Urban News

  • Increase font size
  • Default font size
  • Decrease font size
Nagara Seithigal - Municipal Administration

நகராட்சி கடைகளுக்கு 'சீல்' வைப்பால் பரபரப்பு

Print PDF

தினமலர் 18.03.2010

நகராட்சி கடைகளுக்கு 'சீல்' வைப்பால் பரபரப்பு

நாமக்கல்: நகராட்சிக்கு சொந்தமான கடைகள் விற்பனை செய்வதாக வெளியான தகவலையடுத்து, அந்தக் கடைகளை நகராட்சி கமிஷனர் தலைமையிலான அலுவலர்கள் பூட்டி சீல் வைத்தனர். நாமக்கல் பஸ் ஸ்டாண்டில் 30க்கும் மேற்பட்ட கடைகள் உள்ளன. அதில் சேலம் பஸ்கள் நிற்கும் பகுதியில் உள்ள கடைகள் சிலவற்றை, அதை ஏலம் எடுத்தவர்கள் விற்பனை செய்வதாக நாளிதழ் ஒன்றில் விளம்பரம் கொடுத்தனர். இது குறித்து நகராட்சி கமிஷனரிடம் புகார் செய்யப்பட்டது. கமிஷனர் ஆறுமுகம் தலைமையில் நகராட்சி அலுவலர்கள் நேற்று இரவு 8 மணியளவில், விற்பனை செய்வதாக அறிவிக்கப்பட்ட நான்கு கடைகளையும் பூட்டி சீல் வைத்தனர். இச்சம்பவத்தால் பஸ் ஸ்டாண்ட் பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

Last Updated on Thursday, 18 March 2010 11:25
 

கோயம்பேடு மார்க்கெட் வளாக ஆக்கிரமிப்பு கடைகளுக்கு 'சீல்': காய்கறி கடை பெயரில் நடத்தப்பட்ட டீ கடைகள் மூடல்

Print PDF

தினமலர் 18.03.2010

கோயம்பேடு மார்க்கெட் வளாக ஆக்கிரமிப்பு கடைகளுக்கு 'சீல்': காய்கறி கடை பெயரில் நடத்தப்பட்ட டீ கடைகள் மூடல்

கோயம்பேடு : கோயம்பேடு மார்க்கெட் வளாகத்திற்குள் செயல்பட்டு வந்த ஆக்கிரமிப்பு கடைகளை, மார்க்கெட் நிர்வாக குழுவினர் நேற்று அதிகாலை அதிரடியாக அகற்றினர். காய்கறி விற்க உரிமம் பெற்று டீக்கடை நடத்திய மூன்று கடைகளுக்கு, 'சீல்' வைத்தனர். அதிகாரிகளுக்கு எதிர்ப்பு தெரிவித்த வியாபாரிகளை போலீசார் அப்புறப்படுத் தினர்.சென்னை கோயம்பேடு மார்க்கெட்டில் காய்கறி, பூ, பழங்கள் என 3 ஆயிரத்து 194 கடைகளுக்கு உரிமம் வழங்கப் பட்டுள்ளன.மார்க்கெட்டிற்குள் லாரிகள் எளிதாக சென்று வர, காலியிடங்கள் அதிகளவில் விடப் பட்டுள்ளன.காலியிடங்களில் இலைக் கட்டு, தக்காளி வியாபாரம் செய்யும் சிறு வியாபாரிகள் ஆக்கிரமித்து கடைகள் போட்டிருந்தனர்.

இதனால், லட்சக்கணக்கில் பணம் செலுத்தி கடை நடத்த உரிமம் பெற்றுள்ள வியாபாரிகள் பாதிக்கப்பட்டனர்.


