Urban News

  • Increase font size
  • Default font size
  • Decrease font size
Nagara Seithigal - Municipal Administration

மடிப்பாக்கத்தில் விதிமீறல் கட்டடத்துக்கு 'சீல்'

Print PDF

தினமலர்          19.11.2013

மடிப்பாக்கத்தில் விதிமீறல் கட்டடத்துக்கு 'சீல்'

சென்னை:மடிப்பாக்கத்தில், விதிமீறி கட்டிய இரண்டு மாடி கட்டடத்துக்கு, சென்னை பெருநகர வளர்ச்சி குழும (சி.எம்.டி.ஏ.,) அதிகாரிகள், நேற்று 'சீல்' வைத்தனர்.

இதுதொடர்பாக, சி.எம்.டி.ஏ., உறுப்பினர் செயலர், வெங்கடேசன் வெளியிட்டு உள்ள அறிக்கை:
சென்னை, மடிப்பாக்கம், பஜார் சாலையில், 922, 923 எண்களுக்கு உட்பட்ட மனையில், தையல் பிரிவு பயன்பாட்டுக்காக, இரண்டு மாடிகள் கொண்ட கட்டடம் கட்ட, அதன் உரிமையாளர், 2011ம் ஆண்டு, அனுமதி வாங்கினார்.

ஆனால், இந்த அனுமதிக்கு மாறாக, முழுவதும், வணிக பயன்பாட்டுக்கான கட்டடம், கட்டி உள்ளார். மேலும், அந்த கட்டடத்தின் ஒரு பகுதியில், மூன்றாவது தளமும், கட்டி வருவது, தெரிய வந்துள்ளது. விதிகளுக்கு புறம்பான, இந்த கட்டுமான பணிகளை நிறுத்த, நோட்டீஸ் அளிக்கப்பட்டது. அதன் பின்பும், பணிகள் நடந்ததால், இந்த வளாகம் முழுவதையும், அமலாக்க பிரிவு அதிகாரிகள், நேற்று, 'சீல்' வைத்து உள்ளனர். இவ்வாறு, அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

 

மின் சிக்கனத்தை கடைபிடிக்க புதிய திட்டம்...தயார்! தெரு விளக்குகள் "எல்.இ.டி.'களாக மாறுகிறது

Print PDF

தினமலர்          19.11.2013

மின் சிக்கனத்தை கடைபிடிக்க புதிய திட்டம்...தயார்! தெரு விளக்குகள் "எல்.இ.டி.'களாக மாறுகிறது

மின் சிக்கனத்தை கடைபிடிக்க புதுச்சேரியில் 14 ஆயிரம் சாலையோர விளக்குகளை எல்.இ.டி. விளக்குகளாக மாற்ற புதிய திட்டம் செயல்படுத்தப்பட உள்ளது.

புதுச்சேரி நகர சாலைகளில் இரவு நேரங்களில் வெளிச்சத்தை கொடுக்க சாலையோர மின்கம்பங்களில் சோடியம் மெர்குரி மெட்டல் ஹாலைடு டியூப் லைட் உள்ளிட்ட விளக்குகள் பொருத்தப்பட்டுள்ளது.

நகரப் பகுதியில் நகராட்சி பொதுப்பணித்துறை சாலையில் மொத்தம் 7210 விளக்குகள் உள்ளது. இவற்றிற்காக மாதந்தோறும் 12 லட்சம் ரூபாயும் ஆண்டுக்கு 1.44 கோடி ரூபாய் மின்கட்டணமாக செலுத்தப்படுகிறது. இதுபோல் உழவர்கரை நகராட்சிக்குட்பட்ட சாலையில் 7403 சாலையோர விளக்குகள் உள்ளது. இவற்றிற்காக மாதந்தோறும் 12.3 லட்ச ரூபாயும் ஆண்டுக்கு 1.48 கோடியும் மின் கட்டணமாக செலுத்தப்படுகிறது.

