தினமணி 10.12.2013
பேருந்து நிலைய மேம்பாட்டுப்பணிகள் ஆய்வு
புதுக்கோட்டை புதிய பேருந்து நிலையத்தில் ரூ. 1.17 கோடியில் மேற்கொள்ளப்படும் சீரமைப்புப் பணிகளை நகர்மன்றத் தலைவர் (பொ) எஸ். அப்துல்ரகுமான் திங்கள்கிழமை ஆய்வு செய்தார்.
நகராட்சி நூற்றாண்டு விழாவுக்காக புதுக்கோட்டையில் பல்வேறு வளர்ச்சிப் பணிகளை மேற்கொள்ளும் வகையில் தமிழக அரசு ரூ. 50 கோடி சிறப்பு நிதியை ஒதுக்கியது.
இதையடுத்து பேருந்து நிலையத்தில் சேதமடைந்துள்ள சிமென்ட் தரைத்தளம், கட்டடங்களை சீரமைக்கும் பணிக்காக ரூ. 1.17 கோடி ஒதுக்கப்பட்டு, ஒப்பந்தம் விடப்பட்டது.
பணிகளை துரிதமாக மேற்கொள்ள வசதியாக, இங்கு வந்து செல்லும் பேருந்துகள் அரசு மகளிர் கலைக்கல்லூரி எதிரேயுள்ள தாற்காலிக பேருந்து நிலையத்துக்கு அண்மையில் இட மாற்றம் செய்யப்பட்டது.
இதையடுத்து காலியாக உள்ள பேருந்து நிலையத்தில் மேம்பாட்டுப் பணி தொடங்கியுள்ளது.
இப்பணிகளை, நகர்மன்றத் தலைவர் (பொ) எஸ். அப்துல்ரகுமான், நகரமைப்பு அலுவலர் பெரியசாமி ஆகியோர் ஆய்வு செய்து பணிகளை விரைந்து முடிக்க வலியுறுத்தினார்.
நகர்மன்ற உறுப்பினர்கள் கே. ராமதாஸ், பி. கண்ணன், தியாகராஜன், பி. கிருஷ்ணகுமார் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.