தினமலர் 19.09.2013
நவம்பருக்குள் ரிப்பன் மாளிகை புதுப்பிக்கும் பணிகள்: கூடுதல் ஸ்தபதிகளை பணியமர்த்த மாநகராட்சி முடிவு
சென்னை:ரிப்பன் மாளிகை புதுப்பிக்கும் பணிகள் துவங்கி, ஐந்து ஆண்டுகள் ஆகியும், இன்னும் பணிகள் முழுமையாக முடியவில்லை. நுாற்றாண்டு விழாவிற்கு இரண்டு மாதங்களே உள்ள நிலையில், மாளிகையின் வெளிப்புறத்தில் மட்டுமாவது பணிகளை முடிக்க மாநகராட்சி முடிவு செய்து, கூடுதல் ஸ்தபதிகளை பணியமர்த்த உத்தரவிட்டுள்ளது.
சென்னை மாநகராட்சி தலைமை அலுவலகமான ரிப்பன் மாளிகை, 1913ம் ஆண்டு கட்டப்பட்டது. இந்த மாளிகையின் நுாற்றாண்டு விழா, வரும் நவம்பர் 26ம் தேதி கொண்டாடப்பட உள்ளது.
விழாவையொட்டி, பாரம்பரிய கட்டடமான ரிப்பன் மாளிகையை பழமை மாறாமல் புதுப்பிக்க மாநகராட்சி முடிவு செய்தது. இதற்கான பணிகள், 2009ம் ஆண்டு துவங்கப்பட்டன.
50 சதவீதம்
இதுவரை, 9.55 கோடி ரூபாய் மதிப்பில், இரண்டாம் தளம், முதல் தளம், தரைதளத்தில், 50 சதவீத உள்வேலைகள், மேற்கு, தெற்கு பகுதிகளில், 50 சதவீதம் வெளிபூச்சு வேலைகள், பூ வேலைகள், மொட்டை மாடியில் தண்ணீர் கசிவு சரிசெய்தல், ஓடு பதித்தல் ஆகிய பணிகள் முடிந்துள்ளன.
மொத்த பணிகளில், 50 சதவீதம் மட்டுமே நிறைவடைந்த நிலையில், மற்ற பணிகள், பல்வேறு காரணங்களால் கிடப்பில் போடப்பட்டன.
மீதமுள்ள பணிகளை முடிக்க, 5.8 கோடி ரூபாய்க்கு புதிய மதிப்பீடு தயாரிக்கப்பட்டு, கடந்த பிப்ரவரி, 27ம் தேதி இதற்கான பணி ஆணை வழங்கப்பட்டது. அதன் பிறகே பணிகள் மீண்டும் வேகம் பிடித்தன. இருப்பினும் திட்டமிட்டபடி பணிகளை முழுமையாக முடிக்க முடியவில்லை.
இன்னும் மாளிகைக்கு அழகு சேர்க்கும் முன் பகுதியின் கோபுரம் பூச்சு வேலை, வெளிப்புறம் ஒரு பக்கம் முழுவதும் பூச்சு வேலை, மாளிகையின் பின் பகுதி பூச்சு வேலைகள், உட்புறத்தில், 50 சதவீதம் பணிகள் என, ஏராளமான பணிகள் பாக்கி உள்ளன.
விழாவிற்கு இன்னும் இரண்டு மாதங்களே உள்ள நிலையில், ரிப்பன் மாளிகை புதுப்பிக்கும் பணிகள் அதற்கு முன் முழுமையாக முடிய வாய்ப்பு இல்லை என்பதால், மாளிகையின் வெளிப்புறத்தில் மட்டும் பணிகளை முடித்து, விழா கொண்டாட மாநகராட்சி முடிவு செய்துள்ளது.
இதற்காக கூடுதல் ஸ்தபதிகளை பணியில் ஈடுபடுத்த ஒப்பந்ததாரருக்கு, மாநகராட்சி உத்தரவிட்டு உள்ளது.
கூடுதலாக 12 பேர்
இது குறித்து மாநகராட்சி அதிகாரி ஒருவர் கூறியதாவது:
ரிப்பன் மாளிகையில் தற்போது அலுவலகங்கள் இயங்கி வருவதால், முழுவீச்சில் பணிகளை செய்ய முடியவில்லை. இது தான் தாமதத்திற்கு காரணம். புதிய இணைப்பு கட்டடம் நவம்பர் மாதம் பயன்பாட்டிற்கு வரும். இந்த கட்டடத்திற்கு அனைத்து அலுவலகங்களும் மாறும். அப்போது தான் உட்புறத்தில் பணிகளை முடிக்க முடியும்.
ஆனால், நவம்பர் மாதம் நுாற்றாண்டு விழா கொண்டாட இருப்பதால், வெளிப்புறத்தில் பணிகளை முடிக்க திட்டமிடப்பட்டுள்ளது. இதற்காக, தற்போது, 52 ஸ்தபதிகள் மாளிகையை புதுப்பிக்கும் பணியில் ஈடுபட்டு வரும் நிலையில், இன்னும், 12 பேர் கூடுதலாக ஓரிரு தினங்களில் பணியில் ஈடுபடுத்தப்படுவர். வெளிப்புறத்தில் வெள்ளை நிறம் பூச, தற்போது மாதிரி தேர்வு செய்யப்பட்டுள்ளது. இதை தொல்லியல் துறை நிபுணர்கள், அண்ணா பல்கலைக் கழக பேராசிரியர் உட்பட தொழில்நுட்ப குழுவினர் ஒப்புதல் அளித்த பிறகு வெள்ளை வண்ணம் பூசும் பணிகள் துவங்கப்படும். இதற்கு மட்டுமே ஒரு மாதம் ஆகும். இவ்வாறு அந்த அதிகாரி கூறினார்.