அனுமதியின்றி செயல்பட்ட தொழிற்சாலையில் சோதனை : 5 டன் பாலிதீன் கேரி பேக் பறிமுதல்
Tuesday, 15 October 2013 05:44
administrator
நாளிதழ்௧ள் -
ந௧ர்ப்புற நிர்வா௧ம்
தினமலர் 15.10.2013 அனுமதியின்றி செயல்பட்ட தொழிற்சாலையில் சோதனை : 5 டன் பாலிதீன் கேரி பேக் பறிமுதல்
திருப்பூர் : திருப்பூர் மாநகராட்சியில் எவ்வித உரிமமும் பெறாமல் செயல்பட்ட, பிளாஸ்டிக் கேரி பேக் தொழிற்சாலையில் அதிகாரிகள் நேற்று சோதனை நடத்தினர். அப்போது, விற்பனைக்கு அனுப்ப வைத்திருந்த, 1.50 லட்சம் ரூபாய் மதிப்பிலான,40 மைக்ரானுக்கு உட்பட்ட ஐந்து டன் பாலிதீன் கேரி பேக் பறிமுதல் செய்தனர். தமிழக அரசால் தடை செய்யப்பட்டுள்ள, 40 மைக்ரானுக்கு உட்பட்ட பிளாஸ்டிக் பயன்பாட்டை, திருப்பூர் மாநகராட்சி பகுதிகளில் முற்றிலும் ஒழிக்க அதிகாரிகள் ஆய்வு நடத்தி வருகின்றனர். மாநகராட்சி நிர்வாகத்துக்கு கிடைத்த ரகசிய தகவலை தொடர்ந்து, கமிஷனர் செல்வராஜ் உத்தரவுப்படி, நகர் நல அலுவலர் செல்வக்குமார், உதவி கமிஷனர் கண்ணன், ஆய்வாளர் ராமச்சந்திரன் உள்ளிட்டோர் அடங்கிய குழு, 35வது வார்டு பகுதியில் திடீர் ஆய்வு நடத்தியது.
விஜயாபுரத்தை அடுத்துள்ள புதுப்பாளையம் குருவாயூரப்பன் நகர் பகுதியில், ஆள் நடமாட்டம் இல்லாத பகுதியில் கட்டப்பட்டிருந்த பெரிய கட்டடத்தில், "மருதர் பாலிமெர்ஸ்' என்ற பெயரில், பிளாஸ்டிக் தொழிற்சாலை இயங்குவது கண்டுபிடிக்கப்பட்டது. "நாப்தா' என்ற பாலிதீன் கவர் தயாரிப்புக்கான மூலப்பொருள், "பாலிதீன்' ரோல் தயாரிக்கும் மெஷின், பாலிதீன் ரோலில் இருந்து, பாலிதீன் கவர்களை வடிவமைக்கும் இரண்டு மெஷின்கள் பயன்படுத்துவது தெரியவந்தது.
இங்கு, மாநகராட்சியில் எவ்வித உரிமமும் பெறாமல், 40 மைக்ரானுக்கும் குறைவான பாலிதீன் கவர்கள் உற்பத்தி செய்யப்பட்டுள்ளது. ஆய்வு நடத்திய அதிகாரிகள், விற்பனைக்கு அனுப்ப வைத்திருந்த, ஐந்து டன் பாலிதீன் கேரி பேக்குகளை பறிமுதல் செய்தனர்.
நகர்நல அலுவலர் செல்வக்குமார் கூறியதாவது:
வணிக வரித்துறையில் மட்டும், பர்பத்சிங் என்ற பெயரில் உரிமம் பெறப்பட்டு, பிளாஸ்டிக் தொழிற்சாலை இயங்கி வந்துள்ளது. விதிமுறைக்கு மாறாக, 40 மைக்ரானுக்கு குறைவான பிளாஸ்டிக் பொருட்கள் தயாரிக்கப்பட்டுள்ளன. குறிப்பாக, 19 மைக்ரான் அளவில், ஏழு விதமான அளவுகளில் பாலிதீன் கவர் தயாரிக்கப்படுகிறது.
அவற்றில், சந்தேகத்துக்கு இடமளிக்கும் நான்கு வகையான சாம்பிள் சேகரிக்கப்பட்டு, சென்னை கிண்டியில் உள்ள ஆராய்ச்சி மையத்துக்கு பரிசோதனைக்கு அனுப்பப்பட்டுள்ளது. தொழிற்சாலையில் பயன்படுத்தும் மெஷின்கள் குறித்த விவரங்கள், மாசுக்கட்டுப்பாடு வாரியத்துக்கு தெரியப்படுத்தி, மேல்நடவடிக்கை எடுக்க பரிந்துரைக்கப்படும். மாநகராட்சி நிர்வாகத்திடம் உரிமம் பெறாமல் இயங்குவதாலும், தடை செய்யப்பட்ட பாலிதீன் கவர்களை உற்பத்தி செய்ததாலும், சம்பந்தப்பட்டவர்கள் மீது சட்ட ரீதியான நடவடிக்கை எடுக்க, மாநகராட்சி வக்கீலிடம் ஆலோசனை பெறப்படும். 1.5 லட்சம் ரூபாய் மதிப்புடைய ஐந்து டன் பிளாஸ்டிக் கேரி பேக் பறிமுதல் செய்யப்பட்டு, மண்டல அலுவலகத்தில் பாதுகாப்பாக வைக்கப்பட்டுள்ளது. சட்ட ரீதியான நடவடிக்கை உறுதி செய்யப்பட்டதும், பிளாஸ்டிக் ரோடு அமைக்க பயன்படுத்தப்படும். சம்பந்தப்பட்டவர்களுக்கு, கோர்ட் மூலமாக தண்டனை பெற்றுத்தரப்படும். இவ்வாறு, அவர் கூறினார்.
