அவகாசம் வழங்கிய மழைநீர் வடிகால்வாய் பணிகள் துவக்கம் பாதுகாப்பு தடுப்பு வைக்க அறிவுறுத்தல்
சென்னை:கிடப்பில் போடப்பட்டு, மாநகராட்சியால் கூடுதல் கால அவகாசம் வழங்கப்பட்ட மழைநீர் வடிகால்வாய் பணிகள் தற்போது மீண்டும் துவங்கப்பட்டுள்ளன. வரும் நவம்பர் மாதத்திற்குள், அதிகபட்ச பணிகளை முடிக்க ஒப்பந்ததாரர்களுக்கு மாநகராட்சி அறிவுறுத்தி உள்ளது.
இறுதி கெடு
சென்னையில் வெள்ள பாதிப்பை தடுக்க ஜவஹர்லால் நேரு தேசிய நகர்ப்புற புனரமைப்பு திட்டத்தின் கீழ் மழைநீர் வடிகால்வாய் பணிகள் 2010ம் ஆண்டு துவங்கப்பட்டன.
ஒரு சில இடங்களில் மட்டுமே பணிகள் முடிந்தன.பல ஒப்பந்ததாரர்கள் பணிகளை முழுமையாக முடிக்காமல், அரை குறையாய் நிறுத்தி வைத்து உள்ளனர்.
மாநகராட்சி பலமுறை எச்சரிக்கை விடுத்தும் பணிகளை துவங்காத அந்த ஒப்பந்ததாரர்களுக்கு, கறுப்பு பட்டியல் எச்சரிக்கை கொடுத்து, இறுதியாக மீண்டும் ஒருமுறை கால அவகாசம் வழங்கப்பட்டது.
அதன்படி பணிகள் செய்ய வேண்டிய சதவீதத்திற்கு ஏற்ப மூன்று மாதம் முதல் ஒன்பது மாதம் வரை கால அவகாசம் வழங்கப்பட்டுள்ளது.
மாநகராட்சியால் அவகாசம் வழங்கப்பட்ட பணிகள் தற்போது மீண்டும் துவங்கப்பட்டு உள்ளன. தடுப்பு தேவை இது குறித்து மாநகராட்சி அதிகாரி ஒருவர் கூறியதாவது:
ஓட்டேரி நல்லா, அடையாறு நீர்ப்பிடிப்பு, கூவம் நீர்ப்பிடிப்பு, விருகம்பாக்கம் அரும்பாக்கம் கால்வாய், மாம்பலம் கால்வாய், கேப்டன் காட்டன் கால்வாய், பக்கிங் ஹாம் கால்வாய் என, பரவலாக மழைநீர் வடிகால்வாய் பணிகள் கிடப்பில் உள்ளன.
கடந்த ஜூலை மாத கூட்டத்தில் இந்த கால்வாய் பணிகளுக்கு இறுதியாக ஒப்பந்ததாரர்களுக்கு ஒரு வாய்ப்பு வழங்க கால அவகாசம் வழங்கப்பட்டது. அதன்படி அவகாசம் வழங்கப்பட்ட பணிகளில் 90 சதவீதம் இடங்களில் பணிகள் துவங்கப்பட்டு உள்ளன.
இதில், 50 சதவீத பணிகள் நவம்பர் மாத இறுதிக்குள் முடியும். மற்ற பணிகளை நவம்பர் இறுதிக்குள் அதிகபட்ச மாக முடிக்க ஒப்பந்ததாரர்களுக்கு அறிவுறுத்தப் பட்டுள்ளது. வடகிழக்கு பருவமழை தீவிரமடைந்தால் பணிகளை மேற்கொள்ள முடியாது.
இதற்கிடையே சென்னையில் எந்த இடத்தில் மழைநீர் வடிகால்வாய் பணிகள் செய்தாலும், அது வெளியே தெரியாத வகையில் பாதுகாப்பு தடுப்பு ஏற்படுத்தி செய்ய வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது. இது தொடர்பாக பகுதிவாரியாக கண்காணிப்பும் மேற்கொள்ளப்பட்டு உள்ளது.
காவல் துறை அனுமதி கிடைக்காமல் 10க்கும் மேற்பட்ட இடங்களில் பணிகள் துவங்கப் படாமல் உள்ளன. விடுமுறை நாட்களில் பணிகளை செய்யும் வகையில் காவல் துறை அனுமதி கோர திட்டமிடப்பட்டு உள்ளது. இவ்வாறு அந்த அதிகாரி கூறினார்.