முறையற்ற குடிநீர் இணைப்பு ஆணையர் எச்சரிக்கை

Print PDF

தினகரன் 10.06.2010

முறையற்ற குடிநீர் இணைப்பு ஆணையர் எச்சரிக்கை

பண்ருட்டி, ஜூன் 10: பண்ருட்டி நகராட்சி ஆணையாளர் உமா மகேஸ்வரி விடுத்துள்ள செய்திக் குறிப்பு: பண்ருட்டி நகராட்சியில் அனுமதியின்றி குடிநீர் இணைப்பு வைத்துள்ளோர் தங்களது வீட்டு குடிநீர் இணைப்பை முறைப்படுத்திக் கொள்ள வேண்டும். முறையற்ற வீட்டு குடிநீர் இணைப்பு வைத்துள் ளவர்கள் வரும் 20ம் தேதிக்குள் பண்ருட்டி நகராட்சியை அணுகவும். முறையற்ற வீட்டு குடிநீர் இணைப்புகள் கண்டு பிடிக்கப்பட்டால் துண்டிக்கப்படும். சட்ட ரீதியாக கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும். இவ்வாறு அதில் அவர் கூறியுள்ளார்.

 

இந்தர்லோக் ரயில் நிலையத்தில் வணிக வளாகத்துக்கு சீல்

Print PDF

தினகரன் 10.06.2010

இந்தர்லோக் ரயில் நிலையத்தில் வணிக வளாகத்துக்கு சீல்

புதுடெல்லி, ஜூன் 10: இந்தர்லோக் ரயில் நிலையம் பகுதியில் அனுமதியின்றி கட்டப்பட்ட வணிக வளாகத்துக்கு மாநகராட்சி சீல் வைத்தது.

இது பற்றி மாநகராட்சியின் சதார் பாகர் கஞ்ச் மண்டல துணை கமிஷனர் ரேணு கிருஷ்ணன் கூறியதாவது:

டெல்லி மெட்ரோ ரயில் கழகத்துடன் ஒப்பந்தம் செய்து கொண்டு இந்தர்லோக் ரயில் நிலைய பகுதியில் மாபெரும் வணிக வளாகத்தை தனியார் ஒருவர் கட்டியுள்ளார். ஆனால், மாநகராட்சியின் கட்டிட விதிகளை அவர் சிறிதும் பின்பற்றவில்லை. இதற்கான ஒப்புதலையும் மாநகராட்சியிடமிருந்து அவர் பெறவில்லை. இது தொடர்பாக கடந்த ஆண்டு செப்டம்பர் 15ம் தேதி அவருக்கு நோட்டீஸ் அனுப்பப்பட்டது. நேரில் வந்து விளக்கம் அளிக்குமாறும் நோட்டீஸ் அனுப்பப்பட்டது. பல முறை நோட்டீஸ் அனுப்பியும் பதில் இல்லாததால்தான், வணிகவளாகத்துக்கு சீல வைக்க கடந்த மார்ச் மாதம் முடிவு செய்யப்பட்டது. இதை எதிர்த்து மாநகராட்சியின் தீர்ப்பாயத்தில் டெல்லி மெட்ரோ கழகம் முறையீடு செய்தது. ஆனால், சீல் வைப்பதற்கு எந்த இடைக்கால தடையும் விதிக்க தீர்ப்பாயம் மறுத்துவிட்டது.

டெல்லி மெட்ரோ ரயில் கழக சொத்துக்களை வர்த்தக பயன்பாட்டுக்கு அனுமதிக்க மத்திய அரசு அனுமதியளித்துள்ளது. ஆனால், அதில் கட்டுமான பணிகளுக்கு சம்பந்தப்பட்ட உள்ளாட்சி அமைப்பிடம் அனுமதி பெற வேண்டும் என்றும் கூறப்பட்டுள்ளது.

இந்த விஷயத்தில் மாநகராட்சிக்கும் மெட்ரோ ரயில் கழகத்துக்கும் எந்த மோதலும் இல்லை. அதனால்தான், வணிக வளாகத்துக்கு சீல் வைக்கும் நடவடிக்கையை மேற்கொண்டோம். இந்த வணிகவளாகத்தில் மொத்தம் 59 கடைகள் கட்டப்பட்டுள்ளன. இதில் முன்னணி நிறுவனங்கள் தங்கள் பொருட்களை விற்பனை செய்து வந்தன. இப்போது, இந்த வணிக வளாகத்துக்கு முழுமையாக சீல் வைத்துள்ளோம். இவ்வாறு ரேணு கிருஷ்ணன் கூறினார். எனினும், மாநகராட்சியின் நடவடிக்கைக்கு மெட்ரோ கழகம் எதிர்ப்பு தெரிவித்துள்ளது.

மெட்ரோ ரயில் கழக அதிகாரிகள் கூறுகையில்,‘ எங்களுக்கு சொந்தமான நிலத்தில் பணிகளை மேற்கொள்ள யாரிடமும் அனுமதி பெற தேவையில்லை. மாநகராட்சி தன்னிச்சையாக செயல்பட்டுள்ளது. தீர்ப்பாயம் உத்தரவை மீறி மாநகராட்சி செயல்பட்டுள்ளது. இதை தீர்ப்பாயத்தின் கவனத்துக்கு விரைவில் கொண்டு செல்வோம்என்றனர்.

 


Page 408 of 506