Urban News

  • Increase font size
  • Default font size
  • Decrease font size
Nagara Seithigal - Municipal Administration

சென்னையில் 20 லட்சம் பனை மரங்கள் நட இலக்கு

Print PDF

தினமணி              30.08.2013 

சென்னையில் 20 லட்சம் பனை மரங்கள் நட இலக்கு

சென்னை மாநகராட்சிப் பகுதிகளில் உள்ள வீடுகள், பொது இடங்களில் 20 லட்சம் பனை மர கன்றுகள் நட திட்டமிடப்பட்டுள்ளது என்று மேயர் சைதை துரைசாமி தெரிவித்தார்.

மேலும் சென்னையில் இந்தாண்டுக்குள் 5.5 சதவீதமாக உள்ள பசுமைப் போர்வையை 11 சதவீதம் என இரட்டிப்பாக்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது என்றும் அவர் தெரிவித்தார்.

தமிழக முதல்வரின் பிறந்தநாளை முன்னிட்டு, சென்னையில் சுற்றுச்சூழலை மேம்படுத்துவது தொடர்பான சிறப்புத் தீர்மானம் மாநகராட்சி மன்றக் கூட்டத்தில் வியாழக்கிழமை நிறைவேற்றப்பட்டது.

சிறப்புத் தீர்மான விவரம்: தமிழக முதல்வரின் பிறந்தநாளை ஒவ்வொரு ஆண்டும் சுற்றுச்சூழல் விழிப்புணர்வு தினமாக கொண்டாட ஏற்கெனவே தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது. மேலும் ஒவ்வொரு ஆண்டும் முதல்வரின் பிறந்தநாளின் போது மரம், செடி நடும் பணிகள் தீர்மானிக்கப்பட்டது.

இதுகுறித்து ஆய்வுகள் நடத்தப்பட்டன. ஆய்வுகளின்படி, மாநகராட்சி

எல்லைக்குள்பட்ட 318 கி.மீ. நீர்வழித்தடங்களின் இருகரைகளின் 639 கி.மீ. நீளத்துக்கும், குளம், குட்டை, ஏரி ஆகியவற்றின் கரைகளிலும் 6.5 லட்சம் பனை மரங்களை நட்டு சுற்றுப்புறச் சூழலை பாதுகாக்க நடவடிக்கை எடுக்கப்படும்.

பொது இடங்கள் தவிர பொதுமக்கள் வீடுகளிலும் பனை மரங்கள் வளர்க்கும் வகையில் 20 லட்சம் பனை கன்றுகள் நட திட்டமிடப்பட்டுள்ளது. முதற்கட்டமாக 6.5 லட்சம் பனை மரக் கன்றுகள் நடப்படும். இந்தப் பணியை தமிழ்நாடு மாநில பனை வெல்லம் மற்றும் தும்பு விற்பனை கூட்டுறவு இணையம் என்ற அமைப்பு மாநகராட்சியுடன் இணைந்து மேற்கொள்ளும்.

மேலும் ஒவ்வொரு வீட்டு உரிமையாளருக்கும் சிவப்பு சந்தனமரம் எனப்படும் செம்மரக் கன்றுகள் வழங்கப்படும். இதுபோன்று 6.5 லட்சம் மரக் கன்றுகள் வழங்கப்படும் வீடற்றவர்கள் பொது இடங்கள், சாலைகளில் மரக்கன்று நட்டு பராமரித்து, மரத்தின் பயனை பராமரித்தவரே பெறும் வகையில் விதிகள் வகுக்கப்படும். செம்மரக் கன்றுகள் வேண்டுவோர் மாநகராட்சியைத் தொடர்பு கொள்ளலாம்.

இதேபோல, சென்னை மாநகராட்சிப் பள்ளிகள், அரசுப் பள்ளிகள், தனியார் பள்ளிகள் ஆகியவற்றில் படிக்கும் மாணவர்களுக்கு சுற்றுச்சூழலை பாதுகாக்கும் வகையில், ஒரு பப்பாளிக் கன்று வீதம் 6.5 லட்சம் கன்றுகள் இலவசமாக வழங்கப்படும். மேலும் 6.5 லட்சம் நொச்சி செடிகள் இந்தாண்டுக்குள் நடப்படும். அடுத்தாண்டு கூடுதலாக 6.6 லட்சம் நொச்சி செடிகள் நடப்படும்.

ஒரு நாட்டில் 33.3 சதவீதம் பசுமைப் போர்வை எனும் வனப்பகுதி இருக்கவேண்டும். ஆனால் சென்னையில் 5.5 சதவீதம் பரப்பில் மட்டுமே பசுமைப் போர்வை உள்ளது. இதனை இந்தாண்டுக்குள் 11 சதவீதமாக உயர்த்துவது என்ற இலக்கு நிறைவேற்றப்படும்.

