Urban News

  • Increase font size
  • Default font size
  • Decrease font size
Nagara Seithigal - Municipal Administration

சமுதாய கூடத்துக்கு விரைவில் இடம் தேர்வு : நகராட்சி தலைவர் தகவல்

Print PDF

தினமலர் 11.03.2010

சமுதாய கூடத்துக்கு விரைவில் இடம் தேர்வு : நகராட்சி தலைவர் தகவல்

குறிச்சி : "பிள்ளையார்புரத்தில், சமுதாயகூடத்திற்கு விரைவில் இடம் தேர்வு செய்யப்பட்டு பணிகள் துவங்கும்' என, நகராட்சித்தலைவர் பிரபாகரன் தெரிவித்தார்.

சுந்தராபுரத்தை அடுத்துள்ள பிள்ளையார்புரத்தில், மாதா கோவில் உள்ளது. அருகிலுள்ள இடத்தில் கட்டுமான பணிகள் நடக்கிறது. இவ்விடம் சமுதாயக்கூடம் கட்ட தேர்வு செய்யப்பட்டது; நாகதேவி கோவில் அங்கு இருந்தது எனக்கூறி, ஒரு பிரிவினர் கட்டுமான பணியை நிறுத்தக் கோரி நகராட்சித் தலைவர் பிரபாகரனிடம் மனு கொடுத்தனர். "அதிகாரிகளிடம் பேசி முடிவெடுக்கப்படும்' என, அவர்களிடம் தலைவர் தெரிவித்தார். மாவட்ட கலெக்டரிடம் அப்பகுதி மக்கள் மனு ஒன்று கொடுத்தனர். அதில், "சர்ச் கட்டப்படும் இடம் சமுதாயக்கூடத்திற்கு ஒதுக்கப்பட்டது; 40 லட்சம் ரூபாய் நிதி ஒதுக்கப்பட்டுள்ளது' என, குறிப்பிட்டிருந்தனர்.

நகராட்சித்தலைவர் பிரபாகரன் கூறியதாவது: சர்ச் கட்டுமான பணி நடக்கும் இடம், அரசால் சர்ச் நிர்வாகத்திற்கு ஒதுக்கப்பட்டுள்ளது. அனைத்து ஆவணங்களும் அவர்களிடம் உள்ளது. இவ்விடத்தில் சமுதாயக்கூடம் கட்டும் திட்டமும் நகராட்சியிடம் கிடையாது; 40 லட்சம் ரூபாய் நிதியும் ஒதுக்கப்படவில்லை. விரைவில் இப்பகுதியில் இடம் பார்க்கப்பட்டு, 25 லட்சம் ரூபாய் மதிப்பில் சமுதாயக்கூடம் கட்டப்படும். இரு பிரிவினருக்கும் எவ்வித பாதிப்புமின்றி இந்நடவடிக்கை மேற்கொள்ளப்படும். இவ்வாறு பிரபாகரன் தெரிவித்தார்.

Last Updated on Thursday, 11 March 2010 06:06
 

மாநகராட்சிக்கு வியாபாரிகள் நன்றி

Print PDF

தினமலர் 10.03.2010

மாநகராட்சிக்கு வியாபாரிகள் நன்றி

கோவை : சுங்கவரி குறைப்புக்கு தமிழக வியாபாரிகள் சம்மேளனம் நன்றி தெரிவித்துள்ளது.அந்த அமைப்பின் அறிக்கை:வியாபாரிகள், பொதுமக்கள் மற்றும் விவசாயிகள் பாதிக்கும் வகையில், தடாகம் ரோடு வாழைக்காய் மண்டி, மேட்டுப்பாளையம் ரோடு அண்ணா தினசரி மார்க்கெட் ஆகியவற்றின் சுங்கவரியை மாநகராட்சி சமீபத்தில் உயர்த்தியது. இவ்வரியை குறைக்க வியாபாரிகள் சம்மேளனம் சார்பில், மாநகராட்சி நிர்வாகத்திடம் கோரிக்கை விடுக்கப்பட்டது. இதை ஏற்ற மாநகராட்சி நிர்வாகம், சுங்கவரியை குறைத்து அரசுக்கு பரிந்துரைத்துள்ளது. இதற்காக, மாநகராட்சி நிர்வாகத்துக்கு நன்றி தெரிவிக்கிறோம்.இவ்வாறு, அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

