Urban News

  • Increase font size
  • Default font size
  • Decrease font size
Nagara Seithigal - Municipal Administration

கோவையில் 4 மாடி கட்டடம் இடிப்பு

Print PDF

தினமலர்            27.12.2013 

கோவையில் 4 மாடி கட்டடம் இடிப்பு

கோவை:கோவையில், நான்கு பெண்களை பலிவாங்கிய, நான்கு மாடி வணிக வளாகத்தில், இரு தளங்களை இடிக்கும் பணி நேற்று துவங்கியது.

கோவை அவிநாசி ரோடு, லட்சுமி மில்ஸ் சிக்னல் அருகில், "விக்னேஷ்வரா கிரிஸ்டா' என்ற வணிக கட்டடத்தில், கடந்த ஏப்.,25ல் ஏற்பட்ட பயங்கர தீவிபத்தில் நான்கு பெண்கள், உடல்கருகி உயிரிழந்தனர். இந்த வணிக வளாகம் கோவை, ரெட்பீல்ட்ஸ், நாராயணசாமி வீதியை சேர்ந்த, ஜெயலட்சுமி, அவரது மகன் ரமேஷ் ஆதித்யா ஆகியோருக்கு சொந்தமானது. விபத்துக்குப்பின் இந்த வணிக வளாகம், அதிகாரிகளால் இழுத்து மூடப்பட்டு, "சீல்' வைக்கப்பட்டது. விசாரணையில் பல்வேறு தகவல்கள் வெளியாகின.

கடந்த 1999, டிச., 22ல், பேஸ்மென்ட் 420.24 ச.மீட்டர், தரை தளம் 423.8 ச.மீட்டர், முதல்தளம் 468.3 ச.மீட்டர், மேல்தளத்தில் 47 ச.மீட்டரில் ஒரு அறை கட்ட உள்ளூர் திட்டக்குழுமத்திடம் அனுமதி பெற்றுள்ளனர். ஆனால், அனுமதியின்றி இரண்டாம், மூன்றாம் தளம் கட்டப்பட்டுள்ளது. இதையடுத்து, அனுமதியின்றி கூடுதல் பரப்பில் கட்டடம் கட்டியதற்காக, உள்ளூர் திட்டக்குழுமம் சார்பில் நோட்டீஸ் கொடுக்கப்பட்டது. கட்டடத்தில் போதுமான பாதுகாப்பு வசதிகள் இல்லாதது தொடர்பாக ஆர்.டி.ஓ., விசாரணை நடந்தது.

இதற்கிடையே, அனுமதியற்ற கட்டுமானத்தை இடிக்க, உள்ளூர் திட்டக்குழுமம் வழங்கிய 30 நாள் அவகாசம் நிறைவடைந்ததால், இரண்டாம், மூன்றாம் தளத்தை இடிக்க, கடந்த மே 31ல், அப்போதைய கலெக்டர் கருணாகரன் உத்தரவிட்டார். இதற்கான பணிகளும் துவங்கின. எனினும், கட்டட உரிமையாளர் சென்னை ஐகோர்ட்டில் தடை உத்தரவு பெற்றார்; இடிக்கும் பணி கைவிடப்பட்டது.

இந்நிலையில், அனுமதியற்ற கட்டட பரப்பை இடிக்கக்கூடாது என, முன்பு பிறப்பித்த தடை உத்தரவை, சென்னை ஐகோர்ட் விலக்கிக்கொண்டது.

மேலும், "அனுமதியற்ற கட்டட விவகாரத்தில் தலையிட முடியாது. விதிமுறைகளின்படி நடவடிக்கை எடுக்கலாம் என, ஐகோர்ட் கடந்த நவ., 19ல் உத்தரவிட்டது.

இதையடுத்து, உள்ளூர் திட்டக் குழுமம் மற்றும் மாநகராட்சி அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்திய கலெக்டர் அர்ச்சனா பட்நாயக், அனுமதியற்ற கட்டட பரப்பை இடிக்க, கடந்த, 24ம் தேதி உத்தரவிட்டார் உள்ளூர் திட்டக்குழும உறுப்பினர் செயலர் (பொறுப்பு) சந்திரசேகரன், உதவி இயக்குனர் யோகராஜ், மாநகராட்சி உதவி நகரமைப்பு அலுவலர் விமலா தலைமையில், வணிக வளாக கட்டடத்தில், இரண்டு தளங்களை இடிக்கும் பணி, நேற்று காலை 7:30 மணிக்கு துவங்கியது.

உள்ளூர் திட்டக்குழும உறுப்பினர் செயலர் சந்திரசேகரன் கூறுகையில், ""அனுமதியற்ற இரண்டு தளங்கள் முழுமையாக இடிக்கப்படும். கான்கிரீட் பில்லர்களை இடிக்க, பவர் கட்டிங் மெஷின் வேண்டும். கோவையில், நவீன இயந்திரங்கள் இல்லாததால், சென்னையில் உள்ள தனியார் நிறுவனத்திடம் பேசியுள்ளோம்.