அடுத்த 3 ஆண்டுகளுக்குள் சென்னையின் பசுமைப் போர்வை 25 சதவீதத்துக்கு மேல் என்ற இலக்கை அடைய நடவடிக்கை மேற்கொள்ளப்படும். இந்தப் பணிகளைத் தொடர்ந்து மேற்கொள்ள பணியாளர்கள், அலுவலர்கள் தேர்வு செய்யப்பட்டு பணிகள் விரைவில் தொடங்கப்படும் என்று அந்த தீர்மானத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

 

190 கட்டிட உரிமையாளர்களுக்கு நோட்டீஸ் அனுமதியின்றி கட்டப்பட்டுள்ள கட்டிடம்

Print PDF

தினமலர்              30.08.2013

190 கட்டிட உரிமையாளர்களுக்கு நோட்டீஸ் அனுமதியின்றி கட்டப்பட்டுள்ள கட்டிடம்

சேலம்: சேலம் மாநகரப் பகுதியில், முதல் தளத்துக்கு மட்டும் அனுமதியை வாங்கி விட்டு, இரண்டு, மூன்று என, மாடிக்கு மேல் மாடி கட்டிய உரிமையாளர்களுக்கு, மாநகராட்சி நிர்வாகம் நோட்டீஸ் அனுப்பி உள்ளதாக, சாலை பாதுகாப்பு கூட்டத்தில் தெரிவிக்கப்பட்டது.

சேலம் மாவட்ட சாலை பாதுகாப்புக்குழு கூட்டம், கலெக்டர் அலுவலகத்தில் நடந்தது. கலெக்டர் மகரபூஷணம் தலைமை வகித்தார். டி.ஆர்.ஓ., செல்வராஜ், போலீஸ் துணை கமிஷனர் பிரபாகரன் முன்னிலை வகித்தனர்.

சேலம் மாநகர பஸ்களில், படிக்கட்டில் தொங்கியபடி மாணவர்கள் பயணம் செய்யும் நிலை உள்ளதாக, பத்திரிகைகள் சுட்டி காட்டியிருந்தன. அதனடிப்படையில், போக்குவரத்து கழகம் மற்றும் போலீஸ் துறை சார்பில், மாணவர்களிடையே படிக்கட்டு பயணம் பற்றிய விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டுள்ளது. வட்டார போக்குவரத்து அலுவலர்களும், அவ்வாறான தனியார் வாகனங்கள் மீது நடவடிக்கை எடுத்து வருகின்றனர்.

குரங்குச்சாவடி அருகில், தேசிய நெடுஞ்சாலையோரம் வாகனங்களை நிறுத்தி வைத்து போக்குவரத்துக்கு இடையூறு செய்கின்றனர். அவற்றை அகற்றுவதற்கு, தேசிய நெடுஞ்சாலை திட்ட இயக்குனர் உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மொத்தம், மூன்று பேர் மட்டும் செல்லும் ஆட்டோவில், கூடுதலாக பலகைகள் அமைத்து, அதிகப்படியான நபர்களை ஏற்றிச் சென்ற ஆட்டோ டிரைவர்கள் மீது, 3,621 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளது. சீருடைய அணியாத டிரைவர் மீது, 953 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன.

புதியதாக வணிக நோக்குடன் கட்டப்பட்ட கட்டிட உரிமையாளர்கள், மாநகராட்சியிடம் முதல் தளத்துக்கு மட்டும் அனுமதி பெற்று விட்டு, மூன்று, நான்கு மாடி வரை கட்டுவதாக வந்த புகாரின் அடிப்படையில், 190 பேருக்கு நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது. கடந்த ஆண்டில், 411 பேர் விபத்தில் இறந்துள்ளனர், இந்த ஆண்டில், 359 பேர் மட்டுமே இறந்துள்ளனர். கடந்த ஆண்டை விட விபத்து எண்ணிக்கை குறைந்துள்ளது. மோட்டார் வாகன வழக்குகள் மூலம், 1.59 கோடி ரூபாய் அபராதம் வசூலிக்கப்பட்டுள்ளது. பழுதடைந்த சாலையை சீரமைக்கவும், மக்களிடையே போக்குவரத்து விழிப்புணர்வு ஏற்படுத்தவும் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக, கூட்டத்தில், அதிகாரிகள் தெரிவித்தனர்.

 

எலும்பு மற்றும் மூட்டுவலி நோய்க்கு மருத்துவமனை: ஆயுர்வேத சிகிச்சைக்கு மாநகராட்சி திட்டம்

Print PDF

தினமலர்              30.08.2013

எலும்பு மற்றும் மூட்டுவலி நோய்க்கு மருத்துவமனை: ஆயுர்வேத சிகிச்சைக்கு மாநகராட்சி திட்டம்

கோவை : மாநிலத்தில் முதல் முறையாக, எலும்பு மற்றும் மூட்டுவலி சிகிச்சைக்கு ஆயுர்வேத மருத்துவமனை துவங்க கோவை மாநகராட்சி திட்டமிடப்பட்டுள்ளது.

கோவை மாநகராட்சி 100 வார்டுகளில் 16 லட்சம் மக்கள் தொகையுள்ளது. மக்களுக்கு இலவச சிகிச்சை அளிக்க, அரசு மருத்துவமனை இருந்தாலும், மாநகராட்சி சார்பில் (பழைய 72 வார்டுகளில்) 20 மகப்பேறு மருத்துவமனைகளும், 16 மருந்தகங்களும் உள்ளன. இதில், ஆறு மகப்பேறு மருத்துவமனைகளுக்கு ஐ.எஸ்.ஓ., தரச்சான்று பெறப்பட்டுள்ளது.

