தினமணி 10.09.2009
மத்திய பேருந்து நிலையத்தில் மாநகராட்சி ஆணையர் ஆய்வு
திருச்சி, செப். 9: திருச்சி மத்திய பேருந்து நிலையத்தில் மாநகராட்சி ஆணையர் த.தி. பால்சாமி புதன்கிழமை ஆய்வு மேற்கொண்டார்.
பேருந்து நிலையத்தில் சேகரமாகும் குப்பைகள் அவ்வப்போது அகற்றப்படுகின்றனவா? கட்டணக் கழிப்பறைகள் முறையாகப் பராமரிக்கப்படுகின்றனவா? ஒப்பந்தத்தில் குறிப்பிட்டபடி கட்டணம் வசூலிக்கப்படுகிறதா? என ஆணையர் ஆய்வு செய்தார்.
மேலும், நடைபாதையில் ஆக்கிரமித்து வைத்துள்ள கடைகளை உடனடியாக அகற்றவும் சம்பந்தப்பட்ட கடை உரிமையாளர்களிடம் அவர் அறிவுறுத்தினார். நடைபாதையில் தாற்காலிகக் கடைகள் எதுவும் இருக்கக் கூடாது என்றும் அவர் எச்சரித்தார்.
ரூ. 9.95 லட்சத்தில் மேற்கொள்ளப்பட்டு வரும் மகளிருக்கான சிறுநீர் கழிப்பறைப் பணிகளை விரைவாக முடிக்க, அவர் பொறியாளர்களுக்கு அறிவுறுத்தினார்.
இந்த ஆய்வின்போது நகரப் பொறியாளர் எஸ். ராஜா முகம்மது, செயற்பொறியாளர் ஆர். சந்திரன், உதவி ஆணையர் கு. மானோஜி ஆகியோர் உடனிருந்தனர்.