Urban News

  • Increase font size
  • Default font size
  • Decrease font size
Nagara Seithigal - Municipal Administration

கோபியில் அனுமதியில்லாமல் சுவர் விளம்பரம் செய்பவர்கள் மீது நடவடிக்கை நகராட்சி தலைவர் எச்சரிக்கை

Print PDF

தினத்தந்தி            28.08.2013

கோபியில் அனுமதியில்லாமல் சுவர் விளம்பரம் செய்பவர்கள் மீது நடவடிக்கை நகராட்சி தலைவர் எச்சரிக்கை

 

 

 

 

 

கோபியில் அனுமதியில்லாமல் சுவர் விளம்பரம் செய்பவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்று நகராட்சி கூட்டத்தில் தலைவர் ரேவதிதேவி எச்சரிக்கை விடுத்துள்ளார்.

நகராட்சி கூட்டம்

கோபிசெட்டிபாளையம் நகராட்சி கூட்டம் நேற்றுக் காலை நடைபெற்றது. இந்த கூட்டத்துக்கு, நகராட்சி தலைவர் ரேவதிதேவி தலைமை தாங்கினார். ஆணையாளர் (பொறுப்பு) கிருஷ்ணக்குமார் முன்னிலை வகித்தார்.

கூட்டத்தில் நடைபெற்ற விவாதங்கள் வருமாறு:–

மாரிச்சாமி (அ.தி.மு.க.):– கோபிசெட்டிபாளையம் நகராட்சி பகுதிகளில் நாய்களின் எண்ணிக்கை அதிகரித்து உள்ளது. இதனால், பொதுமக்கள் மிகவும் சிரமப்படுகின்றனர். நாய்களை கட்டுப்படுத்த என்ன நடவடிக்கை எடுக்கப்பட்டு உள்ளது?.

ரேவதிதேவி (தலைவர்):– நாய்களை கட்டுப்படுத்துவதற்காக நகராட்சியின் சார்பில் நாய் பிடிக்கும் வேன் ஒன்று வாங்கப்பட்டு உள்ளது. இந்த வேனின் மூலம் வாரத்தில் 2 நாட்கள் நாய்கள் பிடிக்கப்பட்டு குடும்பக் கட்டுப்பாடு செய்யப்படும்.

அனுமதியில்லாமல் சுவர் விளம்பரம்

செல்வராஜ் (துணைத்தலைவர்):– கோபி–சத்தியமங்கலம் ரோட்டில் அடிக்கடி குடிநீர் குழாய்களில் உடைப்புகள் ஏற்படுகிறது. இதனால், தண்ணீர் வீணாகிறது. எனவே, குடிநீர் குழாய் உடைப்புகள் எப்போது சரி செய்யப்படும்.

தலைவர்:– குடிநீர் குழாய்கள் உடைப்பு விரைவில் சரி செய்யப்படும்.

பெரியசாமி (அ.தி.மு.க.):– கோபிசெட்டிபாளையம் பஸ்நிலையத்தில் உள்ள நகராட்சிக்கு சொந்தமான சுவர்களில் அனுமதியில்லாமல் அரசியல் கட்சியினர் விளம்பரம் செய்து வருகிறார்கள். அனுமதியில்லாமல் சுவர் விளம்பரம் செய்பவர்களுக்கு நகராட்சி நிர்வாகம் சார்பில் அபராதம் விதிக்கப்படுமா?.

தலைவர்– பஸ்நிலையத்தில் நகராட்சிக்கு சொந்தமான சுவர்களில் அரசியல் கட்சியினரின் சார்பில் எழுதப்பட்ட விளம்பரங்கள் அழிக்கப்படும். மேலும், அவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும்.

தீர்மானங்கள் நிறைவேற்றம்

சாமிநாதன் (ம.தி.மு.க.):– கோபி நகராட்சியில் நில அளவை செய்வதற்காக சர்வேயர்களிடம் மனுக் கொடுத்தால் அளவீடு செய்வதில் தாமதம் ஏற்படுகிறது.

தலைவர்:– இதுகுறித்து சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகளின் கவனத்துக்கு கொண்டு செல்லப்பட்டு உள்ளது.