மாநகராட்சி மருத்துவமனைகளில், கர்ப்பகால கவனிப்பு, பிரசவம், குழந்தை நலம், குடும்பக் கட்டுப்பாடு சிகிச்சைகளும், அறுவை சிகிச்சைகளும் செய்யப்படுகின்றன. எச்.ஐ.வி., பரிசோதனை, பால்வினை நோய் பரிசோதனை மற்றும் சிகிச்சைகள், தோல் நோய் மற்றும் தொற்று நோய் சிகிச்சை வசதிகள் உள்ளன.

மருந்தகங்களில் பொது மருத்துவ சிகிச்சை, மகப்பேறு மருத்துவமனைகளில் ஸ்கேன் பரிசோதனை வசதிகளும் உள்ளன. இதுதவிர, மாநகராட்சியில் மூன்று ஆயுர்வேத மருத்துவமனைகள் உள்ளன.

மாநகராட்சி மருத்துவமனைகளில் குழந்தை பிறப்பு மற்றும் கருத்தடை அறுவை சிகிச்சைகள் அதிகளவில் நடக்கிறது. இந்நிலையில், கேரள மாநிலத்தை போன்று, கோவை மாநகராட்சியில் ஆயுர்வேத எலும்பு மற்றும் மூட்டுவலி மருத்துவமனை துவங்க திட்டமிடப்பட்டுள்ளது.

கோவையில் இருந்து டாக்டர்கள் குழு, கேரளா சென்று ஆயுர்வேத எலும்பு மற்றும் மூட்டுவலி மருத்துவமனைகளை பார்வையிட்டு வந்துள்ளனர். அதன் அடிப்படையில், கோவை மாநகராட்சியில் விரைவில் ஆயுர்வேத எலும்பு மற்றும் மூட்டுவலியை குணமாக்கும் மருத்துவமனை துவங்கப்படவுள்ளது.

மாநகராட்சி அதிகாரிகள் கூறியதாவது:

இன்றைய சூழலில், 40 வயதை கடந்தவர்களில் 50 சதவீதம் பேர் எலும்பு மற்றும் மூட்டு வலியால் அவதிப்படுகின்றனர். அவர்களுக்கு சிகிச்சை அளிக்க கோவை மாநகராட்சியில் ஆயுர்வேத முறைப்படி எலும்பு மற்றும் மூட்டுவலி மருத்துவமனை துவங்கப்பட உள்ளது.

இதுபோன்ற ஆயுர்வேத எலும்பு மற்றும் மூட்டுவலி சிகிச்சை மருத்துவமனை, தமிழகத்தில் எந்த மாநகராட்சியிலும் இல்லை. இந்த ஆயுர்வேத மருத்துவ சிகிச்சை முறையால், பக்கவிளைவுகள் எதுவும் ஏற்படாது.

எலும்பு தேய்மானம் மற்றும் மூட்டுவலிகள் வருவதை தடுக்கும். ஒரு நபருக்கு சிகிச்சை அளிக்க 45 நிமிடங்கள் ஆகும். அதனால், தினமும் 10 நபர்களுக்கு மட்டுமே சிகிச்சை அளிக்க முடியும்.

ஆயுர்வேத எலும்பு மற்றும் மூட்டுவலி மருத்துவமனை துவங்க, கட்டட வசதி மற்றும் தளவாடங்கள் வாங்குவதற்கு 35 லட்சம் ரூபாயும், மருத்துவ உபகரணங்கள் மற்றும் கம்ப்யூட்டர் போன்றவை வாங்க 4 லட்சம் ரூபாயும், மருந்து வகைகள் வாங்க ஆண்டுக்கு 10 லட்சம் ரூபாயும், மருத்துவர் மற்றும் பணியாளர் சம்பளத்துக்கு ஆண்டுக்கு ஆறு லட்சம் ரூபாயும் செலவிடப்படுகிறது.

முதல் ஆண்டில் மொத்தம் 55 லட்சம் ரூபாயும், அதன்பின் ஒவ்வொரு ஆண்டும் 16 லட்சம் ரூபாயும் செலவாகும் என, உத்தேச மதிப்பீடு தயாரிக்கப்பட்டுள்ளது. இம்மருத்துவமனையில் புறநோயாளிகள் சிகிச்சை மட்டுமே இருக்கும்.

ஆயுர்வேத எண்ணெய் மற்றும் மருந்துகள் கொண்டு எலும்பு, மூட்டுவலி பிரச்னைகளுக்கு தீர்வு காணப்படும். மாமன்ற அனுமதி பெறப்பட்டு, மாநிலத்தில் முதல் முறையாக, கோவையில் ஆயுர்வேத எலும்பு மற்றும் மூட்டுவலிக்கான மருத்துவமனை துவங்கப்படும். இவ்வாறு, அதிகாரிகள் தெரிவித்தனர்.

 


Page 116 of 506