தினமலர் 06.04.2010
குடிசை மேம்பாட்டு திட்டத்தில் 44 வீடுகளுக்கு அனுமதி ரத்து
தேனி : குடிசை மேம்பாட்டு திட்டத்தில் பணிகளை துவக்காதவர்களுக்கு வழங்கப்பட்ட அனுமதி ரத்து செய்யப்பட்டுள்ளது. அவர்களுக்கு பதில் வேறு பயனாளிகள் தேர்வு செய்யப்பட உள்ளனர்.
ஒருங்கிணைந்த குடியிருப்பு மற்றும் குடிசைப்பகுதி மேம்பாட்டு திட்டத்தின் கீழ் தேனி அல்லிநகரம் நகராட்சியில் 180 பயனாளிகள் தேர்வு செய்யப்பட்டுள்ளனர். அங்கீகரிக்கப்பட்ட குடிசைப்பகுதிகளான விஸ்வநாததாஸ் காலனி, கக்கன்ஜி காலனி, ஒண்டிவீரன் நகர் பகுதிகளில் பயனாளிகள் தேர்வு செய்யப்பட்டு இருந்தனர். 2009 மார்ச் 18 ல் இருந்து வீடுகள் கட்டுவதற்கான வேலை அனுமதி வழங்கப்பட்டு பணிகள் நடந்து வருகின்றன.இதில் தேர்வு செய்யப்பட்ட பயனாளிகளில் கக்கன்ஜி காலனியில் 14 பேரும், ஒண்டிவீரன் நகரில் 30 பேரும் இது வரை வீடு கட்டும் பணியை துவக்கவில்லை. அவர்கள் உடனடியாக பணியை துவங்க வேண்டும் என அறிவித்தும் இது வரை துவங்கவில்லை. இதனால் வேறு பயனாளிகளை தேர்வு செய்ய சென்னை நகராட்சி நிர்வாக மண்டல இயக்குனர் உத்தரவிட்டுள்ளார். இதை தொடர்ந்து ஏற்கனவே 44 பேருக்கு வழங்கப்பட்ட அனுமதியை நகராட்சி ரத்து செய்துள்ளது. புதிய பயனாளிகள் தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.