Urban News

  • Increase font size
  • Default font size
  • Decrease font size
Nagara Seithigal - Municipal Administration

கழிவுநீர் இணைப்பு பெறாத ஓட்டலுக்கு 'சீல்'

Print PDF

தினமலர் 14.02.2010

கழிவுநீர் இணைப்பு பெறாத ஓட்டலுக்கு 'சீல்'

சென்னை: முறையாக கழிவு நீர் இணைப்பு பெறாமல், கழிவு நீரை நேரடியாக கூவத்தில் கலக்கச் செய்த ஓட்டலுக்கு, மாநகராட்சியினர் நேற்று "சீல்' வைத்தனர். சென்னை மாநகராட்சியின் சுகாதாரத் துறையினர், நகரில் பல்வேறு இடங்களில் ஓட்டல்கள், டீக்கடைகளில் சோதனை செய்து, சுகாதாரச் சீர்கேடாக செயல்பட்டு வந்த நிறுவனங்கள் மீது நடவடிக்கை எடுத்தனர். இதில், 40க்கும் மேற்பட்ட ஓட்டல்கள், டீக்கடைகளுக்கு "சீல்' வைத்து மாநகராட்சியினர் நடவடிக்கை எடுத்தனர். சுகாதாரத் துறையினர் தொடர்ந்து ஓட்டல்களிலும், டீக்கடைகளிலும் சோதனை நடத்தி வருகின்றனர். அதுபோல், கீழ்பாக்கம் மண்டல உதவி சுகாதார அதிகாரி ரேவதி தலைமையிலான குழுவினர் நேற்று கோயம்பேடு - பூந்தமல்லி நெடுஞ்சாலையில் 10 வருடங்களாக செயல்பட்டு வரும், "ஷான் ராயல்' ஓட்டலில் சோதனை செய்தனர்.

இந்தச் சோதனையில், ஆறு மாடிக் கட்டடத்தில் செயல்படும் அந்த ஓட்டலுக்கு முறைப்படி கழிவு நீர் இணைப்பு பெறாமல், அனைத்து வகையான கழிவு நீரையும், நேரடியாக பின்புறத்தில் உள்ள கூவம் ஆற்றில் விட்டிருப்பது தெரிந்தது. சுகாதாரச் சீர்கேடு ஏற்படுத்தும் வகையில் கழிவு நீரை கூவத்தில் விட்டதற்கு, மாநகராட்சி சட்ட விதிப்படியும், தமிழக பொது சுகாதார சட்டப்படியும், சுகாதாரத் துறையினர் நோட்டீஸ் கொடுத்தனர். அதோடு, ஓட்டலின் சமையல் அறைக்கும், உணவகத்திற்கும் "சீல்' வைத்தனர். இந்த ஓட்டல் நிர்வாகத்தினர், 16 லட்சம் ரூபாய் அளவிற்கு சொத்து வரி செலுத்தாமல் பாக்கி வைத்திருப்பதாகவும் மாநகராட்சியினர் தெரிவித்தனர்.

 

ஒசூர் பஸ் நிலையக் கடைகளுக்கு 4-ம் கட்ட ஏலம்

Print PDF

தினமணி 12.02.2010

ஒசூர் பஸ் நிலையக் கடைகளுக்கு 4-ம் கட்ட ஏலம்

ஒசூர், பிப்.11: ஒசூர் புதிய பஸ் நிலையக் கடைகளுக்கான 4-ம் கட்ட ஏலம் ஒசூர் சார்-ஆட்சியர் அலுவலகத்தில் வியாழக்கிழமை நடைபெற்றது. ஏலத்துக்கு சென்னை நகராட்சி நிர்வாக இணை இயக்குநர் சந்திரசேகரன் முன்னிலை வகித்தார். ஒசூர் நகராட்சி ஆணையர் பன்னீர்செல்வம் தலைமை ஏற்றார். இதில் எட்டு கடைகள் ஏலம் போனது. ரூ.19,000 முதல் ரூ.24,000 வரையில் கடைகளை வியாபாரிகள் ஏலத்தில் எடுத்தனர்.

இது குறித்து சந்திரசேகரன் கூறியது:

உலக தரத்துடன் கூடிய நவீன பஸ் நிலையம் ஒசூரில் அமைக்கப்பட்டு வருகிறது. இந்த பஸ் நிலைய கடைகளுக்கு முன் ஏலம் 4 முறை நடத்தப்பட்டுள்ளது. பஸ் நிலையத்தின் கீழ் தளத்தில் உள்ள கடைகளை மட்டுமே தற்பொழுது ஏலத்தில் எடுத்துள்ளனர். மேல் தளத்தில் உள்ள கடைகளுக்கு ஏலம் கோர யாரும் முன்வரவில்லை. எனவே மீண்டும் ஏலம் விரைவில் நடத்தப்படும்.