ராஜேந்திரகுமார் (தி.மு.க.):– எங்கள் வார்டில் நடைபெற்று வந்த சில வளர்ச்சித்திட்ட பணிகள் பாதியில் நின்று விட்டது. நிறுத்தப்பட்டுள்ள வளர்ச்சிப் பணிகள் மீண்டும் எப்போது தொடங்கும்?.

தலைவர்:– மணல் தட்டுப்பாடு காரணமாக வளர்ச்சித் திட்டப் பணிகள் பாதிக்கப்பட்டு உள்ளன. நிறுத்தப்பட்டு உள்ள பணிகள் விரைவில் தொடங்கப்படும்.

இவ்வாறு விவாதம் நடைபெற்றது. கூட்டத்தில் விவாதத்திற்கு வைக்கப்பட்டு இருந்த 22 தீர்மானங்களும் நிறைவேற்றப்பட்டன.

இந்த கூட்டத்தில் சுகாதார அதிகாரி ராம்குமார் மற்றும் கவுன்சிலர்கள், அதிகாரிகள் பலர் கலந்துகொண்டனர்.

 

கழிவுநீர் வாகனங்களுக்கு நிபந்தனைகளுடன் கூடிய, உரிமம் திருச்சி மாநகராட்சி அதிரடி முடிவு

Print PDF

தினமலர்              27.08.2013

கழிவுநீர் வாகனங்களுக்கு நிபந்தனைகளுடன் கூடிய, உரிமம் திருச்சி மாநகராட்சி அதிரடி முடிவு

திருச்சி: திருச்சி மாநகர பகுதிகளில், 35 சதவீதம் மட்டுமே பாதாள சாக்கடை திட்டம் செயல்படுத்தப்படவுள்ளது. 65 சதவீத பகுதிகளில் உள்ள வீடுகள், வர்த்தக நிறுவனங்கள் என, அனைத்து வகையான கழிப்பிடங்களிலும் செப்டிக் டேங்க் முறையே பயன்பாட்டில் உள்ளது. செப்டிக் டேங்க்களில் சேகரிக்கப்படும், கழிவு நீர், மாநகராட்சி வாகனங்கள் மற்றும் தனியார் வாகனங்கள் மூலம் அப்புறப்படுத்தப்பட்டு வருகிறது.

தனியார் நிறுவனங்கள் மற்றும் வீடுகளில் இருந்து செப்டிக் டேங்க் கழிவுநீரை வெளியேற்ற, பெரும்பாலும் தனியார் வாகனங்களையே நம்பி இருக்க வேண்டிய நிலை உள்ளது. தேவை அதிகரிப்பு காரணமாக, தற்போது, நூற்றுக்கும் மேற்பட்ட தனியார் கழிவு நீர் வாகனங்கள் இயங்கி வருகிறது.

ஏற்கனவே வட்டார போக்குவரத்து அலுவலகங்களில் பதிவு செய்யப்பட்ட வாகனங்களை, கழிவுநீர் வாகனமாக மாற்றி விடுவதால், வாகனங்களின் எண்ணிக்கையை துல்லியமாக கணக்கிட முடியாத நிலை ஏற்பட்டதுள்ளது.

தனியார் கழிவுநீர் வாகனங்கள் செயல்பாட்டில், அவ்வப்போது பொதுமக்கள் தரப்பில் இருந்து அதிக புகார் வந்தது. கழிவு நீரை இரவு நேரங்களில், குடியிருப்பு பகுதிகளில் திறந்து விடுவது, பகல் நேரத்தில் சுற்றுபுற மக்களுக்கு இடையூறு தரும் வகையில், கழிவு நீரை செப்டிக் டேங்கில் இருந்து வெளியேற்றுவதாகவும் புகார்கள் வந்தது.

மாநகராட்சியின் கழிவு நீர் சுத்திகரிப்பு நிலையத்தில் கழிவுநீரை வெளியேற்றாமல், இஷ்டப்பட்ட இடங்களில் உள்ள திறந்தவெளி சாக்கடைகளில், காலி நிலங்களிலும் வெளியேற்றுவதால், நிலத்தடி நீர் மாசுபடுவதோடு, சுற்றுப்புறச் சூழலும் பாதிக்கிறது.

