Urban News

  • Increase font size
  • Default font size
  • Decrease font size
Nagara Seithigal - Municipal Administration

மாட்டுத்தாவணி பஸ் ஸ்டாண்டில் தண்ணீர் விற்பனையில் கொள்ளை

Print PDF

தினமலர் 29.04.2010

மாட்டுத்தாவணி பஸ் ஸ்டாண்டில் தண்ணீர் விற்பனையில் கொள்ளை

மதுரை: மதுரை மாட்டுத்தாவணி பஸ் ஸ்டாண்ட் கடைகளில், தண்ணீர் உட்பட அனைத்து பொருட்களையும் கூடுதல் விலைக்கு விற்பனை செய்கின்றனர்.பஸ் ஸ்டாண்டில் ஸ்வீட் ஸ்டால், கூல்டிரிங்ஸ், டீக்கடை, ஓட்டல்கள் என நூற்றுக்கும் அதிகமான கடைகள் உள்ளன. கோடை வெயில் உச்சத்தை அடைந்துள்ளதால், இந்த கடைகளில் குடிநீர் (பாட்டில் தண்ணீர்) விற்பனை அமோகமாக நடக்கிறது. இவற்றிற்கு எவ்வித விலை கட்டுப்பாடும் இல்லை. அக்வாபினா ஒரு லிட்., தண்ணீர் பாட்டில் ரூ.15 (எம்.ஆர்.பி.,விலை) என பாட்டிலில் அச்சிடப் பட்டுள்ளது. ஆனால் ரூ.18க்கு விற்பனை செய்கின்றனர். இரண்டு லிட்டர் பாட்டில் விலை ரூ.22. இதனை ரூ.28 வரை விற்பனை செய்கின்றனர். கின்லே தண்ணீர் பாட்டில் விலை ரூ.14. ஆனால் ரூ.17 க்கு விற்கின்றனர். தண்ணீர் மட்டுமின்றி பிரபல கம்பெனிகளின் கூல்டிரிங்ஸ் விற்பனைகளிலும், இதே நிலை தான். ரூ.55க்கு விற்பனை செய்ய வேண்டிய இரண்டு லிட்., மிராண்டாவை ரூ.65க்கு விற்கின்றனர். மெரீனா பழச்சாறு கடை, வசந்தம் என ஒரு சில கடைகள் தவிர அனைத்து கடைகளிலும் இந்த முறைகேடுகள் அப்பட்டமாக நடக்கிறது.சில வியாபாரிகள் கூறியதாவது:

நாங்கள் கடைகளுக்கு செலுத்த வேண்டிய வாடகை மட்டுமின்றி வேறு பணமும் கொடுக்கிறோம். மின்வெட்டால், பல மணிநேரம் ஜெனரேட்டர் ஓட்டும் நிலை உள்ளது. இது எங்களுக்கு கூடுதல் செலவு. விற்காத பொருட் களை, சப்ளை செய்யும் கம்பெனிகள் திருப்பி எடுத்துக் கொள்ளாது. இதனால் நஷ்டத்தில் இருந்து மீள, அதிக விலைக்கு விற்கிறோம் என்று ஒப்புக்கொள்கின்றனர். பஸ் ஸ்டாண்டில் பல கடைகளில் மாநகராட்சி வழங்கிய அனுமதி எண்கள் எழுதப்படவில்லை. விளம்பர பலகைகளால் மறைத்து, கடையின் பெயர் கூட தெரியாமல் வைத்துள்ளனர். கடை எண், உரிமம் எண், வியாபாரி பெயர், பொருட்களின் விலைப்பட்டியல் தெரியும் வகையில் போர்டு வைக்க வேண்டும் என்ற விதி உள்ளது. ஆனால் யாரும் பின்பற்றுவது இல்லை. பொதுமக்கள் எந்த பொருள் வாங்கினாலும் பில் கேட்டு வாங்க வேண்டும்.

யாரிடம் புகார் செய்வது : மாவட்ட அதிகாரி ஒருவர் கூறியதாவது: பொருட்களை எம்.ஆர்.பி., விலையை விட கூடுதலாக விற்பது, கடும் நடவடிக்கைக்குரிய குற்றம். வாங்குபவர்கள் அதற்குரிய பில்லுடன் புகார் செய்தால் உறுதியாக நடவடிக்கை எடுக்கப்படும், என்றார். இது தொடர்பாக கலெக்டர் அலுவலகத்தில் உள்ள மாவட்ட வழங்கல் அலுவலகத்தில் புகார் செய்யலாம். 0452 - 253 2501 ல் தொடர்பு கொள்ளலாம். சுகாதாரமற்ற குடிநீரை விற்றால் மாநகராட்சி சுகாதாரப்பிரிவு போன் 0452- 253 1304 ல் புகார் செய்யலாம்.

