தினபூமி 20.09.2013
கொசு உற்பத்திக்கு காரணமான இ.எஸ்.ஐ. பணி நிறுத்தம்
![http://www.thinaboomi.com/sites/default/files/Chennai_corporation(C).jpg](http://www.thinaboomi.com/sites/default/files/Chennai_corporation%28C%29.jpg)
சென்னை, செப்.20 - கொசு உற்பத்திக்கும் காரணமான இ.எஸ்.ஐ கட்டிடப்பணிகள் நிறுத்தப்பட்டுள்ளது. சென்னை மாநகராட்சி டெங்கு, மலேரியா, போன்ற நோய்களை ஒழிக்க தீவிர நடவடிக்கை எடுத்து வருகிறது. அயனாவரம் இ.எஸ்.ஐ. வளாகத்தில் புதிதாக கட்டப்பட்டு வரும் மருத்துவ கல்லூரியின் பல மாடி கட்டிட பணி காரணமாக அங்கு தேங்கி கிடக்கும் தண்ணீர் மூலம் நிறைய கொசு புழு உற்பத்தியாவது அதிகாரிகளின் ஆய்வில் கண்டறியப்பட்டது.
இதனால் அங்கு பணி புரியும் ஊழியர்கள், ஆஸ்பத்திரி நோயாளிகள், பக்கத்து குடியிருப்புகளில் வசிக்கும் மக்களுக்கு மலேரியா, டெங்கு போன்ற நோய்கள் பரவும் சூழல் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது.
இதனால் மாநகராட்சி அதிகாரிகள் காண்டி ராக்டருக்கு எச்சரிக்சை விடுத்து நோட்டீஸ் அனுப்பினார்கள். 5 முறை எச்சரித்தும் அந்நிறுவனம் கண்டு கொள்ளவில்லை.
இதனால் மாநகராட்சி சுகாதார அதிகாரிகள் அயனாவரம் இ.எஸ்.ஐ. மருத்துவ கல்லுரி கட்டிட பணி நடக்கும் இடத்துக்கு மீண்டும் நேரில் சென்று பார்வையிட்டனர். அப்போது தேங்கி கிடந்த தண்ணீரில் கொசு அதிகமாக இருந்ததால் கொசு மருந்து அடிக்க நடவடிக்கை மேற்கொண்டனர். அங்கு பல முறை எச்சரித்தும் சுகாதாரம் பராமரிக்கப்படாததால் பொது சுகாதார சட்டம் 1939-ன் படி இ.எஸ்.ஐ. பல மாடி கட்டிட பணிகளை நிறுத்த மாநகராட்சி நடவடிக்கை மேற் கொண்டு கட்டிட காண்டிராக்டருக்கு ரூ.50 ஆயிரம் அபராதம் வித்தது. அங்கு கொசுவை கட்டுப்படுத்திய பிறகுதான் கட்டிட பணிகள் திரும்பவும் தொடங்க அனுமதிக்கப்படும் என்றும் அதிகாரிகள் தெரிவித்தனர்.