தினமணி 07.04.2010.
மாநகராட்சி எல்லை: கூடுதல் இயக்குநர் ஆலோசனை
வேலூர், ஏப்.6:வேலூர் மாநகராட்சி எல்லை வரையறை மற்றும் வார்டுகள் பிரிப்பது குறித்து, வேலூரில் செவ்வாய்க்கிழமை நகராட்சிகள் நிர்வாக கூடுதல் இயக்குநர் சந்திரசேகரன் ஆலோசனை நடத்தினார்.
வேலூர் மாநகராட்சி அலுவலகத்தில் நடைபெற்ற ஆலோசனைக் கூட்டத்தில் பங்கேற்ற அவர், வேலூர் மாநகராட்சிப் பகுதியை 72 வார்டுகளாக பிரிப்பது குறித்து ஆலோசனை நடத்தினார்.
வேலூர் மாவட்டத்தில் உள்ள 3 நகராட்சிகள், 3 மூன்றாம் நிலை நகராட்சிகள், 8 பேரூராட்சிகள், 61 ஊராட்சிகள் ஆகியவை மாநகராட்சி எல்லைக்குள் கொண்டு வரப்படுகின்றன. இவற்றை 4 மண்டலங்களாகப் பிரித்து 72 வார்டுகள் உருவாக்கப்பட உள்ளன.
இக்கூட்டத்தில் மாநகராட்சி ஆணையர் செல்வராஜ், செயல் அலுவலர்கள், ஊராட்சி பிரதிநிதிகள் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். இந்தக் கூட்டத்தில் முக்கிய முடிவுகள் எதுவும் எடுக்கப்படாத நிலையில், வரும் மே மாதம் மீண்டும் கூட்டம் நடத்தி முடிவுகள் மேற்கொள்ளப்படும் என்று மாநகராட்சி ஆணையர் செல்வராஜ் செய்தியாளர்களிடம் கூறினார்.
முன்னதாக கூடுதல் இயக்குநர் சந்திரசேகரன், வார்டுகளைப் பிரிக்கும் பணி, தகன மேடை, மக்கள் தொகை, நகரில் உள்ள பரப்பளவு உள்ளிட்டவைகளை நேரில் சென்று ஆய்வு செய்தார்.