Last Updated on Thursday, 29 April 2010 06:21
 

நகராட்சி கடைகளுக்கு ஓசூரில் 6வது முறை ஏலம்

Print PDF

தினமலர் 29.04.2010

நகராட்சி கடைகளுக்கு ஓசூரில் 6வது முறை ஏலம்

ஓசூர்: ஓசூர் சப்-கலெக்டர் அலுவலகத்தில் ஆறாவது முறையாக நகராட்சி புது பஸ் ஸ்டாண்ட் கடைகளுக்கு நடந்த ஏலத்தில் ஆறு கடைகளும், ஒரு ஹோட்டலும் ஏலம் போனது. ஓசூர் நகராட்சி சார்பில் 10 கோடி ரூபாய் செலவில் புதிய பஸ் ஸ்டாண்ட் கட்டும் பணிகள் நடந்து வருகிறது. பஸ் ஸ்டாண்ட் வளாகத்தில் வணிக வளாக கடைகள் கட்டப்பட்டுள்ளன. இதில், 76 கடைகள், இரு ஹோட்டல்கள் கட்டப்பட்டுள்ளது. பஸ் ஸ்டாண்ட் கடைகள் கடந்த செப்டம்பர் 25ம் தேதி முதல் தொடர்ந்து ஐந்து முறை ஏலம் விடப்பட்டது. பல கடைகள் ஏலம் போகவில்லை. நேற்று ஆறாவது முறையாக சப்-கலெக்டர் அலுவலகத்தில் ஏலம் நடந்தது.நகராட்சி நிர்வாக கூடுதல் இயக்குனர் சந்திரசேகர் தலைமை வகித்தார். கமிஷனர் பன்னீர்செல்வம் முன்னிலை வகித்தார்.இது வரை ஏலம் போகாத 57 கடைகள், ஒரு ஹோட்டல் ஏலம் விடப்பட்டது. இதில், ஏழாம் எண் கடை அதிகப்பட்சமாக ஏலத்தொகையாக 35,500 ரூõபாய்க்கு ஏலம் போனது. இரண்டாம் எண் கடை 19,000 ரூபாய்க்கும், 49ம் எண் கடை 4,250 ரூபாய்க்கும், 50ம் எண் கடை 5,200 ரூபாய்க்கும், 51ம் எண் கடை 4,650 ரூபாய்க்கும், 52ம் நம்பர் கடை 5, 250 ரூபாய்க்கும் ஏலம் போனது. ஒரு ஹோட்டல் 34, 200 ரூபாய்க்கு ஏலம் போனது. இது வரை ஆறு முறை ஏலம் நடத்தி மொத்தம் 25 கடைகளும், இரு ஹோட்டல்களும் மட்டும் ஏலம் போய் உள்ளன. இன்னும் 51 கடைகள் ஏலம் போகவில்லை. தமிழ்நாடு நகராட்சி நிர்வாக கூடுதல் இயக்குனர் சந்திரசேகர் கூறும் போது,''மே15ம் தேதிக்குள் கான்டிராக்டர் பஸ் ஸ்டாண்ட் பணியை முடித்து நகராட்சியிடம் ஒப்படைத்து விடுவதாக கூறியுள்ளார். அதன்பின், அரசிடம் பேசி பஸ்ஸ்டாண்ட் திறப்பு விழா தேதி முடிவு செய்வோம். அதற்குள் கடை ஏலத்தை முடிக்க நடவடிக்கை எடுக்கப்படும். இதுவரை ஏலம்போன கடைகள் நல்ல மாதவாடகைக்கு போய் உள்ளது மகிழ்ச்சியளிக்கிறது, '' என்றார்.

Last Updated on Thursday, 29 April 2010 06:17
 

நீர்நிலைகளில் குப்பைகளை கொட்டினால் நடவடிக்கை:ஆட்சியர்

Print PDF

தினமணி 28.04.2010

நீர்நிலைகளில் குப்பைகளை கொட்டினால் நடவடிக்கை:ஆட்சியர்

நாகர்கோவில், ஏப். 27:கன்னியாகுமரி மாவட்டத்தில் நீர்நிலைகளிலும், பொது இடங்களிலும் குப்பைகளையும், கழிவுகளையும் கொட்டினால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று ஆட்சியர் ராஜேந்திர ரத்னூ எச்சரித்துள்ளார்.

இது தொடர்பாக செவ்வாய்க்கிழமை அவர் வெளியிட்ட செய்திக் குறிப்பு:

கன்னியாகுமரி மாவட்டத்திலுள்ள நீல் நிலைகள், இயற்கை வளங்கள் நிறைந்த நிலங்களைப் பாதுகாக்கவும், பொதுமக்களின் சுகாதாரத்தை தொடர்ந்து முறையாக பேணவும், சுற்றுலா பயணிகள் இம் மாவட்டத்தின் வளங்களை முழுமையாக ரசித்து, மீண்டும் வரும் நிலையை உருவாக்கவும் ஏப். 22-ம் தேதியன்று உலக புவி தினத்தின்போது குப்பைகள் இல்லாத மாவட்டத்தை உருவாக்க முதல்படி எடுத்து வைக்கப்பட்டுள்ளது.

இதன்படி மாவட்டத்திலுள்ள 4 நகராட்சிகள், 56 பேரூராட்சிகள் மற்றும் 99 ஊராட்சிகளிலும் குப்பைகள் தேங்கியுள்ள நீர் நிலைகள், காலிமனைகள், பொதுஇடங்கள் மற்றும் முக்கிய இடங்கள் கண்டறியப்பட்டு அவற்றிலுள்ள குப்பைகளை நீக்கும் பணி தொடங்கப்பட்டுள்ளது.

அதன்படி இதுவரை 476 இடங்களில் குப்பைகள் அகற்றப்பட்டு, மீதி இடங்களில் தேங்கியுள்ள குப்பைகளை நீக்கும் பணி தொடர்ந்து நடைபெற்று ஏப். 30-ம் தேதிக்குள் முடிக்க திட்டமிடப்பட்டுள்ளது. நீர் நிலைகளிலும், பொது இடங்களிலும் குப்பைகளை கொட்டுதலும், கழிவுப் பொருள்களை வீசி எறிவதும், நடைமுறையில் உள்ள குற்ற விசாரணை முறை சட்டத்தின் பிரிவு 133-ன்படி தண்டனைக்குரிய குற்றமாகும் என்றார் ஆட்சியர்

 


Page 433 of 506