சோடியம் மெர்குரி உள்ளிட்ட விளக்குகள் பல நூறு யூனிட் மின்சாரத்தை உறிஞ்சுகிறது. காற்று மழை உள்ளிட்ட பிரச்னையால் பழுதாகும் மின் விளக்குகள் எந்த இடத்தில் பழுது என்பதை கண்டுபிடித்து சரி செய்ய பல நாட்கள் ஆகிறது.

மின் சிக்கனத்தை கடைபிடிக்க மாற்று ஏற்பாடாகவும். விளக்குகள் பழுதாவதை உடனுக்குடன் கண்டறிந்து சரி செய்யவும் "ஆற்றல் திறன்மிகு தெரு விளக்குகள் திட்டம்' உருவாக்கப்பட்டுள்ளது. இதன்மூலம் மின்சாரத்தை சிக்கனமாக பயன்படுத்தி அதிக ஒளி வெளிச்சத்தை உமிழும் வகையிலான எல்.இ.டி. விளக்குகளை சாலையோர மின்கம்பங்களில் அமைக்க முடிவு செய்யப்பட்டுள்ளது.

மின்துறை புதுச்சேரி மற்றும் உழவர்கரை நகராட்சி பொதுப்பணித்துறை மரபுசாரா எரிசக்தி முகமை இணைந்து இதற்கான திட்டத்தை உருவாக்கியுள்ளது. திட்டத்தை செயல்படுத்த உள்ளாட்சித்துறை அமைச்சரை தலைவராக கொண்ட உயர்மட்டக் குழு அமைக்கப்பட்டுள்ளது. மின்துறை அமைச்சர் துணைத் தலைவராகவும் உள்ளாட்சித்துறை செயலர் மின்துறை செயலர் பொதுப்பணித்துறை தலைமை பொறியாளர் எரிசக்தி முகமை திட்ட இயக்குநர் உழவர்கரை மற்றும் நகராட்சி ஆணையர்கள் உறுப்பினர்களாக நியமிக்கப்பட்டுள்ளனர்.

எல்.இ.டி. விளக்குகள் அமைக்கப்படும்போது மெர்குரி சோடியம் டியூப் லைட் வெளியிடும் அதே அளவு ஒளி வெளிச்சத்தை வெளியிடும் வகையில் அமைக்கவும் மொத்தமுள்ள 14 ஆயிரம் விளக்குகளும் ஒரு கட்டுப்பாட்டு அறையில் இருந்து இயக்கும் வகையில் கம்ப்யூட்டருடன் இணைக்கப்படுகிறது. கட்டுப்பாட்டு அறையில் இருந்து மின் விளக்குகளை "ஆன்' மற்றும் "ஆப்' செய்ய முடியும்.

மேலும் மாலை 6:00 மணி முதல் 9:00 மணி வரை அதிக ஒளி வெளிச்சம் தரும் வகையிலும் அதன் பின்பு விளக்கின் ஒளி வெளிச்சம் 40 சதவீதமாக குறைத்து குறைந்த வெளிச்சத்தை தரும் வகையிலும் நள்ளிரவில் ஒரு மணிநேரம் மட்டும் அதிக வெளிச்சம் தரும் வகையில் புரோகிராம் செய்யப்பட உள்ளது.

இது மட்டுமின்றி 14 ஆயிரம் விளக்குகளில் எந்த இடத்தில் பழுது ஏற்பட்டாலும் கட்டுப்பாட்டு அறையில் இருந்தே கண்டுபிடித்து சரிசெய்ய வசதி செய்யப்படும். இத்திட்டத்திற்கான சாத்திய கூறுகளை கண்டறிந்து முழு திட்டம் தயாரிக்க "எனர்ஜி எபிசன்ட் சர்வீஸ்' என்ற தனியார் நிறுவனத்திடம் பணிகள் ஒப்படைக்கப்பட்டுள்ளது. திட்டத்திற்கு விரைவில் உயிரூட்டம் கொடுத்து பணிகளை விரைந்து துவக்க அரசு நடவடிக்கை மேற்கொண்டுள்ளது.

