Urban News

  • Increase font size
  • Default font size
  • Decrease font size
Nagara Seithigal - Municipal Administration

சுகாதாரமற்ற முறையில் இறைச்சி விற்பனை 50 கிலோ இறைச்சி பறிமுதல்

Print PDF

தினகரன்                09.12.2013

சுகாதாரமற்ற முறையில் இறைச்சி விற்பனை 50 கிலோ இறைச்சி பறிமுதல்

கோவை, :கோவை  மாநகராட்சி பகுதிகளில் பல இடங்களில் சாலை யோரம் திறந்த வெளியில் இறைச்சி விற்பனை செய்யப்படுகின்றன. சாலை யோரம் 3 கம்புகளை நட்டி அதில் ஆடு, கோழி இறைச்சிகளை தொங்க விட்டு விற்பனை செய்கின்றனர். 

சுகாதாரமற்ற முறை யில் இறைச்சி விற்பனை செய்வதற்கு மாநகராட்சி தடை விதித்துள்ளது. மாநகராட்சி அனுமதி பெறா மல் இறை ச்சி விற்ப னை செய்தால் அவற்றினை பறிமுதல் செய்யப்படும் என மாநகராட்சி எச்சரிக்கை செய்தும், அதனை பொருட்படுத்தாமல் பிராதன சாலை களின் ஓரத்தில் திறந்த வெளியில் இறைச்சிகள் விற்பனை செய்யப்படுகின்றன. இதை தொடர்ந்து மாநகராட்சி  கால்நடை மருத்துவரும், மிருகசாலை இயக்குநருமான டாக்டர் அசோகன் தலைமையில் மேற்பார்வையாளர் ஸ்ரீராம் மற்றும் துப்புரவு பணியாளர்கள் 5 பேர் நேற்று  கவுண்டம்பாளையம் முதல் துடியலூர் வரை சாலையோரங்களில் திறந்த வெளி யில் இறைச்சி விற்பனை செய்த கடை களில் அதிரடி சோதனை மேற்கொண்டனர்.

10 இறைச்சி கடைக ளில் நடைபெற்ற இச்சோதனையில் சுகாதாரமற்ற முறையில் விற்பனை செய்த 50 கிலோ இறைச்சியை பறிமுதல் செய்தனர். கடைகளுக்கு ரூ.17,000 அபராதம் விதிக்கப்பட்டது. இது போன்ற சோதனை தொடர்ந்து நடத்தப்படும் என மாநகராட்சி கால்நடை மருத்துவர் அசோகன் தெரிவித்தார்.

 

சொத்து வரி செலுத்தாத வீடுகளின் குடிநீர் இணைப்புகளை துண்டிக்க முடிவு

Print PDF

தினமணி               09.12.2013

சொத்து வரி செலுத்தாத வீடுகளின் குடிநீர் இணைப்புகளை துண்டிக்க முடிவு

திண்டுக்கல் நகராட்சி பகுதியில் சொத்துவரி செலுத்தாத வீடுகளின் குடிநீர் இணைப்புகளை துண்டிக்க உத்தரவிடப்பட்டுள்ளது.

 திண்டுக்கல் நகராட்சியில் ரூ.1.25 கோடி வரை வரி செலுத்தாமல் நிலுவையில் உள்ளது. இதனை அடுத்து நகராட்சி வருவாய்த்துறை அதிகாரிகள் அதிரடி நடவடிக்கைகள் மூலம் பாக்கித் தொகையை வசூலித்து வருகின்றனர்.

 அதன்படி வரி செலுத்தாத கட்டடங்களுக்கு சீல் வைக்கும் பணிகள் நடைபெற்று வந்தன.

 வரி செலுத்தாத நபர்களை ஏ, பி, சி என 3 வகையாக பிரித்து, இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. ரூ.10,000க்கு மேல் வரி பாக்கி உள்ளவர்கள் ஏ பிரிவிலும், ரூ.5000 முதல் ரூ.10,000 வரை பி பிரிவிலும், ரூ.5000க்கு கீழ் சி பிரிவு என வகைப்படுத்தி வரி வசூல் நடைபெற்று வருகிறது.