விரிவாக்க பகுதிகளுக்கு 1,133 கி.மீ., மழைநீர் வடிகால்வாய் :ரூ.4,000 கோடிக்கு மாநகராட்சி திட்ட அறிக்கை
Tuesday, 15 October 2013 05:35
administrator
நாளிதழ்௧ள் -
ந௧ர்ப்புற நிர்வா௧ம்
தினமலர் 15.10.2013 விரிவாக்க பகுதிகளுக்கு 1,133 கி.மீ., மழைநீர் வடிகால்வாய் :ரூ.4,000 கோடிக்கு மாநகராட்சி திட்ட அறிக்கை
சென்னை : விரிவாக்க பகுதிகளில், 1,133 கி.மீ., துாரத்திற்கு, மழைநீர் வடிகால்வாய் கட்ட திட்டமிடப்பட்டு உள்ளது. அதற்காக, 4,000 கோடி ரூபாய் மதிப்பில், மாநகராட்சி, விரிவான திட்ட அறிக்கையை தயாரித்து உள்ளது. 67 சதவீதம்சென்னையில், பழைய மண்டல பகுதிகளில், மத்திய அரசின் ஜவஹர்லால் நேரு தேசிய நகர்ப்புற புனரமைப்பு திட்டத்தில், 747 கோடி ரூபாயில், மழைநீர் வடிகால்வாய் பணிகள் நடந்து வருகின்றன. அவற்றில், 67 சதவீத பணிகள் முடிந்துள்ளன.
மீதமுள்ள பணிகளை, அடுத்த ஆண்டு மே மாதத்திற்குள் முடிக்க திட்டமிடப்பட்டு உள்ளது. அதையடுத்து, மாநகராட்சி நடத்திய ஆய்வில், விரிவாக்க பகுதிகளில், 1,133 கி.மீ., துாரத்திற்கு மழைநீர் வடிகால்வாய் அமைக்கப்பட வேண்டும் என, கணக்கிடப்பட்டு ள்ளது.
இதில், மணலி, மாதவரம், திருவொற்றியூர் மண்டலங்களில் கொசஸ்தலை ஆறு நீர்பிடிப்பு பகுதிகளில், 435 கி.மீ., துாரத்திற்கும், வளசரவாக்கம், அம்பத்துார் மண்டலங்களில் கூவம் ஆறு நீர்பிடிப்பு பகுதிகளில், 190 கி.மீ., துாரத்திற்கும், அடையாறு நீர்பிடிப்பு பகுதிகளான, ஆலந்துார், வளசரவாக்கம் மண்டலங்களில், 85 கி.மீ., துாரத்திற்கும், கோவளம் கால்வாய் நீர்பிடிப்பு பகுதிகளான பெருங்குடி, சோழிங்கநல்லுார் மண்டலங்களில், 373 கி.மீ., துாரத்திற்கும் மழைநீர் வடிகால்வாய் அமைக்கப்பட வேண்டியுள்ளது.
இதற்கு, 4,000 கோடி ரூபாய் வரை செலவாகும் என்று கணக்கிடப்பட்டு உள்ளது.
இந்த கால்வாய் பணிகளுக்கு மாநகராட்சி விரிவான திட்ட அறிக்கை தயாரித்துள்ளது. நிதி ஒதுக்கீடு கிடைத்த பின், விரிவாக்க பகுதிகளில் பணிகள் துவங்கும் என, அதிகாரிகள் தெரிவித்தனர்.
ஒத்திவைப்பு
இதற்கிடையே, மெட்ரோ ரயில் பணிகள் நடந்து வரும் பூந்தமல்லி நெடுஞ்சாலையை ஒட்டி சில முக்கிய சாலைகளில் போக்குவரத்து மாற்றங்கள் அமலாக இருப்பதால், தற்போது சென்னையில் நடந்து வரும் மழைநீர் வடிகால்வாய் பணிகளில், சில பணிகளை ஒத்தி வைக்க மாநகராட்சி முடிவு செய்து உள்ளது.
எந்தெந்த சாலைகளில் பணிகள் தாமதமாகும் என்பது இறுதி முடிவு செய்யப்படவில்லை என்றும் அதிகாரிகள் தெரிவித்தனர்.
|
|