Urban News

  • Increase font size
  • Default font size
  • Decrease font size
Nagara Seithigal - Municipal Administration

29 வார்டுகளில் கூட்டு துப்புரவு பணிக்கு தமது சொந்த செலவில் 25 பணியாளர்கள்: அமைச்சர் மைதீன்கான் நியமித்தார்

Print PDF

தினமலர் 30.03.2010

29 வார்டுகளில் கூட்டு துப்புரவு பணிக்கு தமது சொந்த செலவில் 25 பணியாளர்கள்: அமைச்சர் மைதீன்கான் நியமித்தார்

திருநெல்வேலி:நெல்லை மாநகராட்சியில் கூட்டு துப்புரவுப் பணி மேற்கொள்ள 25 பணியாளர்களை தமது சொந்த செலவில் சுற்றுச் சூழல் அமைச்சர் மைதீன்கான் நியமித்துள்ளார். இதன் மூலம் வாரம்தோறும் ஒவ்வொரு வார்டுளிலும் துப்புரவு பணி மேற்கொள்ளப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.நெல்லை மாநகராட்சியில் திருநெல்வேலி, பாளையங்கோட்டை, மேலப்பாளையம், தச்சநல்லூர் ஆகிய 4 மண்டலங்கள் உள்ளன. இந்த மண்டலங்களில் 55 வார்டுகள் உள்ளன. வார்டுகளில் துப்புரவுப் பணிகளை மேற்கொள்ள போதிய துப்புரவு பணியாளர்கள் இல்லை. 400க்கும் மேற்பட்ட துப்புரவு பணியாளர்கள் பணியிடம் நிரப்பப்படாமல் உள்ளது.

மாநகராட்சியில் உள்ள துப்புரவு பணியாளர்களை கொண்டு மாநகராட்சி முழுமைக்கும் துப்புரவுப் பணி என்பது இயலாத காரியமாக உள்ளது. வாரம் ஒரு முறை மாநகராட்சியில் உள்ள அனைத்து பணியாளர்களையும் ஒருங்கிணைத்து ஒரு வார்டு என்ற முறையில் கூட்டு துப்புரவுப் பணியும் மாநகராட்சி சார்பில் நடந்துவருகிறது.இருப்பினும் மாநகராட்சியில் உள்ள துப்புரவு பணியாளர்கள் மூலம் முழுமையாக கூட்டு துப்புரவுப் பணி மேற்கொள்ள முடியவில்லை.இதையடுத்து பாளை., தொகுதி எம்.எல்.ஏவும், சுற்றுச்சூழல் அமைச்சருமான டி.பி.எம்.மைதீன்கான், தமது சொந்த செலவில் 25 துப்புரவு பணியாளர்களை கூட்டு துப்புரவு பணிக்காக மாநகராட்சிக்கு வழங்கியுள்ளார். இந்த 25 பணியாளர்கள் மூலம் வாரம் ஒரு முறை பாளை., தொகுதியுள்ள 29 வார்டுகளில் கூட்டு துப்புரவுப் பணி நடத்தப்படும் என அமைச்சர் மைதீன்கான் தெரிவித்துள்ளார்.

இந்த பணிக்கான துவக்க விழா மேலப்பாளையம் 29வது வார்டில் நேற்று நடந்தது. கூட்டு துப்புரவுப்பணிகளை சுற்றுச்சூழல் அமைச்சர் மைதீன்கான் துவக்கிவைத்தார். மேலப்பாளையம் ஆமீன்புரம் பகுதியில் கழிவு நீரோடை சுத்தம் செய்தல் மற்றும் குப்பைகளை அகற்றும் பணியில் துப்புரவு பணியாளர்கள் ஈடுபட்டனர்.நிகழ்ச்சியில் மாநகர நல அலுவலர் டாக்டர் கலுசிவலிங்கம், மாநகரப் பொறியாளர் ஜெய்சேவியர், செயற்பொறியாளர் நாராயணன் நாயர், மேலப்பாளையம் மண்டல உதவிக்கமிஷனர் கருப்பசாமி, சேர்மன் முகம்மதுமைதீன், சுகாதார ஆய்வாளர்கள் முருகேசன், அரசகுமார், சாகுல்ஹமீது, ஆறுமுகம், வேலாயுதம் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

இதுகுறித்து சுற்றுச்சூழல் அமைச்சர் மைதீன்கான் கூறுகையில், 'நெல்லை மாநகராட்சியில் உள்ள துப்புரவு பணியாளர்களால் அனைத்து பகுதிகளிலும் துப்புரவுப் பணியை முழுமையாக மேற்கொள்ளவதில் சிரமம் உள்ளது. தொகுதிக்கு செல்லும் போது துப்புரவு பணி, குடிநீர் பிரச்னைகளை தான் மக்கள் புகாராக சொல்கின்றனர். குடிநீர் பிரச்னையை நிறைவேற்ற பல்வேறு திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகிறது. துப்புரவு பிரச்னையை பொறுத்த வரையில் 25 பணியாளர்களை எனது சொந்த செலவில் மாநகராட்சிக்கு வழங்கியுள்ளேன். அவர்கள் ஒவ்வொரு வார்டுகளிலும் மாநகராட்சி அதிகாரிகள் கண்காணிப்பில் துப்புரவுப் பணியை மேற்கொள்வர். இந்த துப்புரவு பணி வாரம் தோறும் ஒவ்வொரு வார்டுகளிலும் நடைபெறும் என்றார்'.

