Urban News

  • Increase font size
  • Default font size
  • Decrease font size
Nagara Seithigal - Municipal Administration

ஒட்டன்சத்திரத்தில் தரைப்பாலம் அமைக்க ஆய்வு

Print PDF

தினமணி 07.11.2009

ஒட்டன்சத்திரத்தில் தரைப்பாலம் அமைக்க ஆய்வு

ஒட்டன்சத்திரம், நவ. 6: ஒட்டன்சத்திரம் காந்தி நகர் செல்ல தரைப்பாலம் அமைக்க தென்னக ரயில்வே மதுரை மண்டல மேலாளர் அசோக் சிங்கால், அரசுத் தலைமை கொறடா அர. சக்கரபாணி, என்.எஸ்.வி. சித்தன் எம்.பி. ஆகியோர் நேரில் ஆய்வு செய்தனர்.

ஒட்டன்சத்திரம் காந்தி நகரில் 10 ஆயிரத்துக்கும் அதிகமான மக்கள் வசிக்கின்றனர். இவர்கள் திண்டுக்கல்-பழனி செல்லும் ரயில்வே பாதையைக் கடந்து செல்ல வேண்டிய சூழ்நிலை உள்ளது.

இந் நிலையில், ஒட்டன்சத்திரம் சட்டமன்ற உறுப்பினர் அர. சக்கரபாணியிடம், தரைப்பாலம் அமைக்க வேண்டும் என்று இப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்தனர்.

இது குறித்து மதுரை தென்னக ரயில்வே அதிகாரிகளிடம் அர. சக்கரபாணி, என்.எஸ்.வி. சித்தன் எம்.பி. ஆகியோர் எடுத்துக் கூறினர். இதைத் தொடர்ந்து வெள்ளிக்கிழமை மதுரை மண்டல மேலாளர் அசோக் சிங்கால், மதுரை கட்டுமான துணைப் பொறியாளர் தினேஷ்குமார்சிங், அரசு தலைமைக் கொறடா அர. சக்கரபாணி, என்.எஸ்.வி. சித்தன் எம்.பி., திண்டுக்கல் சரக கட்டுமான செயற்பொறியாளர் பூபதி, கோட்டப் பொறியாளர் குமார் ஆகியோர் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தனர்.

இது குறித்து மதுரை மண்டல மேலாளர் அசோக் சிங்கால் கூறியதாவது:

திண்டுக்கல்-போத்தனூர் வரை அகலப்பாதை அமைக்கும் பணி தற்போது நடைபெறுகிறது. ஒட்டன்சத்திரம் காந்தி நகர் பொதுமக்களின் கோரிக்கையின்படி 33-வது ரயில்வே கேட் பாதையை நிரந்தரமாக மூடிவிட்டு, அதற்கு மாற்றாக காந்தி நகர் குடியிருப்பு மக்களுக்காக ரயில்வே பாதையின் 32-வது கிலோ மீட்டரில் தரைப்பாலம் அமைக்க ஆய்வு செய்யப்படுகிறது.

இது முடிந்த பின்னர் பணிகள் விரைவில் தொடங்கப்படும் என்றார்.

ஆய்வின்போது ஒட்டன்சத்திரம் பேரூராட்சித் தலைவர் உமாமகேஸ்வரி கண்ணன், பேரூராட்சி செயல் அலுவலர் ஜெயக்கொடி, பேரூராட்சிக் கவுன்சிலர்கள் பி.கே. முருகேசன், பழனியம்மாள் ராசியப்பன், சின்னம்மாள் கோபால், ஆனந்தன், திருமலைசாமி, பேரூர் திமுக செயலாளர் கதிர்வேல்சாமி உள்பட பலர் உடனிருந்தனர்.

 

பஸ் நிலையத்துக்கு அண்ணா பெயர்

Print PDF

தினமணி 6.11.2009

பஸ் நிலையத்துக்கு அண்ணா பெயர்

அம்பாசமுத்திரம், நவ. 5: கல்லிடைக்குறிச்சி பஸ் நிலையத்துக்கு அண்ணா பெயர் வைக்க முடிவு செய்யப்பட்டுள்ளதாக பேரூராட்சி மன்றத் தலைவர் க. இசக்கிபாண்டியன் புதன்கிழமை தெரிவித்தார்.

கல்லிடைக்குறிச்சி புதிய பஸ் நிலையத்துக்குள் அனைத்து பஸ்களும் வந்து செல்லும் வகையில் அண்ணா மறுமலர்ச்சி திட்டத்தின்கீழ் சிமெண்ட் தளம் அமைக்கப்பட்டு வருகிறது. மேலும், பஸ் நிலையத்துக்கு அண்ணா பெயர் சூட்டவும் தீர்மானிக்கப்பட்டுள்ளது.

எஸ்.எஸ். ராமசுப்பு எம்.பி. நிதியில் இருந்து ரூ. 5 லட்சம் நிதி ஒதுக்கீடு செய்துள்ளார். இந்நிதி போக பேரூராட்சி பொதுநிதியில் இருந்து ரூ. 3 லட்சம் சேர்த்து ரூ. 8 லட்சத்தில் குடிநீர்த் தொட்டிக்கு பைப் லைன் அமைக்கப்படுகிறது.

மேலும், தொகுதி மேம்பாட்டு நிதியில் இருந்து பா. வேல்துரை எம்எல்ஏ ரூ. 8.50 லட்சம் நிதி ஒதுக்கீடு செய்துள்ளார். அந்நிதியில் இருந்து சிமெண்ட் தளம் அமைக்கவும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

பஸ் நிலையத்தின் முகப்பில் வளைவு அமைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. பேரூராட்சியில் குடிநீர்க் கட்டணம் வசூலிக்கும் பணி அதிகரித்து வருவதால், குடிநீர்க் கட்டணத்தை கணினி மூலம் வசூலிக்கும் வகையில் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என்றார் பேரூராட்சித் தலைவர் க. இசக்கிபாண்டியன்.

Last Updated on Friday, 06 November 2009 06:38
 

ராஜபாளையம் நகராட்சி ஆணையர் வேண்டுகோள்

Print PDF

தினமணி 6.11.2009

ராஜபாளையம் நகராட்சி ஆணையர் வேண்டுகோள்

ராஜபாளையம், நவ.5: ராஜபாளையம் நகராட்சிக்குச் செலுத்த வேண்டிய குடிநீர்க் கட்டணம், குத்தகை தொகை, உரிம கட்டணம் முதலியவற்றை காலமதாமதமின்றி நகராட்சி அலுவலகத்தில் உள்ள கணினி மையத்தில் இம் மாதம் 15-ம் தேதிக்குள் கட்டுமாறு ராஜபாளையம் நகராட்சி ஆணையர் சித்திக் கேட்டுக்கொண்டுள்ளார்.

வரிகளைக் கட்டத் தவறினால் சட்ட ரீதியான நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்றும் அவர் அறிவித்துள்ளார்.

Last Updated on Friday, 06 November 2009 06:26
 


Page 488 of 506