தினமணி 21.01.2010
மாட்டுத்தாவணி பஸ் நிலைய வளாகத்தில் வாடகை நிலுவை செலுத்தாத 53 கடைகளுக்கு சீல்
மதுரை, ஜன. 20: மதுரை மாட்டுத்தாவணி பஸ் நிலைய வளாகத்தில் உள்ள 53 கடைகள், வாடகை நிலுவைத் தொகை செலுத்தாத காரணத்தால் புதன்கிழமை மாநகராட்சி அதிகாரிகளால் பூட்டி சீல் வைக்கப்பட்டன.
மாவட்டுத்தாவணி ஒருங்கிணைந்த பஸ் நிலைய வளாகத்தில் மாநகராட்சி மூலம் மாதாந்திர வாடகை அடிப்படையில் 193 கடைகள் கட்டப்பட்டு செயல்பட்டு வருகின்றன.
இக்கடைகளில் கடந்த 5 ஆண்டுகளாக ரூ.1 கோடி வரை நிலுவைத் தொகை பாக்கி இருந்து வருகிறது. ரூ.40 ஆயிரத்துக்கும் மேல் வாடகை பாக்கித் தொகை உள்ள 53 கடைகளில் உதவி ஆணையர்கள் ரா.பாஸ்கரன் (வருவாய்), ராஜாகாந்தி (வடக்கு) ஆகியோர் தலைமையில் சோதனை மேற்கொள்ளப்பட்டது.
இதையடுத்து, 53 கடைகளும் பூட்டி சீல் வைக்கப்பட்டு, மாநகராட்சி நிர்வாகத்தின் பொறுப்பில் எடுக்கப்பட்டத்தில் ரூ.7.50 லட்சம் வரை வசூல் செய்யப்பட்டுள்ளது.
இச் சோதனையின்போது கட்டட ஆய்வாளர்கள் சுப்பிரமணியன், சுப்புராம், சந்தைக் கண்காணிப்பாளர் பழனிவேலு உள்ளிட்டோர் உடனிருந்தனர்.
நிலுவைத் தொகையை உடனடியாக செலுத்தி, கடைகள் பூட்டும் நடவடிக்கைகளை தவிர்க்குமாறு கடைக்காரர்களை மாநகராட்சி கமிஷனர் எஸ்.செபாஸ்டின் கேட்டுக்கொண்டுள்ளார்.