  ஏ பிரிவில் உள்ள 80 பேரில், நகராட்சி அதிகாரிகளின் நடவடிக்கையால் 40க்கும் மேற்பட்டோரிடமிருந்து ரூ.12 லட்சம் வசூலிக்கப்பட்டுள்ளது. மேலும் ரூ.40 லட்சம் வரிபாக்கி உள்ளது. அதேபோல் பி பிரிவிற்குள்பட்டோரிடமிருந்து இதுவரை ரூ.6 லட்சம் வசூலிக்கப்பட்டுள்ளது. இந்த பிரிவில் மேலும் ரூ.12 லட்சம் நிலுவையில் உள்ளது.

  சி பிரிவைப் பொறுத்தவரை இதுவரை ரூ.35 லட்சம் வரி பாக்கியுள்ளது. அந்தப் பணத்தை வசூலிக்க, வருவாய்த்துறையோடு, பொறியாளர் பிரிவும் இணைந்து செயல்படுவதற்கு நகராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுத்துள்ளது.

  அதன்படி வரி பாக்கி வைத்துள்ள வீடுகளுக்கான குடிநீர் இணைப்புகளை துண்டிக்க முடிவு செய்துள்ளனர். இந்த அதிரடி நடவடிக்கை புதன்கிழமை முதல் செயல்படுத்தப்படும் என தெரிகிறது.

   இதுகுறித்து நகராட்சி வருவாய் ஆய்வாளர்கள் கே. மணிகண்டன், பி. சுரேஷ் ஆகியோரிடம் கேட்டபோது, நகராட்சிப் பகுதியில் வாடகை வீட்டில் குடியிருப்பவர்கள் வீட்டின் உரிமையாளர் வரி செலுத்துவார் என விட்டு விடுகின்றனர். ஆனால் உரிமையாளரோ, குடியிருப்பவர் செலுத்துவர் என வரி கட்டுவதில்லை. இதனால் மட்டுமே கடந்த 3 ஆண்டுகளில் அதிகப்படியான தொகை நிலுவையில் உள்ளதாக தெரியவந்துள்ளது என்று தெரிவித்தனர்.

 

அனுமதி இல்லாமல் வைக்கப்பட்ட விளம்பர பேனர்கள் அகற்றம் கலெக்டர் கருணாகரன் நேரில் பார்வையிட்டு நடவடிக்கை

Print PDF

தினத்தந்தி                09.12.2013

அனுமதி இல்லாமல் வைக்கப்பட்ட விளம்பர பேனர்கள் அகற்றம் கலெக்டர் கருணாகரன் நேரில் பார்வையிட்டு நடவடிக்கை

நெல்லையில் அனுமதி இல்லாமல் வைக்கப்பட்ட விளம்பர பேனர்கள் அகற்றப்பட்டது. கலெக்டர் கருணாகரன் நேரில் பார்வையிட்டு நடவடிக்கை எடுக்கப்பட்டது.

விளம்பர பேனர்கள்

நெல்லை மாநகரில் தொழில், வியாபாரத்தை பெருக்கும் வகையில் பல்வேறு நிறுவனங்கள் விளம்பர பேனர்களை வைத்து உள்ளனர். சாலையோரங்கள் மற்றும் பெரிய கட்டிடங்களின் மீதும், தனியார் கட்டிடங்களின் காம்பவுண்டு சுவரையொட்டியும் இந்த விளம்பர பேனர்களை வைத்து உள்ளார்கள்.

இந்த பேனர்களை நிறுவுவதற்கு மாநகராட்சி நிர்வாகத்திடம் உரிய அனுமதி பெற்றிருக்க வேண்டும். ஆனால் நெல்லையில் பெரும்பாலான பேனர்கள் அனுமதி பெறாமலும், குறைந்த அளவுக்கு அனுமதி பெற்று விட்டு பெரிய அளவிலும் பேனர்கள் வைக்கப்பட்டு இருந்தன.

அகற்றப்பட்டன

இவ்வாறு அரசு அனுமதி இல்லாமல் சாலையோரங்கள் மற்றும் இதர இடங்களில் வைக்கப்பட்டு இருந்த விளம்பரப் பேனர்கள் மற்றும் விளம்பரங்களை அகற்றுமாறு நெல்லை மாவட்ட கலெக்டர் மு.கருணாகரன் உத்தரவிட்டார். அதற்காக குறிப்பிட்ட நாட்கள் கால அவகாசமும் அளிக்கப்பட்டது.

