Urban News

  • Increase font size
  • Default font size
  • Decrease font size
Nagara Seithigal - Municipal Administration

நகராட்சி கடைகள் கூடுதல் வாடகைக்கு ஏலம்

Print PDF

தினமலர் 12.02.2010

நகராட்சி கடைகள் கூடுதல் வாடகைக்கு ஏலம்

ஓசூர்: ஓசூரில் நேற்று நான்காவது முறையாக நடந்த நகராட்சி புது பஸ்ஸ்டாண்ட் கடை ஏலத்தில், கடைகளை ஏலம் எடுக்க வியாபாரிகள் மத்தியில் கடும் போட்டி நிலவியது. 23,000 ரூபாய் மாத வாடகைக்கு கடைகள் ஏலம்போனது. அதனால், நகராட்சிக்கு நிரந்தர கூடுதல் வருமானம் கிடைக்கும் வாய்ப்பு ஏற்பட்டுள்ளது.

ஓசூர் நகராட்சி புது பஸ்ஸ்டாண்ட் 10 கோடி ரூபாயில் போக்குவரத்து முக்கியத்துவம் வாய்ந்த பெங்களூரு நான்கு வழிச்சாலையில் கட்டப்படுகிறது. நகராட்சியில் தற்போது நிலவும் கடும் நிதி பற்றாக்குறையால் பஸ் ஸ்டாண்ட் பணியில் தேக்கம் ஏற்பட்டது.நிதி பற்றாக்குறை சமாளிக்க பஸ் ஸ்டாண்டில் கட்டப்படும் 76 கடை, இரு ஹோட்டல்களை ஏலம்விட்டு, அதன் மூலம் கிடைக்கும் வருமானத்தின் மூலம் பஸ் ஸ்டாண்ட் கட்டுமான பணிகளை விரைவில் முடிக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுத்தனர்.

புது பஸ்ஸ்டாண்ட் கடை ஏலம் கடந்த செப்டம்பர் மாதம் முதல் மூன்று முறை நடந்தது. வியாபாரிகள் எதிர்பார்த்த அளவு கலந்து கொள்ளவில்லை. ஐந்து கடை மட்டும் ஏலம் போனது. நான்காவது முறையாக ஓசூர் சப்-கலெக்டர் அலுவலகத்தில் ஏலம் நடந்தது. ஏல நடவடிக்கை அனைத்தும் வீடியோ மூலம் பதிவு செய்யப்பட்டது.

நகராட்சி நிர்வாக கூடுதல் இயக்குனர் சந்திரசேகரன் தலைமை வகித்தார். மண்டல இயக்குனர் சவுந்தரராஜன், நகராட்சி கமிஷனர்கள் பவுலோஸ் (கிருஷ்ணகிரி), பன்னீர் செல்வம் (ஒசூர்) ஆகியோர் முன்னிலை வகித்தனர். வியாபாரிகள் ஆர்வமாக கலந்து கொண்டு கடைகளை போட்டி போட்டு ஏலம் எடுத்தனர்.

மொத்தம் இரு ஹோட்டல்கள், 71 கடைகள் ஏலம் விடப்பட்டது. கீழ் தளத்தில் உள்ள முக்கியத்துவம் வாய்ந்த கடைகளை ஏலம் எடுக்க வியாபாரிகள் மத்தியில் கடும் போட்டி நிலவியது.

கடை எண் ஒன்று மற்றும் மூன்று 19,000 ரூபாய்க்கும், நான்காம் எண் கடை 21,690 ரூபாய்க்கும், ஐந்தாம் எண் கடை 23,900க்கும், ஆறாம் எண் கடை 20,000, ஏழாம் எண் கடை 20,500 கடை எண் 11, 17,700க்கும், 42ம் நம்பர் கடை 21,200 ரூபாய்க்கும், 45 நம்பர் கடை 21,700க்கும் ஏலம் போனது. மேல்தளத்தில் உள்ள கடைகள் 4,000 முதல் 4,800 ரூபாய் வரை மாத வாடகைக்கு ஏலம் போனது.