 

ஆனைமலை குப்பைக்கிடங்கை மாசுக்கட்டுப்பாட்டு வாரிய அதிகாரி ஆய்வு

Print PDF

தினமலர்         18.11.2013 

ஆனைமலை குப்பைக்கிடங்கை மாசுக்கட்டுப்பாட்டு வாரிய அதிகாரி ஆய்வு

ஆனைமலை:ஆனைமலையில், மக்களுக்கு சுகாதார கேடு விளைவித்து வந்த குப்பைக்கிடங்கை, மாசு கட்டுப்பாட்டு அதிகாரி ஆய்வு செய்தார்.

ஆனைமலை பேரூராட்சியில் 18 வார்டுகள் உள்ளன. இங்கு, முப்பதாயிரக்கும் மேற்பட்ட மக்கள் வசித்து வருகின்றனர். தினமும் ஆயிரத்துக்கும் மேற்பட்ட மக்கள் மாசாணியம்மன் கோவிலுக்கு வந்து செல்கின்றனர்.

பேரூராட்சியில் வசிப்போர் மற்றும் வெளியூர் மக்கள் பயன்படுத்தி குப்பைகளாக கழிக்கப்படும் பொருட்கள், தினமும் டன் கணக்கில் சேகரிக்கப்படுகிறது.

இவ்வாறு சேகரிக்கப்படும் குப்பைகள், திடக்கழிவு மேலாண்மை திட்டத்தில் டிராக்டர் மற்றும் தள்ளு வண்டிகள் மூலம் சேகரிக்கப்பட்டு, 16வது வார்டில் உள்ள குப்பைக்கிடங்கில் கொட்டப்படுகின்றன. ஆரம்பத்தில் காடாக இருந்த இப்பகுதி, தற்போது குடியிருப்பு நிறைந்த பகுதியாக மாறி விட்டது.

இதனால், சின்னப்பம்பாளையம் -ஆனைமலை ரோட்டில் கடும் துர்நாற்றம் வீசுவதோடு, தொற்று நோய் பரவும் அபாயம் ஏற்பட்டுள்ளது. மேலும், குப்பைகளில் உள்ள பிளாஸ்டிக் பேப்பர்கள், காற்றில் பறந்து அருகில் உள்ள காடுகள் மற்றும் வீடுகளில் விழுகின்றன.

எனவே, குப்பைக்கிடங்கை வேறு இடத்திற்கு மாற்ற வேண்டும் என மக்கள் பேரூராட்சி நிர்வாகத்துக்கும், மாவட்ட நிர்வாகத்துக்கும் நீண்ட காலமாக கோரிக்கை விடுத்து வந்தனர்.

மக்களின் கோரிக்கையை ஏற்று, மாசு கட்டுப்பாட்டு அதிகாரி ராஜகோபால் தலைமையில் அதிகாரிகள் ஆய்வு மேற்கொண்டனர்.

மாசு கட்டுப்பாட்டு வாரிய அதிகாரி ராஜகோபால் கூறுகையில்,"குப்பைகள், மக்கும் குப்பை, மக்காத குப்பை, பிளாஸ்டிக், பீங்கான் பொருட்கள் என தரம் பிரிக்கப்படும். பிளாஸ்டிக் குப்பைகள் அரவை இயந்திரத்தில் அரைக்கப்பட்டு, ரோடுகள் போட பயன்படுத்தப்படும். மக்கும் குப்பைகள் உரமாக பயன்படுத்த விவசாயிகளுக்கு தரப்படும். குப்பைக்கிடங்கில் இருந்து குப்பைகளை அகற்ற, உரிய நடவடிக்கை எடுக்கப்படும்,'' என்றார்.

ஆனைமலை பேரூராட்சிக்கு, குப்பை அரைக்கும் இயந்திரம் வந்து 2 மாதங்கள் ஆகியும் இன்னும் பயன்படுத்தப்படாமல் உள்ளது. ஆய்வின் போது, ஆனைமலை பேரூராட்சித்தலைவர் சாந்தலிங்க குமார், கவுன்சிலர்கள் உடனிருந்தனர்.

 


Page 68 of 506