தினகரன் 01.06.2010
பிளாஸ்டிக் பைகள் பயன்படுத்திய சூப்பர் மார்க்கெட்டுக்கு சீல் அதிகாரிகள் நடவடிக்கை
நாகர்கோவில், ஜூன்1: நாகர்கோவிலில் பிளாஸ்டிக் பைகள் பயன்படுத்திய சூப்பர் மார்க்கெட்டுக்கு அதிகாரிகள் சீல் வைத்தனர்.
குமரி மாவட்டத்தில் கடந்த ஏப்ரல் 1 ம் தேதி முதல் பிளாஸ்டிக் பைகள் பயன்படுத்த தடைவிதிக்கப்பட்டுள்ளது. தடைசெய்யப்பட்ட பிளாஸ்டிக் பைகள் மற்றும் கப்புகளை விற்பனை செய்யும் கடைகள், வர்த்தக நிறுவனங்கள், விடுதிகள் மீது நடவடிக்கை எடுக்கவும், நிறுவனங்களை சீல் வைக்கவும் முடிவு செய்யப்பட்டுள்ளது.
இந்த நிலையில் நாகர்கோவில் கோர்ட் ரோட்டில் உள்ள ஒரு சூப்பர் மார்க்கெட்டில் தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பைகள் மற்றும் கப்புகள் பயன்படுத்தப்படுவதாக கலெக்டருக்கு புகார்கள் வந்தன.
இதை தொடர்ந்து கலெக்டர் ராஜேந்திரரத்னூ உத்தரவின் பேரில் ஆர்டிஓ நடராஜன் தலைமையில் தாசில்தார் நாகராஜன், வருவாய் ஆய்வாளர் திருவாழி, கிராம நிர்வாக அதிகாரி சுயம்பு ஆகியோர் அடங்கிய குழு கோர்ட் ரோட்டில் உள்ள சூப்பர் மார்க்கெட்டில் நேற்று மாலை ஆய்வு செய்தது. ஆய்வின் போது தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பைகள் மற்றும் கப்புகள் என மொத்தம் 82.855 கிலோ இருப்பது கண்டுப்பிடிக்கப்பட்டு பறிமுதல் செய்யப்பட்டன. பின்னர் அந்த கடைக்கு ஆர்டிஓ நடராஜன் சீல் வைத்தார்.
இது குறித்து ஆர்டிஓ கூறியது:
தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பைகள், கப்புகள் இந்த ஸ்டோரில் பயன்படுத்துவதாக புகார்கள் வந்தது.
அதன் அடிப்படையில் சோதனை நடத்தி பிளாஸ்டிக் பைகளை கைப்பற்றியுள்ளோம். மேலும் அந்த ஸ்டோருக்கு சீல் வைத்துள்ளோம். ஒரு வார காலத்தில் விளக்கம் அளிக்க அந்த ஸ்டோர் நிர்வாகத்திற்கு நோட்டீஸ் கொடுத்துள்ளோம் என்றார்.
ஆய்வின் போது நாகர்கோவில் நகராட்சி ஆணையர் ஜானகி, சுகாதார அலுவலர் போஸ்கோ ராஜன், தமிழ்நாடு மாசு கட்டுப்பாட்டு வாரிய உதவி சுற்றுச்சூழல் பொறியாளர் கிருபானந்த ராஜன் ஆகியோர் உடன் இருந்தனர். வடசேரி இன்ஸ்பெக்டர் ஜமால் தலைமையில் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர்.