மேலும் வீடுகளில் செப்டிக் டேங்கை சுத்தம் செய்யும் போது, 50 சதவீத பணிகள் முடிந்த பிறகு, கூடுதல் பணம் கேட்டு தொந்தரவு செய்வது, மறுத்தால் பணியை முழுமையாக முடிக்காமல், அப்படியே போட்டுவிட்டு சென்றுவிடுவது போன்ற செயல்கள் நடந்து வந்தது. தொடர் புகார்கள் காரணமாக, தனியார் கழிவுநீர் வாகனங்களை முறைப்படுத்த மாநகராட்சி முடிவு செய்துள்ளது.

அதன்படி தனியார் கழிவுநீர் வாகனங்களுக்கு நிபந்தனைகளுடன் கூடிய, உரிமம் வழங்கப்படவுள்ளது. உரிமம் பெற்ற வாகனங்கள் மட்டுமே, மாநகராட்சி எல்லைக்குள் இயக்க முடியும். ஆண்டுக்கு, இரண்டாயிரம் ரூபாய் உரிமக் கட்டணம் செலுத்த வேண்டும்.

பஞ்சப்பூர் கழிவுநீர் பண்ணையில், கழிவுநீரை விடுவதற்கு ஒரு நடைக்கு, 30 ரூபாய் கட்டணம் செலுத்த வேண்டும். அனுமதி இல்லாமல் இயங்கும் வாகனங்களுக்கு, முதன்முறை, 5,000 ரூபாய் அபராதமும், 3 முறை அனுமதி இல்லாமல் இயங்கி பிடிபடும் வாகனங்களை, பறிமுதல் செய்யவும் மாநகராட்சி முடிவு செய்துள்ளது.

இதன் ஆரம்பமாக, தற்போது மாநகரில் இயங்கும் தனியார் கழிவு நீர் வாகனங்களை கணக்கெடுக்கும் பணியில், மாநகராட்சி பணியாளர்கள் ஈடுபட்டுள்ளனர்.

 

குற்றங்கள் தடுக்க மாநகராட்சி, போலீஸ்...கைகோர்ப்பு! கண்காணிப்பு கேமரா பொருத்த திட்டம்

Print PDF

தினமலர்              27.08.2013

குற்றங்கள் தடுக்க மாநகராட்சி, போலீஸ்...கைகோர்ப்பு! கண்காணிப்பு கேமரா பொருத்த திட்டம்

திருச்சி: மாநகரில் நடக்கும் குற்றங்களை தடுக்கும் வகையில், முக்கிய இடங்களில் கண்காணிப்பு கேமிராக்களை மாநகராட்சி மூலம் பொருத்தி, அதை போலீஸார் கண்காணிக்கும் திட்டம் செயல்படுத்தப்படவுள்ளது.

வெளிநாடுகள் மட்டுமின்றி, நம் நாட்டிலும் முக்கிய நகர சாலைகள், கட்டடங்களில் நடக்கும் குற்றச் செயல்களை கண்டுபிடிக்க, கண்காணிப்பு கேமிராக்கள் (சி.சி.டி.வி.,) தான் கைகொடுத்து வருகிறது. குறிப்பாக சென்னையில் வங்கி கொள்ளையர்களை அடையாளம் கண்டு, என்கவுன்டரில் சுட்டு கொலை செய்ய காரணமாக இருந்தது, கண்காணிப்பு கேமிராவில் இருந்த பதிவுகள் தான். அதேபோல் ஏ.டி.எம்., கொள்ளையர்களும் பிடிபடுவதும் கேமிரா மூலம் தான்.

கண்காணிப்பு கேமிரா இல்லாத காரணத்தால், பல நகைக்கடை கொள்ளை, வழிப்பறி, செயின்பறிப்பு, டூவீலர் திருட்டு, வீடுகளில் கொள்ளை, ஹிந்து அமைப்பு தலைவர்கள் கொலை போன்ற சம்பவங்களில், துப்பு கிடைக்காமல் போலீஸார் திணறி வருகின்றனர். இதன் பின்னர் தான் கட்டடங்கள், வங்கிகள், நகைக்கடைகள் என, முக்கிய இடங்களில் கண்காணிப்பு கேமிராக்களை பொறுத்த போலீஸார் வலியுறுத்தி வருகின்றனர்.