Last Updated on Tuesday, 30 March 2010 10:13
 

ரூ.7.95 லட்சம் வாடகை பாக்கி தாராபுரம் ஹோட்டலுக்கு 'சீல்'

Print PDF

தினமலர் 30.03.2010

ரூ.7.95 லட்சம் வாடகை பாக்கி தாராபுரம் ஹோட்டலுக்கு 'சீல்'

தாராபுரம்: தாராபுரம் நகராட்சிக்கு ஏழு லட்சத்து 95 ஆயிரம் ரூபாய் வாடகை பாக்கி வைத்துள்ள ஹோட்டலை வருவாய் ஆய்வாளர் பூட்டி 'சீல்' வைத்தார். தாராபுரம் பஸ் ஸ்டாண்டில் மோகன் என்பவர் 20 ஆண்டுகளுக்கு மேலாக ஹோட்டலை குத்தகைக்கு எடுத்து நடத்தி வந்தார். அரசு பஸ்கள் உணவுக்காக பத்து நிமிடம் நின்று சென்றதால், பயணிகள் இந்த ஹோட்டலில் உணவு, டீ, காஃபி, தின்பண்டங்கள் வாங்கி சாப்பிட்டனர். ஹோட்டல் மற்றும் அருகிலுள்ள சிறிய கடைகளில் வியாபாரம் நன்றாக நடந்தது. தாராபுரம் - திண்டுக்கல் ரோட்டில் தனியார் மூலம் இரு மோட்டல்கள் திறக்கப்பட்டன. இங்கு அரசு பஸ்களை நிறுத்தும் டிரைவர், கண்டக்டர்களுக்கு உணவு, சிகரெட், 20 ரூபாய் டிப்ஸ், பார்சல் சாப்பாடு ஆகியவை இலவசமாக வழங்கப்படுகிறது. இதனால், பஸ் ஸ்டாண்டில் நிறுத்துவதற்கு பதிலாக மோட்டல்களில் அரசு பஸ்கள் நின்று சென்றன.

பஸ் ஸ்டாண்டு ஹோட்டல் குத்தகைதாரர் நகராட்சிக்கு மாதம் 64 ஆயிரம் ரூபாய் வாடகை செலுத்த வேண்டும். ஆனால், நகராட்சிக்கு ஓராண்டாக வாடகை செலுத்தாமல் ஏழு லட்சத்து 95 ஆயிரம் ரூபாய் வாடகை பாக்கி வைத்துள்ளார். நகராட்சி நிர்வாகம் பல மாதங்களாக வாடகை கட்ட கூறியும் பயனில்லை. மோகன் வாடகை கட்ட காலஅவகாசம் கேட்டு சென்னை உயர்நீதிமன்றத்தின் மனு கொடுத்தார். மனுவை விசாரித்த நீதிபதி ஆறு வாரத்துக்குள் 50 சதம் வாடகை பாக்கியை கட்டவேண்டுமென உத்தரவிட்டது. இக்காலக்கெடுவும் 26ம் தேதியுடன் முடிந்த நிலையில், வாடகை கட்டாதததால் நேற்று காலை 11 மணிக்கு ஆர்.., இந்திராணி, வரி வசூலர் கணபதி, ஜெகதீஸ், கிராம நிர்வாக ஆய்வாளர் வெங்கடேஷன், சுகாதார ஆய்வாளர் பிச்சை, நாட்ராயன் ஆகியோர் கடையின் கதவை மூடி 'சீல்' வைத்தனர். உள்ளாட்சி அமைப்புகளுக்கு வருவாய் கிடைக்கும் பஸ் ஸ்டாண்டில் அரசு பஸ்கள் நிற்காமல், தனியாருக்கு சொந்தமான மோட்டல்களில் நிறுத்துவதால் வருவாய் இழப்பு ஏற்படுகிறது. தாராபுரம் நகராட்சிக்கு அரசு பஸ்கள் உணவுக்காக நின்று செல்லாததால் நகராட்சிக்கு ஆண்டுதோறும் 25 லட்சம் ரூபாய் வருவாய் இழப்பு ஏற்படும் அபாயம் உள்ளது.

