தினமணி 29.04.2010
செஞ்சி பஸ் நிலைய கடைகள் ரூ.39 லட்சத்துக்கு ஏலம்
செஞ்சி, ஏப். 28: செஞ்சி பஸ் நிலைய அபிவிருத்தி திட்டத்தின் கீழ் ரூ.55 லட்சம் மதிப்பில் கட்டப்பட்ட வணிக வளாகத்தில் 21 கடைகள் புதன்கிழமை ஏலம் விடப்பட்டன.
÷இக்கடைகள் மொத்தம் ரூ.39 லட்சத்துக்கு ஏலம் போயின. விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள பேரூராட்சி பஸ் நிலைய கடைகளில் செஞ்சியில்தான் மிக அதிகமான அளவில் ஏலம் போனது குறிப்பிடத்தக்கது.
÷ இங்குள்ள வணிக வளாகத்தில் 21 கடைகள் கட்டப்பட்டுள்ளன. இவை கடந்த மாதம் ஏலம் விட டெண்டர் விடப்பட்டது.
இந்நிலையில் புதன்கிழமை பேரூராட்சி அலுவலகத்தில் ஏலம் நடைபெற்றது. ஏலத்தில் 118 பேர் கலந்து கொண்டனர். அதிகபட்சமாக பஸ் நிலைய முதல் கடை ரூ.2.81 லட்சத்துக்கு ஏலம் போனது. குறைந்த பட்சமாக ரூ.1.54 லட்சத்துக்கு 13-ம் எண் கடை ஏலம் போனது.
÷செஞ்சி பேரூராட்சி மன்ற தலைவர் செஞ்சி மஸ்தான், செஞ்சி பேரூராட்சி செயல் அலுவலர் தமிழ்ச்செல்வன் உள்ளிட்ட பேரூராட்சி அலுவலக ஊழியர்கள் ஏலத்தை நடத்தினர்.