Urban News

  • Increase font size
  • Default font size
  • Decrease font size
Nagara Seithigal - Municipal Administration

மேலும் இரண்டு மேம்பாலங்கள் பராமரிப்புக்கு ஒப்பந்தம்

Print PDF

தினமலர்             03.10.2013

மேலும் இரண்டு மேம்பாலங்கள் பராமரிப்புக்கு ஒப்பந்தம்

சென்னை:சென்னையில், ஏழு மேம்பாலங்களை பராமரிக்க முதல்கட்டமாக ஒப்பந்தம் அறிவிக்கப்பட்ட நிலையில், மேலும் இரண்டு மேம்பால பராமரிப்பு பணிக்கு மாநகராட்சி தற்போது ஒப்பந்தம் கோரியுள்ளது.

சென்னை மாநகராட்சி பராமரிப்பில் உள்ள மேம்பாலங்களை பராமரித்து, புதுப்பொலிவுடன் வைக்க உத்தரவு பிறப்பிக்கப் பட்டு உள்ளது. இதை தொடர்ந்து, சென்னையில் அதிகமாக சிதிலமடைந்த மேம்பாலமான ஆற்காடு சாலை கோடம்பாக்கம் மேம்பாலத்திற்கு, 4 கோடி ரூபாய்க்கு மதிப்பீடுகள் தயாரிக்கப் பட்டு உள்ளன.

அதே போல், கோட்டூர்புரம் அடையாறு பாலம் உட்பட ஏழு மேம்பாலங்களுக்கு, 7 கோடி ரூபாய் செலவில் பராமரிப்பு பணிகளை செய்ய மாநகராட்சி முதல்கட்டமாக ஒப்பந்த அறிவிப்பு வெளியிட்டது. தற்போது டி.டி.கே., சாலை மேம்பாலம், பெரம்பூர் பேரக்ஸ் சாலை மேம்பால பராமரிப்பு பணிகளுக்கும் மாநகராட்சி ஒப்பந்தம் கோரியுள்ளது.

டி.டி.கே., சாலை மேம்பாலம், 45 லட்சம் ரூபாய் செலவிலும், பெரம்பூர் பேரக்ஸ் சாலை மேம்பாலம், 43 லட்சம் ரூபாய் செலவிலும் பராமரிப்பு பணிகள் செய்யப்பட உள்ளன.

இன்னும் சில மேம்பாலங்களுக்கு சேத மதிப்பீடுகள் செய்யப்பட்டு வருகின்றன. அந்த பணிகளுக்கு அடுத்தகட்டமாக ஒப்பந்தம் கோரப்பட உள்ளன.

இதற்கிடையே, டாக்டர் ராதாகிருஷ்ணன் சாலையில் உள்ள மேம்பாலத்தில் பக்கவாட்டு சுவரில் உள்ள இரும்பு கைப்பிடிகளில் எக்கு முலாம் பூசப்பட்ட துருபிடிக்காத தகடுகள் பதிக்க முடிவு செய்யப்பட்டு உள்ளது. சென்னை மேம்பாலங்களில் முதல்முறையாக இந்த முயற்சி செய்யப்படுகிறது.

இது குறித்து, மாநகராட்சி அதிகாரி ஒருவர் கூறுகையில், 'மேம்பாலங்கள் அனைத்தும் இந்த ஆண்டு இறுதிக்குள் பராமரிப்பு பணிகள் முடிந்து, புதிய வண்ணம் பூசப்பட்டு புதுப்பொலிவுடன் மாறும்' என்றார்.

 

காந்தி ஜயந்தியன்று விற்கப்பட்ட 60 கிலோ ஆட்டு இறைச்சி பறிமுதல்

Print PDF

தினமணி           03.10.2013

காந்தி ஜயந்தியன்று விற்கப்பட்ட  60 கிலோ ஆட்டு இறைச்சி பறிமுதல்

பரமக்குடி நகராட்சிக்குட்பட்ட பகுதியில் காந்திஜயந்தியான புதன்கிழமை 6 ஆட்டு இறைச்சிக் கடைகளில் விற்பனை செய்த 60 கிலோ இறைச்சி மற்றும் அக்கடைகளில் கட்டி வைக்கப்பட்டிருந்த 7 ஆடுகளை நகராட்சி பணியாளர்கள் பறிமுதல் செய்தனர்.

மகாத்மா காந்தியின் கொள்கைகளில் ஒன்றான புலால் உண்ணக்கூடாது என்பதற்கு ஏற்ப அவரது பிறந்த நாளான அக்டோபர் 2ஆம் தேதி இறைச்சி விற்பனைக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.