ஏலம் போன 15 கடைகள் அனைத்தும் அதிக மாத வாடகைக்கு ஏலம் போனதால், நகராட்சிக்கு முன் வைப்பு தொகை மூலம் ஐந்து கோடிக்கு மேல் வருமானம் கிடைத்துள்ளது. மாத வாடகை மூலம் நகராட்சிக்கு நிரந்தர வருமானமும் கிடைக்க வாய்ப்பு உள்ளதால், அதிகாரிகள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.

Last Updated on Friday, 12 February 2010 07:26
 

ஆக்கிரமிப்பு அதிகரித்து வருவதால் வியாபாரிகளுக்கு அடையாள அட்டை : அதிகாரிகள் முடிவு

Print PDF

தினமலர் 11.02.2010

ஆக்கிரமிப்பு அதிகரித்து வருவதால் வியாபாரிகளுக்கு அடையாள அட்டை : அதிகாரிகள் முடிவு

உடுமலை: உடுமலை நகரில் ஆக்கிரமிப்புகள் தொடர்ந்து அதிகரித்து வருவதால், ரோட்டோர வியாபாரிகளுக்கு அடையாள அட்டை வழங்கி, மாற்று இடம் வழங்க அதிகாரிகள் முடிவு செய்துள்ளனர்.

உடுமலை நகரத்திலுள்ள முக்கிய ரோடுகள் அனைத்தும் குறுகலாக உள்ளதோடு, ஆக்கிரமிப்பு கடைகளால் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு வருகிறது. உடுமலை பஸ் ஸ்டாண்ட், பொள்ளாச்சி ரோடு, ராஜேந்திரா ரோடு, கல்பனா ரோடு, வெங்கடகிருஷ்ணா ரோடு, சத்திரம் வீதி உட்பட அனைத்து ரோடுகளிலும் ஆக்கிரமிப்பு கடைகள் அதிகரித்துள்ளது.நகராட்சி அதிகாரிகளால், இரண்டு மாதத்திற்கு முன்பு ஆக்கிரமிப்புகள் அகற்றும் பணி நடந்தது. பாரபட்சமாக ஆக்கிரமிப்பு அகற்றம், அரசியல் தலையீடுகள் காரணமாக, மீண்டும் ஆக்கிரமிப்புகள் அதிகரித்தது. ஆக்கிரமிப்பு அகற்றுவதற்கு முன்பு இருந்ததை விட தற்போது மேலும் ஆக்கிரமிப்புகள் அதிகரித்து, போக்குவரத்து நெரிசல் மற்றும் விபத்துக்களை ஏற்படுத்தி வருகிறது.ரோட்டோரங்களில் கடைகள் அமைத்திருந்தவர்களும், பல ஆண்டுகளாக இதனை நம்பியிருக்கும் தங்களுக்கு, வேறு வழியில்லை என தெரிவித்து வந்தனர். இந்நிலையில், ரோடுகளை ஆக்கிரமித்து கடைகள் அமைத்துள்ளவர்கள் குறித்து கணக்கெடுக்கவும், அவர்களுக்கு அடையாள அட்டை வழங்கவும் நகராட்சிகள் மண்டல அலுவலகம் உத்தரவிட்டுள்ளது.இதன் அடிப்படையில், நகராட்சி அதிகாரிகள் தற்போது ரோட்டோர கடைகள் குறித்தும், அதன் உரிமையாளர்கள் குறித்தும் கணக்கெடுத்து வருகின்றனர். கடை உரிமையாளர்களிடம் படிவங்கள் கொடுத்து தகவல் சேகரித்து, போட்டோக்கள் பெற்றும் வருகின்றனர். நகராட்சி அதிகாரிகள் கூறியதாவது :ரோட்டோரங்களை நம்பி பிழைத்து வருபவர்களின் வாழ்வாதாரங்களை காக்கும் வகையிலும், போக்குவரத்து நெரிசலை ஏற்படுத்தி வரும் ஆக்கிரமிப்புகளை அகற்றும் வகையிலும் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. முதல் கட்டமாக அடையாள அட்டைகள் வழங்கப்பட்டு; பொது மக்கள் வந்து செல்லும் இடத்தை தேர்வு செய்து, மாற்று இடமாக வழங்கப்படும் என்றனர்.