இதற்கிடையே அனுமதி இல்லாமல் வைக்கப்பட்டு உள்ள விளம்பரப் பேனர்கள், தட்டி போர்டுகள் அகற்றும் பணி நேற்று நடைபெற்றது. நெல்லை மாநகர எல்லைப்பகுதியான தாழையூத்து சோதனைச்சாவடியில் இருந்து தச்சநல்லூர் ரவுண்டானா வரை மதுரை ரோட்டின் இருபுறங்களிலும் வைக்கப்பட்டு இருந்த பிரமாண்ட விளம்பர பேனர்கள் அகற்றப்பட்டன. இதே போல் தச்சநல்லூர், உடையார்பட்டி பகுதிகளிலும் விளம்பர பேனர்கள் அகற்றப்பட்டன.

போலீஸ் பாதுகாப்பு

மாநகராட்சி ஆணையாளர் த.மோகன் மேற்பார்வையில் உதவி செயற்பொறியாளர் சாமுவேல் செல்வராஜ், நெடுஞ்சாலைத்துறை உதவி கோட்டப் பொறியாளர் மெர்லின் கிறிஸ்டல், இளநிலைப் பொறியாளர் கிருஷ்ணசாமி, சாலை ஆய்வாளர் முனியசாமி மற்றும் மாநகராட்சி ஊழியர்கள் இந்த பணியில் ஈடுபட்டனர்.

பொக்லைன் இயந்திரம் கொண்டும், வெல்டிங் இயந்திரம் கொண்டும் பேனருக்காக தரையில் நிறுவப்பட்டு இருந்த இரும்பு தூண்கள் வெட்டி அகற்றப்பட்டன. இந்த பணியை ஏராளமான பொது மக்கள் கூடி நின்று பார்த்தனர். இதையொட்டி அந்த பகுதியில் போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டு இருந்தது.

கலெக்டர் ஆய்வு

இந்த பணிகளை கலெக்டர் மு.கருணாகரன் நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு செய்தார். தச்சநல்லூர் கரையிருப்பு பகுதியில் பேனர்கள் அகற்றும் பணியை அவர் பார்வையிட்டார். அப்போது அவர் நிருபர்களிடம் கூறியதாவது:–

தமிழக அரசு உத்தரவுப்படி அரசு அனுமதி இல்லாமல் வைக்கப்பட்டுள்ள விளம்பரப் பேனர்கள் மற்றும் விளம்பரங்களை அகற்றும் பணி மாநகராட்சி பகுதியில் தொடங்கப்பட்டு உள்ளது. விளம்பர பேனர்கள் வைப்பதற்கு மாவட்ட நிர்வாகம் அனுமதி பெற வேண்டும். மேலும், உள்ளாட்சி அமைப்புகள், நெடுஞ்சாலைத்துறை, போலீஸ் துறை ஆகிய துறைகளின் தடையின்மை சான்றிதழ் பெற வேண்டும். அரசு விதிகளுக்கு மாறாக மாநகராட்சி பகுதியில் 251 விளம்பரப் பேனர்கள் வைக்கப்பட்டு இருப்பதாக கணக்கிடப்பட்டு உள்ளது.

தொடர்ந்து நடக்கும்

ஏற்கனவே மாவட்ட நிர்வாகத்தின் அறிவிப்பால் பல்வேறு பகுதிகளில் விளம்பரப் பேனர்களை அதன் உரிமையாளர்களே அகற்றி விட்டனர். விளம்பரப் பேனர்களை அகற்றும் பணி தொடர்ந்து நடைபெறும். அனுமதியின்றி வைக்கப்பட்டுள்ள அனைத்து விளம்பரப் பேனர்களும் அகற்றப்படும். இதுபோல் மாவட்டத்தின் பிறபகுதிகளில் அனுமதியின்றி வைக்கப்பட்டுள்ள விளம்பரப் பேனர்கள் முழுமையாக அகற்றப்படும். அதற்கான நடவடிக்கையில் உள்ளாட்சி அமைப்புகள் செயல்பட்டு வருகிறது.

இவ்வாறு கலெக்டர் மு.கருணாகரன் கூறினார்.

 


Page 53 of 506