Urban News

  • Increase font size
  • Default font size
  • Decrease font size
Nagara Seithigal - Municipal Administration

மழைநீர் வடிகால்வாய்களில் கழிவுநீர் இணைப்புகள் ஒரு லட்சம் : வழி தெரியாமல் மாநகராட்சி தவிப்பு

Print PDF

தினமலர்           13.11.2013

மழைநீர் வடிகால்வாய்களில் கழிவுநீர் இணைப்புகள் ஒரு லட்சம் : வழி தெரியாமல் மாநகராட்சி தவிப்பு
 

சென்னை : சென்னை மாநகராட்சி சார்பில் அமைக்கப்பட்டு உள்ள, மழைநீர் வடிகால்வாய்களில், இதுவரை, ஒரு லட்சம் இடங்களில், முறைகேடாக கழிவுநீர் இணைப்பு இருப்பது கண்டறியப்பட்டு உள்ளது. இன்னும் முழு கணக்கெடுப்பு முடியாத நிலையில், இந்த இணைப்புகளை துண்டித்து, மழைநீர் வடிகால்வாய்களை மீட்பது எப்படி என, வழி தெரியாமல், மாநகராட்சி திணறி வருகிறது. சென்னை மாநகராட்சி பராமரிப்பில், 1,912 கி.மீ., துாரத்திற்கு, மழைநீர் வடிகால்வாய்கள் உள்ளன. மழைநீர் வெளியேறுவதற்காக கட்டப்பட்ட இந்த வடிகால்வாய்களில், தற்போது, கழிவுநீர் மட்டுமே பிரதானமாக செல்கிறது.

இதனால், வடிகால்வாய்களில் அடைப்பு, கொசு உற்பத்தி, சுகாதார சீர்கேடு, நீர்வழித்தடங்கள் மாசடைவது என, பல்வேறு பாதிப்புகள் ஏற்பட்டு வருகின்றன. கடந்த மே மாதம் நடந்த மாநகராட்சி கூட்டத்தில், இந்த விவகாரம் குறித்து விவாதிக்கப்பட்டது. அப்போது பேசிய மேயர் சைதை துரைசாமி, ''மழைநீர் வடிகால்வாய்களில் முறைகேடாக கழிவுநீர் இணைப்பு கொடுத்துள்ள வர்த்தக நிறுவனங்களின் தொழில் உரிமம் ரத்து செய்யப்படும்.

கிரிமினல் நடவடிக்கை எடுக்கப்படும்,'' என்றார். எப்படி துண்டிப்பது? இதை தொடர்ந்து, 15 மண்டலங்களிலும் உள்ள முறைகேடு இணைப்புகள் குறித்து கணக்கெடுக்க உத்தரவிடப்பட்டது. மாநகராட்சி சுகாதார துறை ஊழியர்கள் மூலம் எடுக்கப்பட்ட கணக்கெடுப்பில், வர்த்தகம், குடியிருப்புகள் என, இதுவரை, சென்னையில் ஒரு லட்சத்திற்கும் அதிகமான முறைகேடு கழிவுநீர் இணைப்புகள், மழைநீர் வடிகால்வாயுடன் இணைக்கப்பட்டு இருப்பது கண்டறியப்பட்டு உள்ளது.

இன்னும் முழுமையாக கணக்கெடுப்பு முடியாத நிலையில், இந்த எண்ணிக்கை மேலும் அதிகரிக்கும் என, எதிர்பார்க்கப்படுகிறது. இவ்வளவு எண்ணிக்கையிலான முறைகேடு இணைப்புகளை எப்படி துண்டிப்பது, எவ்வாறு முறைப்படுத்துவது என, வழி தெரியாமல், மாநகராட்சி விழிபிதுங்கி நிற்கிறது. இது குறித்து மாநகராட்சி உயர் அதிகாரி ஒருவர் கூறியதாவது: சென்னை குடிநீர் வாரியம், மாநகராட்சியில் சுகாதார துறை, பொறியியல் துறை என, மூன்று பிரிவாக, முறைகேடு இணைப்பு குறித்து கணக்கெடுப்பு நடத்தப்படுகிறது.

மழைநீர் வடிகால்வாயில் மருந்து தெளிக்கும் ஊழியர்கள் மூலம், சேகரிக்கப்பட்ட விவரங்களில், அனைத்து மண்டலங்களிலும் சேர்த்து, ஒரு லட்சத்திற்கும் மேற்பட்ட, கழிவுநீர் இணைப்புகள், மழைநீர் வடிகால்வாயில் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டு உள்ளது. அரசு அனுமதிக்கு...ஆள்நுழைவு குழி மூலம் மட்டுமே, அனைத்து இணைப்புகளையும் கண்டறிய முடியாது. இதனால், குடிநீர் வாரியம், மாநகராட்சி பொறியியல் பிரிவு ஊழியர்கள், தனி கணக்கெடுப்பு நடத்தி வருகின்றனர். முழுமையாக கணக்கெடுப்பு முடிந்த பின், இந்த விஷயத்தில் எடுக்கப்பட வேண்டிய மேல் நடவடிக்கை குறித்து முடிவு செய்யப்படும்.