Last Updated on Wednesday, 10 March 2010 06:23
 

அடுக்குமாடி கட்டடங்களை வரைமுறைப்படுத்த உத்தரவு

Print PDF

தினமணி 03.03.2010

அடுக்குமாடி கட்டடங்களை வரைமுறைப்படுத்த உத்தரவு

பெங்களூர், மார்ச் 2: பெங்களூரில் ஏராளமான அடுக்குமாடிக் கட்டடங்கள் மாநகராட்சி, தீயணைப்புத் துறை விதிமுறைப்படி கட்டப்படவில்லை. அந்த கட்டடங்களை ஜூன் 30-ம் தேதிக்குள் விதிப்படி வரைமுறைப்படுத்த வேண்டும் என்று காவல் துறை உத்தரவிட்டுள்ளது.

இதுகுறித்து நகர காவல் துறை ஆணையர் சங்கர் பிதரி வெளியிட்டுள்ள அறிக்கை:

பெங்களூரில் கார்ல்டன் டவரில் கடந்த 23-ம் தேதி நிகழ்ந்த தீ விபத்தில் 9 பேர் உயிரிழந்தனர். இதுகுறித்து நடத்தப்பட்ட தீவிர விசாரணையில், மாநகராட்சியின் விதிமுறைப்படி கட்டடம் கட்டவில்லை, தீயணைப்பு கருவிகளையும், அவசரகால வழியை பராமரிக்கவில்லை என்று தெரியவந்தது.

இதுபோல நகரில் ஏராளமான கட்டடங்கள் விதிமுறைகளை மீறி கட்டப்பட்டிருப்பதும், மாநகராட்சி, தீயணைப்புத்துறை அனுமதி, சான்றிதழ் இல்லாமல் ஏராளமான கட்டடங்களை வணிக நோக்கில் பயன்படுத்துவதும் தெரியவந்துள்ளது. எனவே, நகரில் உள்ள உயரமான கட்டடங்கள் விதிமுறைப்படி தீயணைப்பு வசதிகளுடன் கட்டப்பட்டுள்ளனவா என்று அறிந்துகொள்ள வேண்டும். விதிகளை மீறி கட்டப்பட்டிருந்தால் அதுகுறித்து அந்த பகுதி காவல் நிலையத்துக்குத் தகவல் கொடுக்க வேண்டும்.

பிறகு விதிப்படி கட்டடத்தை வரும் ஜூன் 30-ம் தேதிக்குள் மாற்றி அமைக்க வேண்டும். தீயணைப்புத் துறை விதிகளை இதுவரை பின்பற்றாத கட்டடங்கள் ஏப்ரல் 30-ம் தேதிக்குள் விதிப்படி மாற்றியமைக்க வேண்டும். அதே தேதிக்குள் தீயணைப்புக் கருவிகளை பழுதுபார்த்து பராமரித்துவைக்க வேண்டும். இனிமேல் கட்டப்படும் உயரமான கட்டடங்கள் மாநகராட்சி, தீயணைப்பு துறை அனுமதியுடன் விதிப்படி கட்ட வேண்டும்.

பொது மக்களின் பாதுகாப்பு நலனைக் கருத்தில் கொண்டு இந்த உத்தரவு பிறப்பிக்கப்படுகிறது. குறிப்பிட்டுள்ள காலக்கெடுவுக்குள் கட்டடங்களை வரைமுறைப்படுத்தாவிட்டால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Last Updated on Wednesday, 03 March 2010 09:47
 


Page 460 of 506