ஒசூர் பஸ் நிலையப் பணிகள் தற்பொழுது 80 சதவீதம் முடிந்து விட்டன. இன்னும் ஒரு சில மாதங்களில் ஒசூர் பஸ் நிலையம் மக்களின் பயன்பாட்டுக்குத் திறந்து வைக்கப்படும். தமிழக துணை முதல்வர் மு..ஸ்டாலின் திறந்து வைப்பார் என்றார் அவர். சேலம் மண்டல நகராட்சி நிர்வாக இயக்குநர் செüந்தர்ராஜன் உள்ளிட்டோர் உடனிருந்தனர்.

 

ஆக்கிரமிப்புகள் அதிகரித்து வருவதால் வியாபாரிகளுக்கு அடையாள அட்டை

Print PDF

தினமலர் 12.02.2010

ஆக்கிரமிப்புகள் அதிகரித்து வருவதால் வியாபாரிகளுக்கு அடையாள அட்டை

உடுமலை : உடுமலையில் ஆக்கிரமிப்புகள் தொடர்ந்து அதிகரித்து வருவதால், ரோட்டோர வியாபாரிகளுக்கு அடையாள அட்டை வழங்கி, மாற்று இடம் வழங்க அதிகாரிகள் முடிவு செய்துள்ளனர். உடுமலை பகுதி முக்கிய ரோடுகள் குறுகலாக உள்ளதோடு, ஆக்கிரமிப்பு கடைகளால் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு வருகிறது. பஸ் ஸ்டாண்ட், பொள்ளாச்சி ரோடு, ராஜேந்திரா ரோடு, கல்பனா ரோடு, வெங்கடகிருஷ்ணா ரோடு, சத்திரம் வீதி உட்பட அனைத்து ரோடுகளிலும் ஆக்கிரமிப்பு கடைகள் அதிகரித்துள்ளன. இரண்டு மாதத்துக்கு முன், ஆக்கிரமிப்புகள் அகற்றும் பணி நடந்தது. பாரபட்சமாக ஆக்கிரமிப்பு அகற்றம், அரசியல் தலையீடு காரணமாக, மீண்டும் ஆக்கிரமிப்புகள் அதிகரித்தது. ஆக்கிரமிப்பை அகற்றுவதற்கு முன்பு இருந்ததை விட, தற்போது மேலும் ஆக்கிரமிப்புகள் அதிகரித்து, போக்குவரத்து நெரிசல் மற்றும் விபத்துகளை ஏற்படுத்தி வருகிறது.

ரோட்டோரங்களில் கடைகள் அமைத்திருந்தவர்களும், பல ஆண்டுகளாக இதை நம்பியிருக்கும் தங்களுக்கு, வேறு வழியில்லை என தெரிவித்து வந்தனர். இந்நிலையில், ரோடுகளை ஆக்கிரமித்து கடைகள் அமைத்துள்ளவர்கள் குறித்து கணக்கெடுக்கவும், அவர்களுக்கு அடையாள அட்டை வழங்கவும் நகராட்சிகள் மண்டல அலுவலகம் உத்தரவிட்டுள்ளது.

இதன் அடிப்படையில், நகராட்சி அதிகாரிகள் தற்போது ரோட்டோர கடைகள் குறித்தும், அதன் உரிமையாளர்கள் குறித்தும் கணக்கெடுத்து வருகின்றனர். கடை உரிமையாளர்களிடம் படிவங்கள் கொடுத்து தகவல் சேகரித்து, போட்டோக்கள் பெற்றும் வருகின்றனர். நகராட்சி அதிகாரிகள் கூறியதாவது:ரோட்டோரங்களை நம்பி பிழைத்து வருவோரின் வாழ்வாதாரங்களை காக்கும் வகையிலும், போக்குவரத்து நெரிசலை ஏற்படுத்தி வரும் ஆக்கிரமிப்புகளை அகற்றும் வகையிலும் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. முதல்கட்டமாக அடையாள அட்டைகள் வழங்கப்பட்டு, பொதுமக்கள் வந்து செல்லும் இடத்தை தேர்வு செய்து, மாற்று இடம் வழங்கப் படும், என்றனர்.

Last Updated on Friday, 12 February 2010 07:50
 


Page 463 of 506