Urban News

  • Increase font size
  • Default font size
  • Decrease font size
Nagara Seithigal - Municipal Administration

ரூ.18 கோடி 'ரிசர்வ் சைட்கள்' மீட்பு : கூடலூர் பேரூராட்சி அதிரடி

Print PDF

தினமலர் 12.03.2010

ரூ.18 கோடி 'ரிசர்வ் சைட்கள்' மீட்பு : கூடலூர் பேரூராட்சி அதிரடி

பெ.நா.பாளையம் ;கூடலூர் பேரூராட்சியில், தனியார் ஆக்கிரமிப்பில் இருந்த 18 கோடி ரூபாய் மதிப்பிலான "ரிசர்வ் சைட்கள்' மீட்கப் பட்டன. கூடலூர் பேரூராட்சியின் 18 வார்டுகளில் ஏராளமான "லே- அவுட்'கள் உள்ளன. ஒவ்வொரு "லே - அவுட்'டின் மொத்த பரப்பில் 10 சதவீத இடம் பொதுமக்களின் பயன்பாட்டுக்காக "ரிசர்வ் சைட்டாக' ஒதுக்கப் பட்டுள்ளது; இவற்றில் பல, தனியார் ஆக்கிரமிப்பில் உள்ளன. சில இடங்களில் "ரிசர்வ் சைட்' இருந்ததற்கான சுவடே இல்லாத அளவுக்கு ஆக்கிரமிக்கப்பட்டுள்ளது. இது குறித்து புகார் வந்ததை தொடர்ந்து, "ரிசர்வ் சைட்'களை கண்டறிந்து, மீட்கும் பணியில் பேரூராட்சி நிர்வாகம் ஈடுபட்டுள்ளது. இதில், ஒன்பதாவது வார்டு சுப்பையா நகரில் 30 சென்ட், இரண்டாவது வார்டு ஸ்ரீகணேஷ் நகரில் 27 சென்ட், ஏழாவது வார்டு நேரு நகரில் 40 சென்ட், எட்டாவது வார்டு சிந்து நகரில் 20 சென்ட், ஏழாவது வார்டு வனிதா நகரில் 18 சென்ட் மற்றும் மற்றொரு லே- அவுட்டில் 17 சென்ட்டில் "ரிசர்வ் சைட்'கள் இருப்பது கண்டறியப்பட்டு கம்பி வேலி அமைக்கும் பணி நடக்கிறது.இதே போன்று பிரிக்கால் நகர், வெங்கடாசலபதி நகர், ஜெயவர்த்தனவேலு நகர், லட்சுமி கார்டன், தேவையம்பாளையம், வஞ்சிமா நகர், பேராசிரியர் காலனி, மாணிக்கவாசக நகர், கே.ஆர்.நகர், சந்திரமணி நகர், விவேகானந்தா நகர், புவனேஸ்வரி நகர், ரங்கநாயகி நகர், பி அண்ட் டி காலனி உள்ளிட்ட 27 இடங்களில் மொத்தம் 952 சென்ட் 84 சதுர அடி அளவில் "ரிசர்வ் சைட்கள்' இருப்பது கண்டறியப்பட்டு, வேலி அமைக்கும் பணி நடக்கிறது. இவற்றின் தற்போதைய மதிப்பு 18 கோடி ரூபாய்.

கூடலூர் பேரூராட்சி செயல்அலுவலர் கல்யாணசுந்தரம் கூறியதாவது, ""பேரூராட்சி அலுவலக ஆவணங்களின் படி "ரிசர்வ் சைட்'கள் மீட்கப்படுகின்றன. ""அந்த இடங்களில் பேரூராட்சி நிதி உதவியில் பூங்கா, சிறுவர் விளையாட்டுத்திடல், சமுதாய கூடம் மற்றும் மக்களின் பயன்பாட் டுக்கான கட்டடங்கள் கட்டப்படும். ""பேரூராட்சிக்கு உட்பட்ட பகுதியில் தனியார் ஆக்கிரமிப்பிலுள்ள, பராமரிப்பற்ற "ரிசர்வ் சைட்'கள் குறித்து பொதுமக்கள் தெரிவிக்கலாம்,'' என்றார்.

Last Updated on Friday, 12 March 2010 07:49
 

நல்லூர் நகராட்சி ஆவணங்கள் ஆய்வு

Print PDF

தினமலர் 11.03.2010

நல்லூர் நகராட்சி ஆவணங்கள் ஆய்வு

திருப்பூர் : நல்லூர் நகராட்சியில் கையாளப் படும் ஆவணங்கள், கடிதங்கள் மற்றும் பெயர் பலகைகளை தமிழ் வளர்ச்சித் துறை அதிகாரி நேற்று ஆய்வு செய்தார்.தமிழ் வளர்ச்சி துறை உதவி இயக்குனர் அன்பு செழியன் (திருப்பூர் பொறுப்பு), நல்லூர் நகராட்சியில் நேற்று ஆய்வு செய்தார். தமிழ் மொழியை, நகராட்சியில் பயன் படுத்தும் விதம் குறித்து ஆய்வு செய்தார். நகராட்சியின் பதிவியல் ஏடுகள், இதர எழுத்து ஆவணங்கள், பெயர் பலகைகள், கடிதங்கள், அறிவிப்புகள், கையொப்பம் என அனைத்து ஆவணங்களையும் ஆய்வு செய்தார்.