ஆக்கிரமிப்பு கடைகளை அகற்றக்கோரி தக்காளி வியாபாரி கிரிகுமார், ஐகோர்ட்டில் உத்தரவு பெற்றார். மார்க்கெட் தலைமை நிர்வாக அதிகாரி ராஜேந்திரன் மற்றும் அவரது அலுவலர்கள் நேற்று அதிகாலை 5 மணிக்கு, ஆக்கிரமிப்பு கடைகளை அகற்றச் சென்றனர்.மார்க்கெட் வளாக பகுதியில் போக்குவரத்திற்கு இடையூறாக இருந்த நூற்றுக்கும் மேற்பட்ட கடைகளை, மார்க்கெட் நிர்வாக கமிட்டி அலுவலர்கள் அகற்றி, வாகனத்தில் ஏற்றிச் சென்று அலுவலகத்தில் வைத்தனர்.

திருமங்கலம் உதவி கமிஷனர் ஸ்ரீதர்பாபு, இன்ஸ்பெக்டர் ஜெயச்சந்திரன் தலைமையில் 50க்கும் மேற்பட்ட போலீசார், பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர். ஆக்கிரமிப்பு கடைகளை அகற்றிய அதிகாரிகளுக்கு எதிர்ப்பு தெரிவித்த வியாபாரிகளை, போலீசார் எச்சரித்து அப்புறத்தினர்.இது குறித்து மார்க்கெட் நிர்வாக தலைமை அதிகாரி ராஜேந்திரன் கூறியதாவது:மார்க்கெட்டில் உள்ள கடைக்காரர்கள் மூன்றாண்டுகளுக்கு ஒரு முறை, அவர் களுக்கு வழங்கப்பட்ட லை சென்சை புதுப்பிக்க வேண்டும்.மொத்தமுள்ள மூன்றாயிரத்து 194 கடைகளில், இரண்டாயிரத்து 500 பேர் லைசென்ஸ் புதுப்பிக்க எங்களிடம் விண்ணப்பித்துள்ளனர். மீதமுள்ள 900க்கும் மேற்பட்ட கடைக்காரர்கள், லைசென்சை புதுப்பிக்காவிட்டால், கடைகளுக்கு வழங்கப்பட்ட உரிமம் ரத்து செய்யப்படும்.ஆக்கிரமிப்பு வியாபாரிகளிடம் இருந்து பறிமுதல் செய்யப் பட்ட இலைக் கட்டுகள், தக்காளி மற்றும் காய்கறிகளை, வியாபாரிகளிடம் திரும்ப கொடுக்க இயலாது.அவற்றை, அனாதை குழந்தைகள் வசிக்கும் அலுவலகத்திற்கு இலவசமாக அளிக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.இவ்வாறு அதிகாரி கூறினார்.மூன்று கடைகளுக்கு 'சீல்': சென்னை மாநகராட்சி உதவி சுகாதார அதிகாரி டாக்டர் ரேவதி ரோசாண்ட், துப்புரவு ஆய்வாளர் சதாசிவம், சுகாதார ஆய்வாளர் மாரிராஜ் தலைமையில் சென்ற மாநகராட்சியினர், மார்க்கெட் வளாகத்தில் இருந்த டீ, மிக்சர், ஓட்டல் கடைகளை ஆய்வு செய்தனர்.காய்கறி வியாபாரம் செய்வதற்காக அனுமதி பெற்ற இடத்தில், டீ மற்றும் உணவுப் பண்டங்கள் விற்பனை செய்த மூன்று கடைகளுக்கு, 'சீல்' வைத்தனர்.

Last Updated on Thursday, 18 March 2010 11:25
 

விரல் நுனியில் மதுரை நகர அடிப்படை வசதி விபரங்கள்: 'சாட்டிலைட் சர்வே' 3 மாதத்தில் முடியும்

Print PDF

தினமலர் 17.03.2010

விரல் நுனியில் மதுரை நகர அடிப்படை வசதி விபரங்கள்: 'சாட்டிலைட் சர்வே' 3 மாதத்தில் முடியும்

மதுரை: மதுரை மாநகராட்சி எல்லைக்குள் உள்ள கட்டடங்கள், காலி இடங்கள், குடிநீர் இணைப்புகள் உள்பட அனைத்து அடிப்படை வசதிகள் பற்றிய விபரங்களை இணையதளத்தில் கொண்டு வருவதற்கான, "சாட்டிலைட் சர்வே' நேற்று துவங்கியது.

