Urban News

  • Increase font size
  • Default font size
  • Decrease font size
Nagara Seithigal - Municipal Administration

ஈரோடு மாநகராட்சி பகுதியில் தடையை மீறி விற்பனை செய்த பாலித்தீன் பைகள் பறிமுதல் மாநகராட்சி–மாசுக்கட்டுப்பாட்டு வாரிய அதிகாரிகள் நடவடிக்கை

Print PDF

தினத்தந்தி             25.10.2013

ஈரோடு மாநகராட்சி பகுதியில் தடையை மீறி விற்பனை செய்த பாலித்தீன் பைகள் பறிமுதல் மாநகராட்சி–மாசுக்கட்டுப்பாட்டு வாரிய அதிகாரிகள் நடவடிக்கை

ஈரோடு மாநகராட்சி பகுதிகளில் தடையை மீறி விற்பனை செய்த பாலித்தீன் பைகளை பறிமுதல் செய்து மாநகராட்சி அதிகாரிகள் மற்றும் மாசுக்கட்டுப்பாட்டு வாரிய அதிகாரிகள் நடவடிக்கை எடுத்தனர்.

அதிகாரிகள் சோதனை

ஈரோடு மாநகராட்சி பகுதிகளில் உள்ள கடைகளில் 40 மைக்ரான் அளவுக்கு குறைவான பாலித்தீன் மற்றும் பிளாஸ்டிக் பொருட்கள் விற்பனை செய்ய தடை விதிக்கப்பட்டு உள்ளது. ஆனால் அந்த தடையை மீறி ஈரோட்டில் பல கடைகளிலும் 40 மைக்ரான் அளவுக்கு குறைவான பாலித்தீன் பைகள் விற்பனை செய்யப்படுவதாக புகார்கள் வந்தன. அதன் பேரில் ஈரோடு மாநகராட்சி அதிகாரிகள் மற்றும் மாசுக்கட்டுப்பாட்டு வாரிய சுற்றுச்சூழல் அதிகாரிகள் இணைந்து நேற்று ஈரோட்டில் திடீர் சோதனையில் ஈடுபட்டனர்.

ஈரோடு காவிரி ரோடு அருகே உள்ள கந்தசாமி வீதியில் ஒரு பிளாஸ்டிக் பொருட்கள் மொத்த விற்பனை கடைக்கு அதிகாரிகள் சென்றனர். அங்கு மாநகராட்சி நகர்நல அதிகாரி டாக்டர் சுமதி தலைமையில் மாநகராட்சி சுகாதார ஆய்வாளர்கள் நல்லசாமி, இக்பால், இஸ்மாயில், தங்கராஜ், நாச்சிமுத்து, மாசுக்கட்டுப்பாட்டுவாரிய சுற்றுச்சூழல் அதிகாரி ராமராஜ், உதவிப்பொறியாளர் குணசீலன் ஆகியோர் சென்றனர்.

அவர்கள் அங்கிருந்த பாலித்தீன் பைகளை எடுத்து மைக்ரான் மீட்டர் மூலம் சோதனை செய்தனர். அதில் அங்கு வைக்கப்பட்டு இருந்த சில பாலித்தீன் பை வகைகள் 40 மைக்ரான் அளவுக்கு குறைவாக இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. அதைத்தொடர்ந்து அதிகாரிகள் அந்த பாலித்தீன் பைகளை பறிமுதல் செய்ய உத்தரவிட்டனர்.

பாலித்தீன் பைகள் பறிமுதல்

ஒரே கடையில் இருந்து சுமார் ரூ.6 ஆயிரம் மதிப்புள்ள பாலித்தீன் பைகள் பறிமுதல் செய்யப்பட்டு வெண்டிபாளையம் குப்பை கிடங்குக்கு கொண்டு செல்லப்பட்டு அழிக்கப்பட்டன.

இதுபற்றி மாநகராட்சி நகர்நல அதிகாரி டாக்டர் சுமதி கூறும்போது, ‘ஈரோடு மாநகராட்சிக்கு உள்பட்ட பகுதிகளில் பாலித்தீன் பைகள் விற்பனை செய்ய தடை விதிக்கப்பட்டு உள்ளது. இதுபோல் தொடர்ந்து சோதனை நடைபெறும். 40 மைக்ரான் அளவுக்கு குறைவான பாலித்தீன் பொருட்களை விற்பனை செய்பவர்களுக்கு ரூ.3 ஆயிரம் அபராதம் விதிக்கப்படும். உற்பத்தி செய்பவர்களுக்கு ரூ.10 ஆயிரம் அபராதம் விதிக்கப்படும்’ என்றார்.