அன்புசெழியன் கூறுகையில், ""அனைத்து ஆவணங்கள் முதல் கையொப்பம் வரை தமிழில் இருக்க வேண்டும். ஆவ ணங்களில் தமிழ் மொழியை பயன் படுத்துகிறார்களா என ஆண்டுக்கு ஒருமுறை நகராட்சி அலுவலகங்களில் ஆய்வு செய்யப்படும். அதன்படி, நேற்று ஆய்வு செய்தோம்,'' என்றார்.

Last Updated on Thursday, 11 March 2010 06:51
 

ஜவஹர்லால் நேரு திட்டத்துக்கு பதில் புதிய திட்டம்: மாநகராட்சி கமிஷனர் தகவல்

Print PDF

தினமலர் 11.03.2010

ஜவஹர்லால் நேரு திட்டத்துக்கு பதில் புதிய திட்டம்: மாநகராட்சி கமிஷனர் தகவல்

திருச்சி: ""மத்திய அரசின் ஜவஹர்லால்நேரு தேசிய புனரமைப்புத் திட்டத்துக்கு பதிலாக புதிய திட்டத்தில் திருச்சி மாநகராட்சி சேர்க்கப்பட்டு, நிதி மற்றும் பல்வேறு அம்சங்கள் குறித்து தமிழக அரசு பட்ஜெட்டில் தெரிவிக்கவுள்ளது,'' என்று மாநகராட்சி கமிஷனர் பால்சாமி கூறினார். திருச்சி மாநகராட்சியில் நேற்று நடந்த பட்ஜெட் விவாதக் கூட்டத்தில் கமிஷனர் பால்சாமி பேசியதாவது: திருச்சி பட்ஜெட்டில் பல்வேறு குறைபாடு இருப்பதாக கவுன்சிலர்கள் கருத்து தெரிவித்தனர். ஆனால், மாநகராட்சி பட்ஜெட் காகிதப்பூ அல்ல. உண்மையிலேயே மணக்கும் மல்லிகைப்பூ தான். புதிய வரி இல்லாததுடன், சுமை இல்லாத பட்ஜெட்டாக உள்ளது. "கவுன்சிலர்கள் வெள்ளை அறிக்கை வெளியிட வேண்டும்' என்று கூறினர். பட்ஜெட் புத்தகமே வெள்ளையாக இருப்பதால் தனியாக வெள்ளை அறிக்கை வெளியிட வேண்டியதில்லை. கவுன்சிலர்களின் கோரிக்கையை ஏற்று நவம்பரில் திருத்தியமைக்கப்பட்ட பட்ஜெட் வெளியிடப்பட உள்ளது. மாநகராட்சியில் 169 கோடி ரூபாயில் குடிநீர் அபிவிருத்தி திட்டப் பணிகள் நடந்துவருகிறது. மற்ற மாநகராட்சி போல் இல்லாமல் திருச்சி மாநகராட்சியில் பல்வேறு அடிப்படைப்பணிகள் நடந்துவருகிறது. இதுதவிர, திருச்சி மாநகராட்சியில் நவீன மீன்சந்தை அமைக்க மீன்வளத்துறை இரண்டரை கோடி ரூபாய் அளித்துள்ளது. தொடர்ந்து நவீன மீன் சந்தை அமைக்க இடம் தேர்வு செய்யப்பட்டு வருகிறது.

மாநகரில் பாதாளசாக்கடை திட்டப் பணியும், 24 கோடியே 36 லட்சத்தில் சாலைப்பணியும் நிறைவடைந்துள்ளது. தொடர்ந்து 100 கோடி ரூபாயில் சாலை அமைக்கும் பணி நடந்து வருகிறது. இந்தப்பணிகள் நிறைவடைந்தால் திருச்சி மாநகராட்சியில் சாலை அமைக்க வேண்டிய பணியே இருக்காது என்ற நிலை உருவாகும். மத்திய அரசின் ஜவஹர்லால்நேரு தேசிய புணரமைப்பு திட்டத்தின் கீழ், திருச்சி மாநகராட்சியையும் சேர்க்க வலியுறுத்தி விரிவான திட்ட அறிக்கையும், செய்ய வேண்டிய பணிகள் குறித்தும் மத்திய அரசுக்கு அனுப்பப்பட்டது. திருச்சி மாநகராட்சியில் மக்கள் தொகை குறைவு என்ற காரணத்தால், புதிய பெயரிலான திட்டத்தில் திருச்சி மாநகராட்சி சேர்க்கப்பட உள்ளது. இந்த புதிய திட்டத்தில் திருச்சி மாநகராட்சிக்கு ஒதுக்கப்படும் நிதி உட்பட பல்வேறு அம்சங்கள் குறித்து தமிழக பட்ஜெட்டில் முறையாக அறிவிக்கப்படும். மாநகராட்சியிலுள்ள அனைத்துத் தெருவிளக்குகளும் தனியாரிடம் ஒப்படைக்கப்படவில்லை, ஒரு பகுதி மட்டும் சோதனை முறையில் தனியாரிடம் பராமரிப்புக்காக ஒப்படைக்கப்படும். கோவை, மதுரை மாநகராட்சியில் ஊழியர்களுக்கு சம்பளம் மற்றும் ஒப்பந்தக்காரர்களுக்கு நிதி ஒதுக்க முடியாத நிலையுள்ளது. ஆனால், திருச்சி மாநகராட்சியில் முறையாக இந்தப்பணிகள் நடந்துவருகிறது. இவ்வாறு அவர் கூறினார்.

Last Updated on Thursday, 11 March 2010 06:48
 


Page 459 of 506