முறைகேடு கழிவுநீர் இணைப்புகளை தடுக்க, வர்த்தக நிறுவனங்களாக இருந்தால், தொழில் உரிமம் ரத்து, அபராதமும், குடியிருப்புகளாக இருந்தால், அபராதமும் விதிக்க நடவடிக்கை எடுக்கப்படும். இதற்காக அரசின் அனுமதி கோரப்பட்டு உள்ளது. இவ்வாறு அந்த அதிகாரி கூறினார்.

'துண்டிப்போம்' குடிநீர் வாரிய அதிகாரி ஒருவர் கூறுகையில், 'மழைநீர் வடிகால்வாய் மாநகராட்சியின் சொத்து. அதில் முறைகேடு இணைப்புகள் இருந்தால், மாநகராட்சி அதிகாரிகளே துண்டிப்பு செய்யலாம். எங்களுக்கு தெரியப்படுத்தினாலும், இணைப்பை துண்டிப்போம்' என்றார்.

1,323 இணைப்பு விரைவில் துண்டிப்பு!சென்னை மாநகராட்சிக்கு உட்பட்ட, பழைய மண்டலங்களில் எடுக்கப்பட்ட கணக்கெடுப்பில், வணிக வளாகங்கள், கடைகள், ஓட்டல்கள் என, வர்த்தக நிறுவனங்களில் மட்டும், 1,323 கழிவு நீர் இணைப்புகள் இருப்பது கண்டறிப்பட்டு உள்ளது. இவற்றுக்கு, மாநகராட்சி, ஏற்கனவே நோட்டீஸ் வழங்கியுள்ள நிலையில், விரைவில், இணைப்புகளை துண்டிக்கும் பணிகள் துவங்கப்பட உள்ளன.

மண்டல வாரியாக விவரம்:

தேனாம்பேட்டை 320
திரு.வி.க., நகர் 306
ராயபுரம் 245
அடையாறு 169
தண்டையார்பேட்டை 168
அண்ணா நகர் 60
கோடம்பாக்கம் 55

 

நெல்லையில் கூடுதல் கட்டணம் வசூலிப்பதால் குடிநீர் இணைப்பில் கன்ட்ரோல் வால்வு பொருத்தும் பணி நிறுத்தம்

Print PDF

தினகரன்        11.11.2013

நெல்லையில் கூடுதல் கட்டணம் வசூலிப்பதால் குடிநீர் இணைப்பில் கன்ட்ரோல் வால்வு பொருத்தும் பணி நிறுத்தம்

நெல்லை, : நெல்லை யில் கூடுதல் கட்டணம் வசூலிப்பதால் குடிநீர் இணைப்பில் கன்ட்ரோல் வால்வு பொருத்தும் பணி நிறுத்தப்பட்டுள்ளது.

நெல்லை மாநகராட்சியில் 55 வார்டுகள் உள்ளன. இதில் 8, 9, 19, 26, 27 ஆகிய வார்டுகளுக்கு புதிய குடிநீர் திட்டம் ரூ.22 கோடியில் கடந்த சில மாதங்களுக்கு முன் துவங்கப்பட்டது. இந்த வார்டுகளில் சுமார் 20 ஆயிரத்திற்கும் மேற்பட்ட குடிநீர் இணைப்புகள் உள்ளன. ஆனால் அனைத்து வீடுகளுக்கும் சீராக குடிநீர் கிடைக்கவில்லை. மின்மோட்டார் மூலம் அதிக தண்ணீரை உறிஞ்சுவதால்தான் தண்ணீர் சீராக கிடைக்கவில்லை என்று மாநகராட்சிக்கு புகார்கள் வந்தன.

இதையடுத்து மாநகராட்சி பொறியாளர்கள், அதிகாரிகள் சம்பந்தப்பட்ட வீடுகளில் சோதனை நடத்தி மோட்டார் வைத்து தண்ணீர் உறிஞ்சும் வீடுகளில் குடிநீர் இணைப்பு துண்டிப்பு, மோட்டார் பறிமுதல் போன்ற நடவடிக்கைகளை மேற்கொண்டனர். இருப்பினும் மீண்டும் இந்த முறைகேடுகள் தொடர்ந்தன. மின்மோட்டார் வைத்து தண்ணீர் உறிஞ்சுவதை நிரந்தரமாக தடுக்கும் விதத்தில் 19, 26, 27 வார்டுகளில் உள்ள குடிநீர் இணைப்புகளில் கன்ட் ரோல் வால்வு பொருத்த மாநகராட்சி நிர்வாகம் முடிவு செய்தது.

