தினமணி 17.04.2010
மோட்டார் வைத்து குடிநீர் திருட்டு: 12 மின் மோட்டார்கள் பறிமுதல்
போடி, ஏப். 16: போடியில் நகராட்சி அலுவலர்கள் திடீர் சோதனை நடத்தியதில் குடிநீர் திருடப் பயன்படுத்திய 12 மின் மோட்டார்கள் ஒரு மணி நேரத்தில் பறிமுதல் செய்யப்பட்டன.
போடி நகராட்சியில் 33 வார்டுகளில் 10 ஆயிரத்து 300-க்கும் அதிகமான குடிநீர் இணைப்புகள் உள்ளன.
இவற்றின் மூலம் நாள் ஒன்றுக்கு ஒரு நபருக்கு 95 லிட்டர் குடிநீர் வீதம், 77 லட்சம் லிட்டர் குடிநீர் விநியோகம் செய்யப்படுகிறது. பல வார்டுகளில் மின் மோட்டார் வைத்து தண்ணீர் எடுக்கப்பட்டு வருவதால், குடிநீர் விநியோகம் சீராக நடைபெறவிûல் எனக் குற்றச்சாட்டு எழுந்தது. தற்போது கோடை காலம் என்பதால், பல பகுதிகளில் தண்ணீர் கிடைக்காமல் இருந்து வந்தது.
இதனால் மோட்டார் வைத்து தண்ணீர் எடுப்பவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டுமெனப் பொதுமக்கள் வலியுறுத்தினர். இதன்பேரில் மோட்டார் வைத்து தண்ணீர் எடுத்தால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என ஆணையர் க.சரவணக்குமார் எச்சரிக்கை விடுத்திருந்தார். இந்நிலையில் வியாழக்கிழமை இரவு போடி பஸ் நிலையம் அருகில் உள்ள ஹோட்டல்கள், வீடுகளில் நகராட்சி அலுவலர்கள் திடீர் சோதனை நடத்தினர். இதில் ஒரு மணி நேரத்தில் 12 மின் மோட்டார்கள் பறிமுதல் செய்யப்பட்டன.
வெள்ளிக்கிழமை இவற்றை நகர்மன்றத் தலைவர் ரதியாபானு, ஆணையர் க.சரவணக்குமார், துணைத்தலைவர் ம.சங்கர், 9-வது வார்டு கவுன்சிலர் ராஜா ஆகியோர் பார்வையிட்டனர். நகர்மன்றத் தலைவர் கூறும்போது, மின்மோட்டார் வைத்து குடிநீர் எடுப்பதால் குடிநீர் விநியோகம் பாதிக்கப்படும். மோட்டார் பயன்படுத்தி குடிநீரை எடுத்தால் பாரபட்சமின்றி நடவடிக்கை எடுக்கப்படும். கோடை காலத்தில் தடையின்றி குடிநீர் கிடைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது என்றார்