தினமணி 01.12.2009
டிச. 31-க்குள் பாதாளச் சாக்கடை இணைப்புபெற ஆணையர் வேண்டுகோள்
மதுரை, நவ. 30: மதுரை மாநகரில் பாதாளச் சாக்கடை இணைப்பு பெறாமல் உள்ள வீட்டு, வணிக நிறுவனங்களின் உரிமையாளர்கள் டிச. 31-ம் தேதிக்குள் இணைப்பை பெறுமாறு மாநகராட்சி ஆணையர் எஸ். செபாஸ்டின் கேட்டுக்கொண்டுள்ளார்.
அவ்வாறு இணைப்பு பெறாதவர்களுக்கு அபராதம் விதிக்கப்படும் என்றும் அவர் எச்சரித்துள்ளார்.
இதுகுறித்து மாநகராட்சி ஆணையர் எஸ். செபாஸ்டின் திங்கள்கிழமை வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு:
மதுரை மாநகராட்சியில் தேசிய நதிநீர் பாதுகாப்புத் திட்டத்தின்கீழ் சென்னை பெருநகர குடிநீர் வழங்கல் மற்றும் கழிவுநீர் அகற்றும் வாரியம் மூலம் மதுரையில் பாதாளச் சாக்கடை அமைக்கும் பணிகள் நிறைவேற்றப்பட்டு, மாநகராட்சி வசம் ஒப்படைக்கப்பட்டுள்ளது.
நகரில் பாதாளச் சாக்கடை பணிகள் முழுமையாக நிறைவடைந்த பிறகும் வீடுகள், வணிக வளாகப் பகுதிகளில் இருந்து வெளியேறும் கழிவுநீர் மாநகராட்சி மழைநீர் கால்வாயுடன் நேரடியாக இணைக்கப்பட்டுள்ளது தெரியவந்துள்ளது.
இதனால் கால்வாய் நிரம்பி அப்பகுதிகளில் பெரும் சுகாதாரக் கேடான நிலை ஏற்பட்டுள்ளது.
தற்போது பாதாளச் சாக்கடை திட்டம் அனைத்து வார்டுகளிலும் செயல்பாட்டிற்கு கொண்டுவரப்பட்டுள்ளது.
இதனால் வீடுகளில் இருந்து வெளியேறும் கழிவுநீர் பாதாளச் சாக்கடை இணைப்பு வழியாக மட்டுமே வெளியேற்றப்படவேண்டும்.
மதுரை மாநகரில் பாதாளச் சாக்கடை இணைப்பு பெறாமல் உள்ள வீட்டு, வணிக உரிமையாளர்கள் டிச. 31-ம் தேதிக்குள் இணைப்பைப் பெறவேண்டும்.
அவ்வாறு இணைப்பு பெறாதவர்களுக்கு அபராதம் விதிக்கப்படும் என்றும் ஆணையர் எச்சரித்துள்ளார்.