தினமணி 05.05.2010
தூத்துக்குடி உள்ளூர் திட்டக் குழுமப் பகுதியில் கட்டடம் கட்ட 30 நாள்களுக்குள் அனுமதி
தூத்துக்குடி, ஏப். 4: தூத்துக்குடியில் உள்ளூர் திட்டக் குழுமப் பகுதியில் கட்டடம் கட்ட 30 நாள்களுக்குள் அனுமதி வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக மாவட்ட ஆட்சியர் கோ. பிரகாஷ் தெரிவித்தார்.
இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு: தூத்துக்குடி உள்ளூர் திட்டக் குழுமப் பகுதிக்கு உள்பட்ட தூத்துக்குடி மாநகராட்சி மற்றும் அய்யனடைப்பு, அத்திமரப்பட்டி, கீழத்தட்டப்பாறை, கோரம்பள்ளம், குலையன்கரிசல், குமாரகிரி, மறவன்மடம், மாப்பிளையூரணி, மீளவிட்டான், மேலத்தட்டப்பாறை, முள்ளக்காடு, முத்தையாபுரம், சங்கரப்பேரி, தெற்கு சிலுக்கன்பட்டி, தூத்துக்குடி ரூரல், வடக்கு சிலுக்கன்பட்டி, சாமிநத்தம், தெற்கு வீரபாண்டியபுரம், சில்லாநத்தம், புதூர் பாண்டியாபுரம், மேல அரசடி, கீழ அரசடி, தருவைக்குளம், புதியம்புத்தூர், கோவன்காடு, மாரமங்கலம், பழையகாயல், மஞ்சள்நீர் காயல் ஆகிய ஊராட்சிப் பகுதிகளில் கட்ட அனுமதி கோரி பெறப்படும் விண்ணப்பங்கள் மீது 30 நாள்களுக்குள் முடிவெடுக்க அரசு ஆணையிட்டுள்ளது.
அதன் அடிப்படையில் கட்ட அனுமதி வழங்க காலதாமதத்தைத் தவிர்க்கும்பொருட்டு தேவையான ஆட்சேபனையின்மை சான்றினை விண்ணப்பதாரர்கள் நேரடியாக சம்பந்தப்பட்ட துறைகளுக்கு விண்ணப்பிக்கும்போது, நகர் ஊரமைப்பு துறை மற்றும் தூத்துக்குடி உள்ளூர் திட்டக் குழுமத்தின் கடிதத்தை கோராமல் உடனடியாக விண்ணப்பதாரருக்கு ஆட்சேபனையின்மை சான்று வழங்க தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள அனைத்து துறை சார்ந்த அலுவலர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது என்றார் ஆட்சியர்.