உஷாரான கடைக்காரர்கள்

அதிகாரிகள் சோதனை நடத்துவதை அறிந்த கொங்கலம்மன் கோவில் வீதி உள்பட பல்வேறு வீதிகளில் உள்ள பிளாஸ்டிக் கடை உரிமையாளர்கள் உடனே உஷாராகி தங்கள் கடைகளை மூடினார்கள்.

இதுபோல் ஒரு சில கடைகளில் அங்குள்ள குடோன்களில் 40 மைக்ரான் அளவுக்கும் குறைவான பாலித்தீன் பொருட்கள் மற்றும் பிளாஸ்டிக் டம்ளர்களை மறைத்து வைத்தனர். இதனால் அனைத்து கடைகளையும் அதிகாரிகள் சோதனையிடாமல் திரும்பி சென்றனர்.

 

தீபாவளி பண்டிகையையொட்டி கோவையில் 211 பட்டாசு கடைகளுக்கு அனுமதி

Print PDF

தினத்தந்தி             25.10.2013

தீபாவளி பண்டிகையையொட்டி கோவையில் 211 பட்டாசு கடைகளுக்கு அனுமதி

கோவையில் 211 பட்டாசு கடைகளுக்கு போலீஸ் அனுமதி அளித்துள்ளது. தீத்தடுப்பு உள்ளிட்ட முன்எச்சரிக்கை நடவடிக்கைகளை கடைபிடிக்குமாறு உத்தரவிடப்பட்டுள்ளது.

211 பட்டாசு கடைகள்

தீபாவளி பண்டிகையையொட்டி கோவையில் பட்டாசு கடைகள் வைப்பதற்கு கோவை நகர போலீஸ், தீயணைப்புத்துறை, மாநகராட்சி ஆகியவற்றின் பாதுகாப்பு ஆலோசனைகளின் அடிப்படையில் தற்காலிக உரிமம் வழங்கப்படுகிறது. இதன்படி இந்த ஆண்டு கோவையில் பட்டாசு கடை நடத்த 211 கடைகளுக்கு கோவை நகர போலீஸ் அனுமதி அளித்துள்ளது. துணை கமிஷனர் ராமர் நேற்று மாலை இதற்கான அனுமதிகளை பட்டாசு வியாபாரிகளிடம் வழங்கினார்.

முன்எச்சரிக்கை நடவடிக்கை

பட்டாசு கடைகளை மிகவும் பாதுகாப்பான முறையில் நடத்த உத்தரவிடப்பட்டுள்ளது. கான்கிரீட் கட்டிடங்களில் இரும்பு, அலுமினிய தகடுகள் பொருத்தப்பட்ட பகுதிகளிலும் பாதுகாப்பான முறையில் கடைகள் நடத்த ஆலோசனை வழங்கப்பட்டுள்ளது.

மேலும் எளிதில் தீப்பற்றக்கூடிய பெயிண்ட், மண்எண்ணை, பெட்ரோல், டீசல், தீப்பட்டி, கியாஸ் சிலிண்டர், கியாஸ் லைட்டர் ஆகியவற்றை அங்கு வைத்திருக்க கூடாது. தீத்தடுப்பு பொருட்களான மணல், தண்ணீர் மற்றும் சாதனங்களை தயார் நிலையில் வைத்திருக்க வேண்டும். போதிய அளவு காற்றோட்ட வசதிகள் செய்து இருக்க வேண்டும்.

குழந்தை தொழிலாளர்கள்

பட்டாசு கடைகளில் குழந்தை தொழிலாளர்களை பயன்படுத்தக்கூடாது. அவ்வாறு குழந்தை தொழிலாளர்களை பயன்படுத்தினால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும். அனைத்து முன் எச்சரிக்கை நடவடிக்கைகளுடன் பட்டாசு கடைகளை பொதுமக்களுக்கு எந்த இடையூறும் இன்றி நடத்த ஆலோசனை வழங்கப்பட்டுள்ளது.