இத்தடையை மீறி நகராட்சியில் 6 இடங்களில் இறைச்சிக்கடைகளில் விற்பனை செய்வதாக நகராட்சி பணியாளர்களுக்கு தகவல் கிடைத்தது. இதன் பேரில் ஆணையர் தங்கப்பாண்டி (பொ) தலைமையில் சுகாதார ஆய்வாளர் சீனிவாசன், சுகாதார அதிகாரிகள் மாரிமுத்து, குமார் மற்றும் நகராட்சி பணியாளர்களுடன் ஆய்வு மேற்கொண்டனர். அப்போது அனுமதியின்றி விற்பனை செய்த 60 கிலோ இறைச்சியை பறிமுதல் செய்து பினாயில் ஊற்றி அழித்தனர். மேலும் இறைச்சிக்காக கட்டப்பட்டிருந்த 7 ஆடுகளும் பறிமுதல் செய்யப்பட்டன.

 

ராஜபாளையத்தில் 2-வது குடிநீர் தேக்கத்துக்கு தடுப்பணை கட்ட இடம் ஆய்வு

Print PDF

தினமணி           03.10.2013

ராஜபாளையத்தில் 2-வது குடிநீர் தேக்கத்துக்கு  தடுப்பணை கட்ட இடம் ஆய்வு

ராஜபாளையம் நகராட்சி 2-வது புதிய குடிநீர் தேக்கத்திற்கு வனப்பகுதியில் இருந்து தண்ணீர் கொண்டுவர வனப்பகுதியில் ஒதுக்கப்பட்ட இடத்தில் தடுப்பணை கட்டும் பகுதியை ராஜபாளையம் நகர் மன்றத்தலைவர் மற்றும் குடிநீர் வடிகால் வாரிய பொறியாளர்கள் புதன்கிழமை ஆய்வு செய்தனர்.

ராஜபாளையம் நகராட்சி பகுதிக்கு குடிநீர் அபிவிருத்திக்காக தற்போதுள்ள 6-வது மைல் குடிநீர்தேக்கம் அருகே புதிய குடிநீர்தேக்கம் அமைக்கப்பட்டுள்ளது. இந்த குடிநீர் தேக்கத்திற்கு வனப்பகுதியில் இருந்து தண்ணீர் கொண்டு வர மலட்டாற்றில் தடுப்பணை கட்ட ராஜபாளையம் நகர்மன்றத் தலைவர் பி.எஸ். தனலட்சுமி நகர்மன்றம் சார்பில் அனுமதி கேட்டு உச்சநீதிமன்றத்தில் வழக்குதொடர்ந்தார்.

இதை விசாரித்த உச்சநீதிமன்றம் வனப்பகுதியில் மலட்டாற்றில் தடுப்பணை கட்ட அனுமதி வழங்கியது.

பெங்களூரு மண்டல வனத்துறையும் தற்போது அனுமதி வழங்கியதை அடுத்து மலட்டாற்றில் தடுப்பணை கட்டும் இடம் புதன்கிழமை ஆய்வு செய்யப்பட்டது.

ராஜபாளையம் நகர் மன்றத் தலைவர் பி.எஸ். தனலட்சுமி, விருதுநகர்மாவட்ட ஜெயலலிதா பேரவைச் செயலாளர் பி.பி. செல்வசுப்பிரமணியராஜா, நகராட்சி ஆணையாளர் ராமசாமி, பொறியாளர் நடராஜன், குடிநீர் வடிகால் வாரிய பொறியாளர்கள் முத்துமாரியப்பன், புகழேந்தி, ராஜபாளையம் வனச்சரக அலுவலர் பாலசுப்பிரமணியம் மற்றும் அலுவலர்கள் மலட்டாற்றுப் பகுதிக்கு புதன்கிழமை நேரடியாகச் சென்று தடுப்பணை கட்டும் இடத்தை ஆய்வு செய்து இடம் தேர்வு செய்தனர்.

மேலும் தடுப்பணையில் இருந்து நீர்தேக்கம் வரை 450 மீட்டர் நீளம் குழாய் பதிக்கும் இடத்தையும் தேர்வு செய்தனர். இது குறித்து ராஜபாளையம் நகர் மன்றத்தலைவர் பி.எஸ். தனலட்சுமி கூறும் போது, ராஜபாளையம் நகர் பகுதிக்கு குடிநீர் விநியோகிக்க இரண்டாவது புதிய குடிநீர்தேக்கம் அமைக்க ஒதுக்கப்பட்ட நிதி ரூ. 23 கோடியில் குடிநீர்தேக்கம் அமைக்கப்பட்டது போக மீதி உள்ள ரூ. 9 கோடிஉள்ளது. இந்த நிதியைப்பயன்படுத்தி வனப்பகுதியில் தடுப்பணை, தண்ணீர் சுத்திகரிப்பு மையம் மற்றும் மேல்நிலை நீர்தேக்கத் தொட்டி அமைக்கப்படும் என தெரிவித்தார்.

 


Page 97 of 506