Last Updated on Thursday, 11 February 2010 08:49
 

சாலையோரங்களில் குப்பைகளை கொட்டினால் கடும் நடவடிக்கை ஆட்சியர் எச்சரிக்கை

Print PDF

தினமணி 10.02.2010

சாலையோரங்களில் குப்பைகளை கொட்டினால் கடும் நடவடிக்கை ஆட்சியர் எச்சரிக்கை

காஞ்சிபுரம்
, பிப். 9: சாலையோரங்களில் குப்பைகளை கொட்டினால் பொதுமக்கள் புகார் தெரிவிக்கலாம் என்றும், குப்பை கொட்டுபவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் மாவட்ட ஆட்சியர் சந்தோஷ் கே.மிஸ்ரா தெரிவித்தார். ÷இது குறித்து நிருபர்களுக்கு அவர் செவ்வாய்க்கிழமை அளித்த பேட்டி:

÷காஞ்சிபுரம் மாவட்டத்தில் உள்ள 24 பேரூராட்சிகளில் சிட்லபாக்கம், குன்றத்தூர், நந்தம்பாக்கம், பெருங்களத்தூர், சோழங்கநல்லூர், மாங்காடு, செம்பாக்கம், திருநீர்மலை, மாடம்பாக்கம், பெருங்குடி, பீர்க்கன்கரனை, பள்ளிக்கரணை மற்றும் மீனம்பாக்கம் ஆகிய பேரூராட்சிகள் சென்னையை சுற்றியுள்ளன.

இவைகள் தவிர சென்னை சுற்றி முக்கிய சாலைகளில் பூந்தமல்லி, திருவேற்காடு நகராட்சிகளும், 30 ஊராட்சிகளும் அமைந்துள்ளன.

÷சென்னையை சுற்றியுள்ள 13 பேரூராட்சிகளில் மட்டும் 98 டன் குப்பை சேர்கிறது. இதில் மக்கும் குப்பை 20 டன் எருவாக்கப்படுகிறது. மக்காத குப்பை 78 டன் குப்பைகள் அந்த பேரூராட்சியின் குப்பை சேகரிக்கும் தளத்தில் கொட்டப்படுகிறது.

அதுபோக மீதமுள்ள 50 டன் குப்பை கொட்டுவதற்கு இடமில்லாததால் சோழிங்கநல்லூர் பகுதியில் 10 பேரூராட்டசிகளுக்கு, 10 ஏக்கர் நிலமும், 30 ஊராட்சிகளுக்கு 10 ஏக்கர் நிலமும், நகராட்சிகளுக்கு 5 ஏக்கர் நிலமும் ஆக 25 ஏக்கர் நிலமும் ஒதுக்கீடு செய்து நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. ÷சென்னையை ஒட்டியுள்ள முக்கிய சாலையான பெங்களூர் - சென்னை சாலை, பழைய மாமல்லபுரம் சாலை ஓரங்களில் கொட்டப்பட்டுள்ள குப்பையை பிப்ரவரி 15-ம் தேதிக்குள் அகற்றிவிட்டு தகவல் தர நகராட்சி ஆணையர்கள், பேரூராட்சி செயல் அலுவலர்கள் மற்றும் ஊராட்சி தலைவர்கள் ஆகியோருக்கு வலியுறுத்தப்பட்டுள்ளது.

÷அவ்வாறு குப்பை அகற்றப்படும் இடங்களில் மீண்டும் குப்பை கொட்டப்படாமல் பார்த்துக் கொள்ள வேண்டும். தவறினால் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும்.

சில நிறுவனங்கள் சாலைகளில் குப்பைகளை கொட்டுகின்றன. பெரும்பாலும் நள்ளிரவு நேரங்களில் இதுபோல் குப்பைகள் கொட்டப்படுகின்றன.

இதுபோல் குப்பைகளை யாராவது கொட்டினால் 8870803555 என்ற செல்போன் எண்ணில் தொடர்பு கொண்டு தெரிவிக்கலாம் என்றார்.

அவ்வாறு லாரியில் கொண்டு வந்து குப்பை கொட்டும்போது பிடிபட்டாலோ, ஆதாரத்துடன் சிக்கினாலோ அந்த வாகனத்தின் உரிமம், ஓட்டுநர் உரிமம் ஆகியவை ரத்து செய்யப்படும் என்றார்.

Last Updated on Wednesday, 10 February 2010 11:06
 


Page 464 of 506