தினமணி 04.12.2009
பேரூராட்சி வளர்ச்சிப் பணி: மாவட்ட ஆட்சியர் ஆய்வு
திண்டுக்கல், டிச. 3:கன்னிவாடி, சேவுகம்பட்டி பேரூராட்சிகளில் வளர்ச்சிப் பணிகளை மாவட்ட ஆட்சியர் மா.வள்ளலார் ஆய்வு செய்தார்.
கன்னிவாடியில் 2008-09 ஆம் ஆண்டில் அனைத்து ஊராட்சி அண்ணா மறுமலர்ச்சி திட்டத்தின் மூலம் கட்டி முடிக்கப்பட்ட சுகாதார வளாக கழிப்பறைகளையும், 2007-08 ஆம் நிதியாண்டில் 12 ஆவது நிதிக் குழு திட்டத்தின் கீழ் கட்டி முடிக்கப்பட்ட திடக்கழிவு உர மேலாண்மை உரக் கிடங்கையும் ஆட்சியர் ஆய்வு செய்தார்.
மக்கும் குப்பை மூலம் உரம் தயாரிக்கும் பணியையும், தயாரிக்கப்படும் விதம் குறித்தும் கேட்டறிந்தார். வின்ரோ முறையை பின்பற்றி உரம் தயாரிக்கவும் இந்தப் பணிக்குப் பயன்படுத்த ஏதுவாக பாப்கேட் என்ற இயந்திரத்தை வாங்கி உபயோகிக்கவும் அறிவுரை வழங்கினார்.
குப்பைகளைத் தரம் பிரிக்கும் பணியில் ஈடுபடும் துப்புரவுப் பணியாளர்களுக்கு சுகாதாரக் கேடு விளைவிக்காத வகையில் பாதுகாப்புடன் பணியாற்றும் வகையில் கையுறை, ஷூ அணிந்து பணியாற்றுமாறு அறிவுரை வழங்கினார்.
சேவுகம்பட்டியில் ரூ.15 லட்சத்தில் அனைத்துப் பேரூராட்சி அண்ணா மறுமலர்ச்சித் திட்டத்தின் கீழ் எம்.வாடிப்பட்டி அருகில் கட்டப்பட்டு வரும் சமுதாயக் கூடத்தைப் பார்வையிட்டார்.
2009-10 ஆண்டிற்கான பொது திட்டத்தின் கீழ் ரூ.2.5 லட்சம் செலவில் கட்டப்பட்ட பெண்கள் நவீன கழிப்பறையைப் பார்வையிட்டு மேற்கூரையில் தட்டோடு பதிக்குமாறு அறிவுறுத்தினார்.
இந்த ஆய்வின் போது பேரூராட்சிகள் உதவி இயக்குநர் குப்புராஜ், செயல் அலுவலர்கள் கோபி, காதர்மைதீன் ஆகியோர் உடனிருந்தனர்.