தமிழகத்தில் உள்ள சில நகரங்களைப் பற்றிய முழு விபரங்களை கம்ப்யூட்டரில் பதிவு செய்து, தேவைப்படும்போது பயன்படுத்துவதற்கான திட்டத்திற்கு உலக வங்கி, கடன் வழங்குகிறது. இத்திட்டத்தின் கீழ் ஏற்கனவே கோவை மாநகராட்சி, ராஜபாளையம், கோபி நகராட்சிகளில் இத்திட்டம் செயல்படுத்தப்பட்டு, முடியும் நிலையில் இருக்கிறது. தற்போது இத்திட்டத்திற்காக "சர்வே' எடுக்கும் பணி மதுரையில் நேற்று முதல் துவங்கியது. இப்பணியை "டாடா கன்சல்டிங் சர்வீசஸ்' (டி.சி.எஸ்.,) நிறுவனம் மேற் கொண்டுள்ளது. 60 பேர், 30 குழுக்களாக பிரிந்து ஒவ்வொரு வீடாக செல்வர். இவர்கள் செல்லும்போது, ஒவ்வொரு கட்டடத்தின் அளவு, வரி விதிக்கப்பட்ட விபரம், அதன் எண், குடியிருப்பா வணிக ரீதியிலானதா, வாடகைக்கு விடப்பட்டுள்ளதா சொந்த உபயோகத்தில் உள்ளதா, குடிநீர் இணைப்பு, பாதாள சாக்கடை இணைப்பு, என்ன வகையான கட்டடம் (குடிசை, ஓடு, கான்கிரீட்), தெருக்களின் அளவு ஆகிய விபரங்கள்; விளையாட்டு மைதானங்கள், பள்ளிகள், சினிமா தியேட்டர்கள், மருத்துவமனைகள், பஸ் ஸ்டாண்டுகள், திருமண மண்டபங்கள் ஆகியவற்றின் அமைவிடங்கள் குறித்த தகவல்கள் சேகரிக்கப்படும். இவற்றைக் கொண்டு ஒரு வரைபடம் தயாரிக்கப்படும்.

சென்னையில் உள்ள மாநில தகவல் மையத்திற்கு இத்தகவல்கள் அனுப்பப்படும். அதன் பிறகு இவை, இணையதளத்தில் ஏற்றப்படும். மாநகராட்சி முக்கிய அதிகாரிகள் எப்போது வேண்டுமானாலும் ஒரு கட்டடத்தைப் பற்றிய விபரங்களை கம்ப்யூட்டரில் "கிளிக்' செய்து அறியலாம். சில குறிப்பிட்ட வரைமுறைக்குள் பொதுமக்களும் விபரங்களை அறியலாம். கட்டட உரிமையாளரின் பெயர், வரி விதிப்பு எண், தெருவின் பெயர் போன்ற விபரத்தில் ஏதாவது ஒன்றை குறிப்பிட்டால் கூட, கட்டடம் பற்றிய முழு விபரத்தை தெரிந்து கொள்ளலாம். இதற்கான "இணையதள' முகவரி பின்னர் அறிவிக்கப்படும். மூன்று மாதங்களுக்குள் இப்பணியை முடிக்க முடிவு செய்யப்பட்டுள்ளது.

இணையதளத்தை பயன்படுத்தும் விதம் குறித்து மாநகராட்சி அலுவலர்களுக்கு "டி.சி.எஸ்.,' நிறுவன அலுவலர்கள் பயிற்சி அளிப்பர். அடுத்த மூன்று ஆண்டுகளுக்கு இந்நிறுவனத்தை சேர்ந்தவர்களே இணையதளத்தை பராமரிப்பர். மேயர் தேன்மொழி, கமிஷனர் செபாஸ்டின் நேற்று இத்திட்டத்தை துவக்கினர். தலைமை பொறியாளர் சக்திவேல், உதவி கமிஷனர் ராஜகாந்தி, மக்கள் தொடர்பு அலுவலர் ஆர்.பாஸ்கரன், செயற்பொறியாளர் சந்திரசேகரன் கலந்துகொண்டனர்.

Last Updated on Wednesday, 17 March 2010 06:32
 


Page 458 of 506