கடந்த சில ஆண்டுகளுக்கு முன், திருச்சி மாநகரில் உள்ள முக்கிய சாலைகள், சந்திப்புகளில் போக்குவரத்தை சீர்செய்யவும், போக்குவரத்து விதிமீறலை தடுக்கும் வகையிலும், கண்காணிப்பு கேமிராக்கள் பொறுத்தப்பட்டு, போலீஸ் கண்ட்ரோல் ரூமில் இருந்து கண்காணிக்கப்பட்டு வந்தது.

காலப்போக்கில் சரியான பராமரிப்பு இல்லாத காரணத்தால், பொறுத்தப்பட்ட கேமிராக்களில் பல செயலிழந்து விட்டன. இந்நிலையில் பொது கட்டடங்கள், வணிக வளாகங்கள், பொதுமக்கள் உபயோகப்படுத்தும் அனைத்து வகையான கட்டடங்களில். குற்றங்கள் தடுப்பதை தவிர்க்கும் வகையில், கண்காணிப்பு கேமிராக்களை பொருத்த கடந்த டிசம்பர் மாதம், மாநகராட்சி நிர்வாகங்களுக்கு தமிழக அரசு உத்தரவிட்டது.

போலீஸாருடன் இணைந்து, இந்த திட்டம் செயல்படுத்தப்படவுள்ளது. அதன்படி திருச்சி மாநகரில் முக்கிய இடங்களில் கண்காணிப்பு கேமிராக்களை பொருத்துவது தொடர்பாக. போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் இருந்து மாநகராட்சி அலுவலகத்திற்கு கடிதம் எழுதப்பட்டது. இது தொடர்பாக மாநகராட்சி அதிகாரிகள் ஆலோசனை மேற்கொண்டனர்.

போலீஸார் தெரிவிக்கும் முக்கியமான இடங்களில் கண்காணிப்பு கேமிராக்களை பொருத்த, மாநகராட்சி முடிவு செய்துள்ளது.

மாநகராட்சியின், நான்கு கோட்ட பகுதிகளிலும், நவீன ரக கண்காணிப்பு கேமிராக்கள் பொருத்தி, அவற்றை மானிட்டர் மூலம் போலீஸார் கண்காணிக்கும் வகையில் திட்டமிடப்பட்டுள்ளது.

கேமிராக்களை பொறுத்தி, மூன்று ஆண்டுகளுக்கு அவற்றை இயக்கி, பராமரிக்கும் வகையில் டெண்டர் விட மாநகராட்சி திட்டமிட்டுள்ளது. இவற்றுக்கான செலவை சமாளிக்க, தனியார் நிறுவனங்கள், திருச்சி மாநகரில் அரசு விதிகளுக்கு உட்பட்டு விளம்பரங்களை செய்து கொள்ள அனுமதி வழங்கப்படவுள்ளது. தனியார் நிறுவனங்கள் தேர்வு செய்து கேட்கும் இடங்களில் விளம்பர செய்ய, கலெக்டர் அனுமதியுடன் உரிமம் வழங்கப்படவுள்ளது.

திருச்சி மாநகராட்சியின் அவசர கூட்டம் வரும், 29ம் தேதி காலை நடக்கிறது. இந்த கூட்டத்தில் கண்காணிப்பு கேமிரா பொருத்துதல், தனியார் நிறுவனங்களுக்கு விளம்பரம் செய்ய அனுமதித்தல் குறித்த தீர்மானத்தின் மீது விவாதம் நடக்கவுள்ளது.

கூட்டத்தில் தீர்மானம் நிறைவேறிவிட்டால், திருச்சி மாநகரின் முக்கிய சாலைகள், குடியிருப்பு பகுதிகள் என, அனைத்தும் போலீஸாரின் கண்காணிப்பு வளையத்திற்குள் வந்துவிடும். அதன் பிறகு குற்றச் செயல்கள் குறையும் வாய்ப்பு அதிகம் உள்ளது என, போலீஸார் நம்பிக்கை தெரிவித்துள்ளனர்.

 


Page 118 of 506