Last Updated on Tuesday, 30 March 2010 09:22
 

சிவகாசி வாகன காப்பகம், கட்டண கழிப்பறை டெண்டரில் நகராட்சிக்கு பல லட்சம் இழப்பு

Print PDF
தினமலர் 27.03.2010

சிவகாசி வாகன காப்பகம், கட்டண கழிப்பறை டெண்டரில் நகராட்சிக்கு பல லட்சம் இழப்பு

சிவகாசி : சிவகாசி பஸ் ஸ்டாண்ட்டில் இரு சக்கர வாகன காப்பகம், கட்டண கழிப்பறை டெண்டர் கடந்த ஆண்டை விட ரூ.4.26 லட்சம் குறைத்து ஏலம் போனது.
சிவகாசி நகராட்சி பஸ் ஸ்டாண்டில், இரு சக்கர வாகன காப்பகத்தில் 2010 முதல் 2013 வரை கட்டணம் வசூல் செய்யும் உரிமைக்கு டெண்டர் கோரப்பட்டது. ஒரு ஆண்டிற்கு ரூ.5 லட்சத்திற்கு ஏலம் போனது. இந்த காப்பகம் 2007 -2008ல், ரூ.8.71 லட்சத்திற்கு ஏலம் போனது. தற்போது விடப்பட்ட ஏலத்தொகை சராசரி மதிப்பு அல்லது முந்தைய ஆண்டு ஏலத்தொகையை விட குறைவாக இருக்கக் கூடாது என்பது ஏலத்தின் விதி. ஆனால், இருமுறை யாரும் ஏலம் கேட்க வராததால் 2008-2009ஐ விட, ரூ.2.1லட்சத்திற்கு குறைத்து டெண்டர் விட்டுள்ளனர்.

குறைவான தொகைக்கு ஏலம் விட்டதற்கான காரணம் 2009-2010ல் நகராட்சி மூலம் இருசக்கர வாகன காப்பகம் நடத்தப்பட்டது. இதில் ஆண்டுக்கு ரூ.4.92 லட்சம் வருமானம் கிடைத்தது. இதில் பணியாளர்களுக்கு சம்பளமாக ஆண்டுக்கு ரூ.1.98 லட்சம் வழங்கப்பட்டது. செலவு போக நகராட்சிக்கு 2,94,342 மட்டுமே கிடைத்தது என குறிப்பிட்டுள்ளனர். இதே போல் பஸ் ஸ்டாண்ட் கட்டண கழிப்பிடத்தையும் 2007-2008 ஆண்டை விட 2.25 லட்ச ரூபாய் குறைத்து, தற்போது ரூ.3 லட்சத்து மூன்றுக்கு ஏலம் விட்டுள்ளனர்.

வாகன காப்பகம், கட்டண கழிப்பிடத்தை ஏலம் எடுத்த கான்டராக்டர்கள் அடுத்து வரும் மூன்று ஆண்டுகளுக்கு ஏல தொகையுடன் ஐந்து சதவீத தொகையை உயர்த்தி அவரே நடத்தி கொள்ளவும் அனுமதி உள்ளது. நகராட்சிக்கு ரூ. 4.26 லட்சம் இழப்பில் ஏலம் விட தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.

எவ்வளவு தொகைக்கு ஏலம் போயிருக்க வேண்டும்: வாகன காப்பகம் 2007-2008ல் 8.71 லட்ச ரூபாய்க்கு டெண்டர் விடப்பட்டது. ஏல விதிப்படி ஆண்டுக்கு, ஐந்து சதவீதம் வீதம் மூன்று ஆண்டுக்களுக்கு உயர்த்தி இருந்தால், 10 லட்சத்து 8 ஆயிரத்து 291க்கு குறையாமல் ஏலம் விடப்பட்டிருக்க வேண்டும். ஆனால், நகராட்சி கூறும் பல காரணங்களால், வாகன காப்பகம் தற்போது 5 லட்ச ரூபாய்க்கு டெண்டர் விட்டுள்ளனர்.

கட்டண கழிப்பறை 2007-2008ல் 5 லட்சத்து 25 ஆயிரத்து 237க்கு டெண்டர் விடப்பட்டுள்ளது. ஆண்டுக்கு 5 சதவீத தொகை உயர்த்தி மூன்று ஆண்டுக்கு பின் 6 லட்சத்து 8 ஆயிரத்து 27க்கு டெண்டர் விடப்பட்டிருக்க வேண்டும். தற்போது 3 லட்ச ரூபாய்க்கு டெண்டர் விட்டுள்ளனர்.

நகராட்சி சொத்து இவ்வளவு தொகை குறைத்து ஏலம் போனது ஏன் என கவுன்சில் கூட்டத்தில் கவுன்சிலர்கள் கேள்வி கேட்கவில்லை. நகராட்சி, பொதுமக்களிடம் இருந்து சொத்து வரி உயர்வு, குடிநீர் கட்டண வரி உயர்வு, தொழில் வரி உயர்வு ஆகிய வரியினங்களையும் உயர்த்தி வசூலிக்கும் வேளையில் நகராட்சி சொத்துக்களை மட்டும் குறைந்த தொகைக்கு ஏலம் விடுவது விசித்திரமாக உள்ளது.

Last Updated on Saturday, 27 March 2010 10:20
 


Page 451 of 506