தினமலர் 12.04.2010
மாவட்டத்தில் பின்தங்கி வரும் நகராட்சிகள் தனிக்கவனம் செலுத்துவது எப்போது?
ராமநாதபுரம் : மாவட்டத்தில் உள்ள நகராட்சிகள் பின்தங்கி வரும் நிலையில், அரசு தரப்பு அதன் மீது தனிக்கவனம் செலுத்த வேண்டிய கட்டாயம் எழுந்துள்ளது.மாவட்டத்தில் ராமநாதபுரம், பரமக்குடி, கீழக்கரை, ராமேஸ்வரம் என நான்கு நகராட்சிகள் உள்ளன. அதளபாதாளத் தில் போய்க் கொண்டிருந்த ராமநாதபுரம் நகராட்சியில் கூட இதோ அதோ என , சில பணிகள் தொடங்கிவிட்டது. மற்ற நகராட்சிகளின் நிலையை பார்த்தால் அந்தோ பரிதாபம். பரமக்குடியில் நகராட்சி என்ற பெயர் மட்டுமே நிலைத்துள்ளதே தவிர, வளர்ச்சி பணிகள் நிலை தடுமாறி நடந்து வருகிறது. ஆக்கிரமிப்புகளை அகற்றும் அடிப்படை கடமையை கூட இன்று வரை முழுமையாக மேற்கொள்ளவில்லை.
பரமக்குடியின் நீண்ட தலைவலியாக கருதப்படும் ஆக்கிரமிப்பு விசயத்துக்கு ரோடு விரிவாக்கம் மட்டுமே இனி விடையளிக்கும் என்ற நிலைக்கு வந்துவிட்டது. சுகாதார கேட்டில் கீழக்கரை, பரமக்குடி,ராமேஸ்வரம் என, மூன்றும் தொடர்ந்து போட்டி போட்டு வருகின்றன. இந்த போட்டியில் யார் வெற்றி பெறுவார் என்பது ஒரு புறமிருந்தாலும், மக்கள் பாதிக்கப்படுவது உறுதியாகிவிட்டது.டெண்டர், ஒப்பந்தகாரர் பேரம், போலி கணக்குகளில் காட்டும் கவனத்தை நகராட்சியின் வளர்ச்சியில் யாரும் காட்டுவதில்லை. அதிகாரிகள் தான் இப்படியென்றால், மக்கள் பிரதிநிதிகள் அதை விட இருக்கிறார்கள்.
கூட்டம் நடத்தி தீர்மானம் போடுவதற்கு பதிலாக, வளர்ச்சி திட்டத்தை செயலில் நிறைவேற்றும் தீர்மானத்தை இவர்கள் கையில் எடுப்பது எப்போதோ? மற்ற மாவட் டங்களுடன் ஒப்பிட்டு பார்க்கும் போது, இங்கு தான் நகராட்சிகள் ரோடு வசதி கூட இல்லாமல் திண்டாடி வருகின்றன.
சாக்கடை, குடிநீர், தெருவிளக்கு என தேவையின் பட்டியல் இன்னும் நீளும். தேர்தலில் முதலில் குறிவைக்கப்படும் இந்த முக்கிய நகராட்சிகள், அதன் பின் கண்டுகொள் ளாமல் போவதும் தொடர்ந்து வருகிறது. மக்கள் பிரதிநிதிகளையும், அரசு அதிகாரிகளையும் நம்பி இன்று நட்டாத்தில் தவித்துக்கொண்டிருக்கும் இந்த நகராட்சிகளின் வளர்ச்சிக்கு அரசு தரப்போகும் பதில் என்ன? அடிப்படை வசதிகளையாவது நிறைவேற்றும் எண்ணமிருந்தால், அரசு இந்த நகராட்சிகளின் மீது தனிகவனம் செலுத்த வேண்டும்.