வால்வு பொருத்தப்பட் டால் குடிநீர் கன்ட்ரோல் செய்யப்பட்டு அனைத்து வீடுகளுக்கும் தண்ணீர் சீராக கிடைக்கும். இதற்கு மாநகராட்சியில் கன்ட் ரோல் வால்வு வாங்க பொதுமக்களிடம் ரூ.540 வசூலிக்கப்படுகிறது. மாநகராட்சி பொறியாளர்கள் மேற்பார்வையில் மாநகராட்சி ஊழியர்கள் அந்தந்த வீடுகளுக்கு செல்லும் குடிநீர் குழாய்களை தோண்டி கன்ட்ரோல் வால்வு பொருத்தும் பணி நடந்து வருகிறது.

 இந்த பணிக்காக ஆகும் லேபர் கூலியை பொதுமக்களிடம் மாநகராட்சி ஊழியர்கள் வசூலிக்கின்றனர். ஒரு வீட்டிற்கு 4 அடிநீளம் ஒரு அடி ஆழமுள்ள குழிதோண்டுவதற்கு ரூ.ஆயிரம் முதல் ஆயிரத்து 500 வரை வசூலிக்கிறார்கள். இதனை பொதுமக்கள் சிலர் செலுத்த மறுப்பதால் பல இடங்களில் கன்ட்ரோல் வால்வு பொருத்தும் பணி நிறுத்தப்பட்டுள்ளது. தற்போது மழை பெய்து வருவதால் மாநகராட்சி பணியாளர்களால் தோண்டப்பட்ட குழிகளில் தண் ணீர் தேங்கியுள்ளது. குழி கள் தெரியாமல் குழந்தை கள் தவறி விழுகின்றனர். மேலும் டூ வீலர்களில் வருபவர்களும் குழிக்குள் விழுந்து விபத்தில் சிக்குகின்றனர்.

எனவே கூடுதல் கட்ட ணம் வசூலிக்காமல் நிர்ணயிக்கப்பட்ட கட்டணத்தை மட்டும் வசூலித்து பணி களை துரிதப்படுத்த மாநகராட்சி நடவடிக்கை எடுக்கவேண்டும் என்று பொதுமக்கள் எதிர்பார்க்கின்றனர்.

 

மாநகராட்சி எதிராக வழக்கு தொடர்ந்துள்ளவர்கள் சமரசத் தீர்வுக்கு கருத்து தெரிவிக்கலாம்

Print PDF

தினமணி        09.11.2013

மாநகராட்சி எதிராக வழக்கு தொடர்ந்துள்ளவர்கள் சமரசத் தீர்வுக்கு கருத்து தெரிவிக்கலாம்

திருச்சி மாநகராட்சிக்கு எதிராக நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளவர்கள் ஆணையர், உதவி ஆணையர்களை நேரில் சந்தித்து வழக்குகளைத் தீர்ப்பது தொடர்பாக கருத்து தெரிவிக்கலாம் என ஆணையர் வே.ப. தண்டபாணி அழைப்புவிடுத்துள்ளார்.

  இதுதொடர்பாக அவர் வெளியிட்ட செய்திக்குறிப்பு:

  தமிழ்நாடு மாநில சட்டப்பணிகள் ஆணைக்குழு சார்பில் மெகா லோக் அதாலத் வரும் 23ஆம் தேதி திருச்சி மாவட்ட நீதிமன்ற வளாகத்தில் நடைபெறவுள்ளது. இதில், திருச்சி மாநகராட்சிக்கு எதிராக வழக்கு தொடர்ந்துள்ளவர்களிடம் சமரசத் தீர்வு காணவும் திட்டமிடப்பட்டுள்ளது.

  எனவே, மாநகராட்சி எதிராக வழக்கு தொடர்ந்துள்ளவர்கள் வரும் நவ. 11 முதல் 15ஆம் தேதி வரை பிற்பகல் 3 மணி முதல் மாலை 5 மணி வரை, மாநகராட்சி ஆணையரையோ, தொடர்புடைய உதவி ஆணையர்களையோ நேரில் சந்தித்து தங்களின் வழக்கு தொடர்பாக கருத்து தெரிவிக்கலாம்.

  வழக்கு தொடர்ந்துள்ளவர்கள் இந்த அரிய வாய்ப்பைப் பயன்படுத்திக் கொள்ள வேண்டும். மேலும் இதுதொடர்பான விவரங்களை அறிய, 76395 66000 என்ற எண்ணிலும் தொடர்பு கொள்ளலாம்.

 


Page 71 of 506