பவர் கட்டிங் மிஷின் வருவதற்குள், தளங்கள் இடிக்கும் பணி நிறைவு பெறும். அதன்பின், கான்கிரீட் பில்லர்கள் வெட்டி அகற்றப்படும். உள்ளூர் திட்டக்குழும கட்டட அனுமதியின்படி, மற்ற தளங்கள், சுற்றுப்புற திறவிடங்கள் அளவீடு செய்து நடவடிக்கை எடுக்கப்படும்,'' என்றார்.

 

மாநகராட்சி குறைதீர் கூட்டம் சாலை ஆக்ரமிப்புகளை அகற்ற உத்தரவு

Print PDF

தினகரன்             27.12.2013

மாநகராட்சி குறைதீர் கூட்டம் சாலை ஆக்ரமிப்புகளை அகற்ற உத்தரவு

திருச்சி, : திருச்சி மாநகராட்சி அலுவலகத்தில் நேற்று மக்கள் குறைதீர் நாள் கூட்டம் நடைபெற்றது.

கூட்டத்திற்கு மேயர் ஜெயா தலைமை வகித்தார். ஆணையர் தண்டபாணி முன்னிலை வகித்தார். சாலை மேம்பாடு, ஆக்ரமிப்பு அகற்றம், பழுதடைந்த தெரு விளக்குகளை சீரமைப்பது, கழிவறை மற்றும் பூங்காக்கள் பராமரிப்பு உள்ளிட்ட கோரிக்கைகள் தொடர்பாக 15 மனுக்கள் பெறப்பட்டன.

மனுக்களைப் பெற்றுக்கொண்ட மேயர், போக்குவரத்துக்கு இடையூறாக சாலை மற்றும் முக்கிய வீதிகளில் உள்ள ஆக்ரமிப்புகளை உடனடியாக அகற்றுமாறு அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார். மேலும், பழுதடைந்த தெருவிளக்குகளை விரைந்து பழுது நீக்கம் செய்திடவும், பொதுமக்களிடம் பெறப்படும் மனுக்கள் மீது உரிய தள ஆய்வு மேற்கொண்டு முழுமையான நடவடிக்கை எடுப்பதோடு, இதுகுறித்து மனுதாரர்களுக்கு பதில் அனுப்ப வேண்டும் என்றும் அதிகாரிகளுக்கு மேயர் உத்தரவிட்டார்.

 

சாக்கடை ஆக்கிரமிப்பை அகற்ற பவானி மக்களுக்கு நகராட்சி கெடு

Print PDF

தினகரன்             26.12.2013 

சாக்கடை ஆக்கிரமிப்பை அகற்ற பவானி மக்களுக்கு நகராட்சி கெடு

பவானி: பவானி நகரப் பகுதியில் சாக்கடையை ஆக்கிரமித்து கட்டப்பட்டுள்ள அனைத்துவிதமான நிரந்தர மற்றும் தற்காலிக ஆக்கிரமிப்புகளை தாங்களாகவே அகற்றிக் கொள்ளுமாறு நகராட்சி நிர்வாகம் அறிவித்துள்ளது. உச்சநீதிமன்ற உத்தரவின் பேரில் பவானியில் நெடுஞ்சாலை ஆக்கிரமிப்புகள் ஏற்கனவே அகற்றப்பட்டன. பஸ் நிலையத்தில் பயணிகளுக்கு சிரமம் கொடுத்த கடைக்காரர்களின் ஆக்கிரமிப்புகளும் அதிரடியாக அகற்றப்பட்டன. நகர வீதிகளில் பல்வேறு வகையான ஆக்கிரமிப்புகளால் போக்குவரத்தில் இடையூறு ஏற்பட்டு வந்தது.

இதனால், நகராட்சி நிர்வாகம் கடந்த சில நாட்களுக்கு முன்னர் ஆக்கிரமிப்புகளை அகற்றும் பணியை மேற்கொண்டது. அப்போது, கடும் எதிர்ப்பு கிளம்பியதோடு, ஆக்கிரமிப்புகளை தாங்களே அகற்றிக் கொள்ள கால அவகாசம் அளிக்க வேண்டும் என பொதுமக்கள் வேண்டுகோள் விடுத்தனர்.

இதனால், ஆக்கிரமிப்பு அகற்றும் பணியை தற்காலிகமாக நிறுத்திவைத்த நகராட்சி நிர்வாகம் வரும் 31ம் தேதி வரை கெடு விதித்துள்ளது. இதுகுறித்து, நகராட்சி ஆணையாளர் ராஜேஸ்வரி கூறுகையில், ‘பவானி நகராட்சிக்குட்பட்ட சாலைகளில் பொதுமக்கள் தங்கள் வீட்டின் முன் உள்ள சாக்கடை மேல் கட்டியுள்ள படிக்கட்டுகள், குளியல் அறைகள் மற்றும் இதர கட்டுமானங்களை தாங்களாகவே டிசம்பர் 31ம் தேதிக்குள் அகற்றிக் கொள்ள வேண்டும். ஆக்கிரமிப்புகளை அகற்றத் தவறினால் நகராட்சி நிர்வாகம் மூலம் அகற்றி அதற்கான செலவுத் தொகை முழுவதும் சம்பந்தப்பட்டவர்களிடம் இருந்து வசூல் செய்யப்படும்‘ என்றார்.

 


Page 43 of 506