தினமணி 25.05.2010
முதல்வர் அலுவலக மனுக்கள் மீது உடனுக்குடன் நடவடிக்கை எடுக்க ஆட்சியர் உத்தரவு
ராமநாதபுரம், மே 24: தமிழக முதல்வரின் தனிப்பிரிவு அலுவலகத்திலிருந்து வரும் புகார் மனுக்களுக்கு உடனுக்குடன் தீர்வு காணவேண்டும் என, நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகளை ஆட்சியர் த.ந.ஹரிஹரன் கேட்டுக்கொண்டார்.
ராமநாதபுரத்தில் மக்கள் குறைதீர்க்கும் கூட்டம் ஆட்சியர் தலைமையில் மாவட்ட ஊராட்சி மன்றக் கூட்ட அரங்கில் திங்கள்கிழமை நடைபெற்றது. கூட்டத்தில் பொதுமக்களிடமிருந்து 162 மனுக்கள் பெறப்பட்டன.
குடும்ப அட்டைக்கு பொருள் வழங்கக் கோருதல், கலைஞர் வீட்டு வசதித் திட்டத்தின் கீழ் கான்கிரீட் வீடுகள் கோருதல், பட்டா மாறுதல், முதியோர் உதவித்தொகை, இலவச தையல் இயந்திரம், வங்கிக் கடன் உள்பட பல்வேறு மனுக்கள் பெறப்பட்டன.
மனுக்கள் சம்பந்தப்பட்ட துறை அலுவலர்களுக்கு பிரித்து கொடுக்கப்பட்டு மனுதாரர்களுக்கு 15 நாள்களுக்குள் பதிலளிக்குமாறும் ஆட்சியர் உத்தரவிட்டார்.
பின்னர் ஆட்சியர் பேசுகையில், தமிழக முதல்வரின் தனிப்பிரிவு அலுவலகத்திலிருந்து பெறப்பட்ட மனுக்கள் 17 நெடுஞ்சாலைத்துறை அலுவலகத்தில் நிலுவையாக இருந்து வருகின்றன. இதுகுறித்து உரிய நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும்.
முதல்வர் அலுவலக தனிப்பிரிவு மனுக்கள், அமைச்சர்கள் மூலமாக பெறப்படும் மனுக்கள் மற்றும் மக்கள் குறை தீர்க்கும் நாளில் பெறப்படும் மனுக்கள் ஆகியன மீது உடனுக்குடன் நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும்.
ராமேசுவரம் நகராட்சி கழிவுநீர்ப் பிரச்சினை தொடர்பாக வந்த புகார் மனு மீதும் இதுவரை நடவடிக்கை எடுக்கப்படாமல் உள்ளதை உடனடியாக தீர்க்கப்பட வேண்டும். ஒரு சில துறைகள் மனுக்களை குறைவாக வைத்திருந்தாலும் மாவட்ட நிர்வாகம் மொத்தமாக பார்க்கும்போது அவை அதிகமானதாக இருப்பதால் சம்பந்தப்பட்ட துறைகள் மக்கள் குறைதீர்க்கும் கூட்டங்களில் வரப்பெறும் மனுக்கள் மீது உடனுக்குடன் நடவடிக்கைகள் எடுக்க வேண்டும் என ஆட்சியர் கேட்டுக்கொண்டார். உடனுக்குடன் பதில் அளித்து எவ்வித மனுக்களும் நிலுவையில் இல்லாத துறையினரை ஆட்சியர் பாராட்டினார்.
மாவட்ட அளவில் பிளஸ் 2 பொதுத் தேர்வில் முதலிடத்தை பிடித்த அ.அபிராமி, அருண்பாண்டியன், ராஜ்குமார் (2-வது இடம்), ஷாமிலிதேவி (3-வது இடம்), சௌந்தர்யா (4-வது இடம்), விஜயசுப்பிரமணியம் (5-வது இடம்) ஆகியோருக்கு பஞ்சாப் நேஷனல் வங்கி வழங்கிய பரிசையும் மேல்படிப்பு படிப்பதற்கான கடன் பெறுவதற்கான உத்தரவையும் ஆட்சியர் வழங்கினார்.