இந்த தகவலை கோவை போலீஸ் அதிகாரிகள் தெரிவித்தனர்.

 

வீட்டில் வளர்க்கப்படும் பன்றிகளை பிடிக்க நகராட்சிக்கு இடைக்கால தடை ஐகோர்ட்டு உத்தரவு

Print PDF

தினத்தந்தி           24.10.2013

வீட்டில் வளர்க்கப்படும் பன்றிகளை பிடிக்க நகராட்சிக்கு இடைக்கால தடை ஐகோர்ட்டு உத்தரவு

வீட்டில் வளர்க்கப்படும் பன்றிகளை பிடித்து செல்ல மதுராந்தகம் நகராட்சிக்கு சென்னை ஐகோர்ட்டு இடைக்கால தடை விதித்துள்ளது.

காஞ்சீபுரம் மாவட்டம், மதுராந்தகம் அடுத்துள்ள சூரக்குட்டை கிராமத்தை சேர்ந்த சுப்பிரமணியின் மகன் எஸ்.கங்கா. இவர், சென்னை ஐகோர்ட்டில் தாக்கல் செய்துள்ள மனுவில் கூறியிருப்பதாவது:–

பன்றி வளர்ப்பு

காட்டுநாயக்கன் சமுதாய வழக்கப்படி, ஒரு குடும்பத்தினர் குறைந்தது 2 பன்றிகளாவது வளர்க்கவேண்டும். இதன்படி, எங்கள் சமுதாயத்தை சேர்ந்த 200 குடும்பத்தினர், எங்கள் கிராமத்தில் பன்றிகளை வளர்த்து வருகிறோம். இந்த நிலையில், மதுராந்தகம் நகராட்சி 22–6–2012 அன்று ஒரு தீர்மானம் இயற்றியுள்ளது.

அதில், “பன்றிகளை வளர்க்க நகராட்சியிடம் உரிமம் பெறவேண்டும். உரிமம் பெறாத பன்றிகளை பிடித்து, பொது ஏலம் மூலம் விற்பனை செய்யப்படும்’’ என்று கூறியிருந்தது. இந்த தீர்மானத்தின் அடிப்படையில், உரிமம் இல்லா பன்றிகளை பிடித்து, பொது ஏலம் மூலம் விற்பனை செய்ய ஒப்பந்ததாரர்களையும் நகராட்சி நியமித்துள்ளது.

சட்டத்தில் இடமில்லை

இந்த ஒப்பந்ததாரர்கள், வீட்டு வளாகத்துக்குள் வளர்க்கப்படும் பன்றிகளை எல்லாம் பிடித்து சென்று ஏலம் மூலம் விற்பனை செய்கின்றனர். இவ்வாறு விற்பனை செய்வதற்கு சட்டத்தில் இடமில்லை. சாலைகளில் சுற்றித்திரியும் பன்றிகளை பிடித்து செல்வதில் எங்களுக்கு எந்த ஆட்சேபனையும் இல்லை.

ஆனால், வீட்டில் சுகாதாரமாக வளர்க்கப்படும் பன்றிகளை பிடித்து செல்வது சட்டவிரோதமானது. எனவே வீட்டில் வளர்க்கப்படும் பன்றிகளை பிடித்து செல்ல தடை விதிக்கவேண்டும்.

இவ்வாறு அந்த மனுவில் கூறியிருந்தனர்.

இடைக்கால தடை

இந்த மனு நீதிபதி கே.கே.சசிதரன் முன்பு நேற்று விசாரணைக்கு வந்தது. அப்போது, மனுதாரர் தரப்பில் மூத்த வக்கீல் எஸ்.துரைசாமி, வக்கீல் வி.இளங்கோவன் ஆகியோர் ஆஜராகி வாதம் செய்தார்கள்.

இதையடுத்து நீதிபதி பிறப்பித்த உத்தரவில், “வீட்டில் வளர்க்கப்படும் பன்றிகளை பிடித்து செல்ல மதுராந்தகம் நகராட்சிக்கு இடைக்கால தடை விதிக்கிறேன்’’ என்று கூறியுள்ளார்.

 


Page 85 of 506